Saturday, March 20, 2004

சுவாலை

- ஞானம் -

பானுதேவன் தன் கொடிய கதிர்களால் புவி மக்களின் பசிய உடம்பைக் கருக்கி விளையாடிக் கொண்டிருந்தான். வாயுதேவன் அப்பக்கம் எட்டிப் பார்க்கவே தயங்கி எங்கோ ஓடி ஒழிந்து விட்டான். வெம்மை தாங்காமல் பறவைகள் கூட அகப்பட்ட அரும்பொட்டு நிழல்களில் பதுங்கிக் கொண்டன.

புனிதா காலையிலேயே ஊறவைத்த, கணவனதும் குழந்தைகளதும் அழுக்கான உடுப்புக்களைக் கிணற்றில் நாலு வாளி தண்ணீர் அள்ளித் தொட்டியுள் ஊற்றி, அவற்றை அலசிக் கழுவிக் கொடியில் உலர்த்திவிட்டு வீட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தாள். குழந்தை முகுந்தன் வயிறு நிறையப் பால் குடித்த திருப்தியில் உள்ளே நல்ல நித்திரை.

'நேர்சரி' போகத் தொடங்கியிருக்கும் முரளி அத்திண்ணையில் குப்புறப்படுத்துக் கொப்பியில் கலர்ப் பென்சில்களால் தன் மனதுக்குள் எட்டியவற்றைச் சித்திரம் என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருந்தான்.

தினமும் குளிக்கும் நீர் வாய்க்கால் வழியே வந்து திண்ணயையொட்டி வளர்ந்துள்ள வேப்பமரத்தின் கால்களைச் சுற்றிவருவதால் இலைகள் உதிராமல் குளிர்மையாக மரம் இருந்தது.

வெப்பத்தின் களைப்புக்கு அந்தத் திண்ணைச் சுவரில் சாய்ந்திருப்பது புனிதாவுக்கு இதமாக இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு அவ்வூர்ப் பாடசாலையில், நகரப்பகுதியில் இயங்கிவரும் 'பெண்கள் அமைப்பு" நடத்திய பெண்கள் முன்னேற்றக் கருத்தரங்கிற்கு அவளும் சென்றிருந்தாள். பிரதான பேச்சாளர் முன்வைத்த கருத்து புனிதாவின் மனதில் ஆழமாகப் பதித்திருந்தது. அது இன்னும் அவள் காதில் ஒலிப்பது போல......

'ஆணாதிக்க சமூக அமைப்பில், குடும்ப நிறுவனத்தில் பெண்ணிற்குரிய கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியைச் சமமாக, உயிரும் உணர்வுகளுமுள்ள சகமனுஷியாக நடத்தாமல், வீட்டு வேலைக்கார அடிமைபோல, பிள்ளைபெறும் யந்திரம்போல நடத்தும் ஆண் நாயகப்போக்கு சமுதாயத்திலிருந்து ஒழியும்வரை, ஒழிக்கப்படும்வரை விடிவேயில்லை. திருமணம் பேசப்படும்போது பெண்ணின் விரும்பம் மதிக்கப்படுவதில்லை. அவள் விருப்பத்துக்கு மாறாகவே செய்யப்படுகிறது. இன்று நிலவிவரும் சமூக அமைப்பில் திருமண வாழ்க்கை குடும்பம் என்பவை பற்றிய கருத்தாங்கங்கள் மாற்றமடையாவிடில், சமூக அமைப்பு மாற்றப்படாதவரை பெண்களுக்கு விடிவேயில்லை".

தன்னுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற சத்திய வாசகம் என ஏக்கத்துடன் அவள் விட்ட பெருமூச்சு உஷ்ணத்துடன் கரைந்தது.

புனிதா, க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்றுவிட்டாள் என்பதை அறிந்தபோது பாராட்டுத் தெரிவிப்பதற்குப் பதிலாக 'படித்தது இனிப் போதும்' என்று பெற்றோர்கள் கூறினார்.

'அவள் கெட்டிக்காரி படிப்பைத் தொடரட்டும்' என ஆசிரியர்கள் வலியுறுத்தியபடியால் ஒப்பாசாரமாக உயர் தரம் ஓராமாண்டில் தொடர்ந்து படிக்க அனுப்பியபோதியலும் தாயும் தகப்பனுமாகக் 'குசுகுசு'வெனப் பேசித் தமக்குள்ளே ஒரு கணக்குப்போட்டுக் கொண்டனர்.
.
'இவள் பெரிய படிப்புப் படிச்சால் அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடிக் கட்டிக் குடுக்க எங்களிடம் என்ன வசதியிருக்கு? இளைவளும் பெரியவாகிற வயதுக்கு வந்து கொண்டிருக்கிறாள். இவளின்ரை காரியத்தை இழுபடவிட்டால் பிறகு இருகுமரையும் எப்படிச் சுமத்து?

புனிதா உயர்தரம் இறுதிப்ப பரீட்சை எழுதுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே உறவுக்காரப் பையன் ஒருவனைக் கூட்டி வந்து காட்டி, அடுத்த முகூர்த்தநாளில் இவளின் விருப்பத்தைக் கேளாமல் அவனைத் தாலிகட்ட வைத்தனர். பாவம் புதனிதாவின் தாய் தகப்பனுக்கு மகள் மீது பாசமில்லாம் இல்லை. மண் வெட்டியையும் தோட்டத்தையும் நம்பிப் பிழைக்கிற குடும்பம், படிப்பறிவுமில்லை, எத்தனையோ கோவில்களைச் சுற்றி வந்தும் ஒரு ஆண்குழந்தை கூட அவர்களுக்குப் பிறக்கவில்லை. பெற்றது இரண்டும் பெட்டைக் குஞ்சுகள். அதனால் இந்த அவசரமும் எரிச்சலும்!

இறுக்கமாக மிச்சம் பிடித்துச் சேகரித்த பணத்தில் மகளின் கழுத்துக்கும் கைகளுக்கும் நகைகளைப் போட்டுக் கலியாணம் முடித்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிவிட்ட திருப்தி அவர்களுக்கு!

திருமணம் முடிந்து ஒருவாரம் கழியும் முன்பே 'சிவனேசா, இது சிறிய வீடு நாலுபேருக்கும் காணாது. அதனால் நாங்கள் இனி உன் அக்காவீட்டில் இருக்கப்போகிறோம்" எனச் சொல்லிவிட்டு அவளின் பெற்றோர் தமது பெட்டி படுக்கைகளுடன் புறப்பட்டுப் போய் விட்டனர்.

முன் அறிமுகமோ பழக்கமோ இல்லாதவனுடன் படுத்தெழும்புவது ஆரம்ப நாட்களில் அருவருப்பாயிருந்த போதிலும் புவனாவின் இளமையின் உணர்வு அவனை ஏற்றுச் சகித்துக் கொள்ளச் செய்தது.

அயல் வீட்டுப்பெண்கள் பகல் வேளைகளில் அவன் இல்லாத நாட்களில் புதுப் பெண்ணைப் பார்க்க வந்த சாட்டில், அவனைப் பற்றிச் சொன்னவை அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அழுகையையும் ஏற்படுத்தின. எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திப் போட்டு காவாலியாக ஊர் சுற்றித் திரிந்தவனாம். அவனின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல் அவனது தாய் தகப்பன் ஒரு ஜஸ்கிறீம் கடையில் எடுபிடி வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தவையாம்.

'அவன் போக்குச் சரியில்லை. குடித்துவிட்டு வருவதால் வேலை ஒழுங்காக செய்வதில்லை' என சில மாசங்களிலேயே கடை உரிமையாளர் தகப்பனிடம் வந்து முணு முணுக்கத் தொடங்கி விட்டாராம்.

ஒரு கால் கட்டுப் போட்டால் சரியாகி விடுவான். வாறவள் திருத்திப் போடுவாள்' என அவனின் தாய் அடியெடுத்துக் கொடுக்க, தகப்பன் புனிதாவின் பெற்றோரிடம் பேசி, அவசரம் அவசரமாக செல்வி குமுதா திருமதி சிவனேசனாக்கப்பட்டிருக்கிறாள்.

'பொறாமை பிடித்த சனங்கள் அப்படி இருக்காது" என எண்ணி மனதைத் தேற்கிக் கொண்டாள்.

'புனிதா! நீர் நல்ல வடிவு. நாள் முழுவதும் ரோஜாமாதிரி உம்மைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்." என அவன் அவளைப் புகழ்ந்தபோது அவள் கன்னங்கள் ரோஜாவாகின.

'எனக்கு அவனின் கீழ் வேலை செய்யப் பிடிக்கேலை. இனி சுயதொழில் செய்து என் செல்லத்தைச் சந்தோஷமாக வைக்கப் போறன்" அவளின் கன்னத்தை வருடியபடி சொன்னான் சிவனேசன்.

'சுயதொழில் செய்ய கொஞ்சம் முதல்தேவை. கைநிறையச் சம்பாதிக்கலாம். உமது நகைகளைத் தந்தீரெண்டால் இதுமாதிரி இருமடங்கு நகைகளை மூண்டுநாலு மாசத்தில் செய்திடலாம்" அவன் தயங்கித் தயங்கி நைஸாகக் கேட்டான்.

அவனது சுயதொழில் ஆர்வம் சரியெனக் கருதிய புனிதா தனது சீதமான நகைளைக் கழற்கிக் கொடுத்தாள்.

அன்று மாலையே தகரத்தினால் செய்யப்பட்ட ஜஸ்கிறீம் உற்பத்திக்காரரிடம் வாங்கி நிரப்பிக் கொண்டு நாளைக்கு காலையிலிருந்தே என் வியாபாரத் திறமையைக் காட்டுறன் பார் புனிதா".

கொள்முதல் கடனைக் கொடுத்து விட்டு மறுநாள் மாலை 180 ரூபாவை அவளிடம் கொண்டு வந்து நீட்டியபோது அவளுக்குப் பூரிப்பாக இருந்தது. 'நாளைக்கு இன்னும் டபிளாக்கிக் காட்டுறன் பாரும்". சாப்பிட்டு கொண்டே சவால் போலக் கூறினான்.

அடுத்தநாள் வீடுவரும்போது ஜஸ்கிறீம் வண்டி தள்ளாடிக் கொண்டு வந்து.

'எடியே எடுத்து வை சோத்தை' மதுபோதையில் அவன் வாய் குழறியது. 70 ரூபாவை எடுத்து நீட்டினான்.

'என்ன! குடித்துவிட்டு வந்திரக்கிறியள்? ஏன் இந்த புதுப்பழக்கம்?"

'பகலெல்லாம் உழைத்துக் களைத்த அலுப்பில் குடித்தால் உனக்கென்னடி. குடி ஒண்டும் எனக்குப் புதிசில்லையடி"

புனிதாவின் உள்ளத்தில் கோபமும் ஏமாற்றமும் கொப்பளித்தன.

சாப்பாட்டைத் தட்டில் எடுத்து வைத்துவிட்டு அவள் போய்ப் படுத்து விட்டாள்.

அவள் சாப்பிட்டாளா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் சோற்றை அள்ளி வயிற்றில் அடைந்தவிட்டு, அவளருகே வந்து படுத்தவன் அவள்மீது கையைப் போட்டு இறுக்கி அணைத்தான்.

அவள் திமிறினாள்.

உடம்பைச் சுற்றிய பாம்பு அதன் வெறியைக் கக்கிய பின்பே பிடியைத் தளத்தியது.

மறுநாள், அதற்கும் மறுநாள் என அவள் கைக்கு வருவது 50,60 ரூபா மட்டுமே என்றாகியது.

ஒரு நாள் காலை வெறியில்லாமல் அவன் இருந்தபோது வருமானம் போதாததால், தனது படிப்புக்கேற்ற வகையில் தானும் ஏதாவது தொழில் தேடட்டுமா என அவனைக் கேட்டாள்.

'நீ படித்ததை உன்னோடை வைச்சுக் கொள். தொழில் பாக்கிறனெண்டு சொல்லிக்கொண்டு ஊர் மேய்ந்து திரிய வேண்டாம். பொம்பிளை உழைச்சு வீடு நிறையாது? நான் உழைக்கிற காசை வைச்சுக் சமாளிக்சுக் கொண்டு வீட்டிலே அடங்கியிரு. வீட்டு வேலையைப் ஒழுங்காய்ப் பார்"

அவனை எதிர்த்தால் அடி உதைகளையே வேண்டிக் கட்டிக்கொள்ள நேரிடும் என்பதால் அவள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

பாடசாலை நாட்களில் கவிதை சிறுகதை என எழுதிப் பாராட்டுப் பெற்றவள். தனிமையாகப் பொழுதைப் போக்க படிப்பது எழுதுவது எனத் தொடங்கி எதியவற்றை முடிக்க முடியாமல் தலைசுற்றும் வாந்தியும் அடிக்கடி குறுக்கிட்டன.

அடிப் பெட்டிக்குள் அவற்றைப் போட்டு மூடிவைத்துவிட்டுப் வீடு துப்பரவாக்கல், சமைத்தல், பாத்திரம் கழுவுதல், உடுப்புத் தோய்த்தல் என்பவற்றோடு கர்ப்பமாதல், குழந்தை பெறுதல், பாலூட்டல், பராமரித்தல் என்ற வேலைகளும் அவளை இறுகிப் பிடித்துக் கொண்டன.

மாலையானதும் அவனது வழமையான தள்ளாட்டம். 'எடியே! சோத்தைப் போடடி? உறுமல் அது முடிய 'படுக்க வாடி பலவந்தமான கர்ச்சனை.

புனித 21 வயதுக்கிடையிலேயே இருபிள்ளைகளைப் பெற்று காய்ந்த ஒடியல் போலானாள்.

பல சரக்குக் கடையில் அரிசிவாங்கச் சென்ற போதுதான் அந்த விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தாள். மாவட்ட கலாச்சாரப் பேரவை சிறுகதைப் போட்டி ஒன்றை நடந்துவதற்காக விளம்பரம் செய்திருந்தது.

மனதில் ஒரு ஆசை முளையிட்டது.

அடிப் பெட்டியில் போட்டிருந்த நிறைவு செய்யப்படாத கதையொன்றை எடுத்து அதைப்பூரணப்படுத்தி அனுப்புவதற்காக அவள்பட்ட பாடுகள்............

அவள் எழுதிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்த குழந்தை முகுந்தன் பாலுக்கழுதது. பால்கொடுத்து அதனைத் தூங்க வைத்து விட்டு எழுதத் துவங்கிய போது, எழுதிவைத்த தாள்களை மூத்தமகன் முரளி எடுத்துக் கசக்கிக் கப்பல் செய்து கொண்டிருந்தான். எரிச்சலில் அவன் முதுகில் இரண்டு வைக்க அவன் வீரிட்டழ திடுக்கிட்டெழுந்து தத்தி ஓடி வந்த சின்னன் கதை எழுதி வைத்திருந்த ஏனைய தாள்களிலும் சிறுநீர் கழித்துவிட... அவள் ஏசி உலுக்க இரண்டும் வீரிட்டுக் கதறிக் கச்சேரி பண்ணின. அவர்களைச் சமாதாப்படுத்துவதே போது போது மென்றாகிவிட்டது.

இனி,
.
சைக்கிளின் தள்ளாட்டம்

'எடியே! சோத்தைப் போடடி'
'கெதியாய்ப் படுக்கவாடி'
அடுத்த நாள்
காலைச் சாப்பாடு முடித்து ஜஸ்கிறீம் சைக்கிளை அனுப்பி விட்டுக் குழந்தைகளைக் குளிப்பாட்டி உணவூட்டி விளையாட விட்டுவிட்டு அவசர அவசரமாக உடுப்புகளைத் தோய்த்து உலரவிட்டபின் எழுதத் தொடங்க உட்கார்ந்தபோது....

முகந்தன் காற்சட்டையை நனைத்துப்போட்டு வீரிட்டுக் கதறினான். ஓடிப்போய் அவனைத்தூக்கிக் கழுவி உடுப்புமாற்றிப் பவுடர்போட்டுத் தொட்டலில் கிடத்தி ஆட்டிவிட்டுப் பேணையைத் தூக்கியபோது, வீட்டுச் சொந்தக்காரன் வாடகைப் பணத்தைத் தருமாறு தூஷண வார்த்தைகளால் அபிஷேகித்துத் தலைகுனிய வைத்தான்.

அவனைக் கெஞ்சி, தவணை சொல்லி அனுப்புவதே பெரும்பாடாகி விட்டது.

'ஏன், உன்ரை புருசன் உழைக்கிற காசு முழுவதும் குடிச்சுத் தூலைக்கிறாரோ? இல்லாட்டி வேறு வைப்பாட்டி இருக்கோ? வீட்டுக்காரன் என்ன கேள்வியெல்லாம்... சீ........... தூஷணம்கூடம் பேசிவிட்டுப் போறான். அயலட்டைச் சனம் சிரிக்குது"

பக்கத்து வீட்டு பார்வதிக் கிழவி விண்ணாணமாக விசாரித்து இன்னுமின்னும் எரிச்சலை மூட்டிவிட்டுப் போனாள்.

'இந்தக் குடிகாரனோடு நரக வாழ்க்கை வாழவேணுமென்பது என்ரை தலையெழுத்தாய்ப் போச்சு' வெளியே சொல்ல முடியாமல் அவள் மனம் குமைந்தது. அன்றும் கதையை எழுதி முடிக்க முடியவில்லை.

மாலையில் வழமைபோல சைக்கிள் தள்ளாட்டம்.

'பசி வயித்தைக் கிள்ளுது சோத்தைப் போடடி"

சோற்றுத் தட்டை அவன் முன்னே வைத்துவிட்டு வாடகைக் காசுக்காக வீட்டுக்காரன் வந்து ஏசிப்போனதைச் சொன்னாள் புனிதா.

'வாடகை கேட்க வந்தவனோ உன்னோடை சரசமாட வந்தவனோ?" வாய் உழற வார்த்தைகளைக் கொட்டினான்.

'சே! எளிய மனிசா! என்ன சொல்லுறாய்? வாடகை காசு கொடுக்க வக்கில்லை. உனக்கு வீடென்ன குடும்பமென்ன?" சீற்றத்துடன் புதிதா கத்தினாள்.

சாப்பாட்டுத் தட்டை வீசி எறிந்து விட்டுத்துள்ளி எழுத்தவன் அவள் கன்னங்களிலும் உடம்பிலும் கோபம் தீரும்வரை அறைந்தான். குழந்தைகள் வீரிட்டுக் கத்தின.

அவனது அட்டகாசத்தைக் கேட்ட அயலவர்களின் தலைகள் வேலிக்கு மேலாய் எட்டி விடுப்புப் பார்த்தன.

குழந்தைகளை அணைத்தபடி அவள் இரவு முழுவதும் விம்மிக் கொண்டேயிருந்தாள்.

நிறைவெறியில் அவன் உடுத்திருந்த சாரம் கழன்றது கூடத் தெரியாமல் அவன் உறங்கிப் போனான்.

காலையில் எழுத்து பார்த்தபோது சைக்கிளுடன் அவன் நேரகாலத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டான்.

விசுக்கோத்தையும் பாலையும் கொடுத்துப் பிள்ளைகளைச் சமாளித்து விட்டு உடம்பு வலிதீர அவள் நோ எண்ணெய் தடவி விட்டுப் படுத்துக் கிடந்தாள்.

மாலையில் சைக்கிள் நிதானமாக வந்து நின்றது. தள்ளாட்டமில்லை.

'முரளி நான் வெளியே சாப்பிட்டு விட்டன் உங்களுக்கு இடியப்பப் பார்சல் வாங்கியிருக்கு, 300 வைச்சிருக்கு நாளைக்கு வீட்டு வாடகையைக் குடுத்திடச் சொல்லு"

அவன் போய்ப் படுத்து உறங்கி விட்டான்.

இலக்கியப் போட்டி இறுதிநாளுக்கு இன்னும் மூன்று தினங்களே இருந்தன! எப்படியும் நாளைக்கு எழுதி முடித்து அனுப்புவதென்ற வைராக்கியத்துடன் குழந்தைகளை அணைத்தபடி அவளும் உறங்கிவிட்டாள்.

ரொட்டியையும் தேநீரையும் காலை உணவாக அவனுக்குக் கொடுத்து அனுப்பி விட்டு, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, முரளியை அயலிலுள்ள நேர்சரிக்கு அனுப்பிவிட்டு முகுந்தனுக்கு சோற்றைக் கரையல் செய்து ஊட்டித் தொட்டிலில் போட்டுவிட்டு, மத்தியானத்துக்கு முன்பே கதையை எழுதி முடித்துவிட்டாள். திரும்பித்திரும்பி இருதடவைகள் படித்துப் பார்த்தாள்.

மனதிற்குத் திருப்தியாக இருந்தது. அன்றே தபாலில் சேர்த்துவிட்டாள்.

'அம்மா, தபால் அங்கிள் வாசலில் நிற்கிறார்"

கிறுக்கிக் கொண்டிருந்த கலர்ப் பென்சில்களை வீசி எறிந்து விட்டுப் படலையை நோக்கி முரளி ஓடிச் சென்ற போதுதான் அவரின் நீண்ட சிந்தனை கலைந்தது.

வானத்தில் மப்பிட்ட மேகக் கூட்டங்களைக் கண்டதால் போலும் எங்கோ ஒரு குயில் கூக்கூ.........கூக்கூ...... என்று குதூகலித்தது.

வேப்பமரத்தில் அதுவரை முடங்கியிருந்த காகங்கள் கூட 'காகா" என்றபடி சிறகடித்துப் பறந்தன!

முரளி கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படித்தபோது அவள் உள்ளத்தில் மகிழ்ச்சிப்பூ விரிந்து நிறைந்தது!

'முரளி! உன்ரை அம்மாவுக்கு முதற் பரிசெடா கண்ணே! என அவனை அணைத்து உச்சியெல்லாம் முத்தமிட்டுத் தனது ஆனந்தத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

அன்று மாலை வேதாளம் தள்ளாடிக் கொண்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நின்றது.

'சோத்தைப் போடடி"

தட்டில் சோறு கறியைப் பரிமாறி வைத்தாள்.

அருகே உட்கார்ந்தபடி தனக்குப் பரிசு கிடைத்திருக்கும் செய்தியையும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதனைப் பெற்றுக் கொள்வதற்காகப் பட்டணத்துக்குப் போக வேண்டும் என்பதையும் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

'அதென்னடி பரிசு கிரிசென்று அலட்டுறாய்! அக்கறையின்றி உளறியவன் அடுத்துக் கேட்டான்.

'காசும் தருவாங்களோ?"

'ஓம்' என்றாள் அவள்.

'எவ்வளவு'

'அது தெரியாது

அப்படியே, அப்பசரி ஞாயிற்றுக் கிழமைதானே! பார்வதிக் கிழவியிடம் குழந்தையைப் பாத்துக்கொள்ளும்படி விடு: நீ மூத்தவனைக் கூட்டிக் கொண்டுபோ.

பக்குவமாக் காசை வாங்கிக் கொண்டு வா: காசு கவனம்" வெறியையும் மீறிக் கொண்ட அவனுக்குள் ஒரு சிரிப்பு!

விழா மண்டபத்தின் வாசலை நெருங்கியபோது, அது கலியாணக் களை கொண்டிருந்தது.

வாசலில் பழக்குலையோடு வாழை மரங்கள்!

மாவிலை தோரணம்!

கலாச்சாரப் பெருவிழா என்ற பதாகை. ஒலிபெருக்கியில் இதமான நாதஸ்வர இசை.

வாசலில் அழகிய கோலம் நிறைகுடம். சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்கும் இரு இளம் பெண்கள். அந்தப் பெண்களிடம் அழைப்பிதழைக் காட்டினாள்.

அவர்களில் ஒருத்தி புனிதாவைக் கூட்டிச் சென்று முதல்வரிசை ஆசனத்தில் இருத்தினாள்.

மேடையில் வரிசையாக இருபுறமும் பூஞ்சாடிகள். மண்டபத்துக்கு வண்ண வண்ணமாகக் கடதாசிக் சோடனைகள்! பலூன்கள்!

பிரதம விருந்தினரான மாவட்ட மந்திரி நேரத்துக்கே வந்துவிட்டதால், அழைப்பிதழில் குறிப்பிட்டபடி பகல் 10 மணிக்கே மங்கள விளக்கேற்றலுடன் விழாத் தொடங்கியது.

அரசாங்க அதிபர் வரவேற்புரை, பிரதம அதிதிஉரை சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சி ஆரம்பமானது.

'சிறுகதை - முதல் பரிசு திருமதி புனிதா"

அறிப்பாளரின் கம்பீரக்குரல் மண்டபமெங்கும் ஒலித்தது! இரு இளம் பெண்கள் அவளருகில் வந்து, மேளம் கொட்ட அவளை மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

புனிதாவுக்கு ஆகாயத்தில் பறப்பது போன்ற ஆனந்தப் படபடப்பு! சரஸ்வதி விருது, பரிசுப் பணம் ஜயாயிரம் ரூபா சான்றிதழ், பொன்னாடை, பூமாலை இவற்றைப் பெற்றுக் கொண்டபோது சபையில் எழுந்த கரகோஷப் பாராட்டு அவளைச் சிலிர்க்க வைத்தது!

மேடையிலிருந்து மகிழ்ச்சிபொங்க இறங்கிவந்து அவள் கீழே உட்கார்ந்து போது அவள் மகன் முரளி அவளது காதுக்குள் அச்சா அம்மா! கெட்டிக்காரி எனக்கு சரியான புழுகம்..........! 'என்றெல்லாம் தன் பிஞ்சு மொழியில் தாயை மேலும் குளிர வைத்தான்.

மகிழ்வால் அவள் பூரித்தாள்.

'அம்மா நான் இந்தச் சரஸ்வதி சாமியைப் படிக்கிற மேசையில் வைச்சு ஒவ்வொரு நாளும் விளக்குக் கொழுத்திக் கும்பிடப் போறன்". அந்தச் சின்ன உள்ளமும் கற்பனையில் மிதந்தது.

சரஸ்வதி தோற்றத்திலான அவ்விருதைத் தாயிடமிருந்து வாங்கி உற்று உற்றுப் பார்த்து ஆசையோடு அதனைத் தொட்டுத் தடவிக் கொண்டிருந்த அந்த பிஞ்சு உள்ளத்தின் பெருமை, புனிதாவைப் பரவசப்படுத்தியது.

பஸ்பிடித்து வீடுவந்து சேர 2 மணியாகிவிட்டது. இனித்தான் சமைக்க வேண்டும்.

திண்ணையில் சிகரெட் புகைத்தபடி இருந்த சிவனேசன், அவள் கொண்டு வந்த பையைப் பறித்துத் துளாவினான்.

'சரஸ்வதி விருது", சான்றிதழ், ஆகியவற்றை அலட்சியமாகத் திண்ணையில் போட்டுவிட்டு என்வலப்பை அவசரமாகப் பிரித்துப் பார்த்து 'ஓ! ஜயாயிரமோ நல்லதாய்ப்போச்சு! என்ரை வியாபாரத்தை விஸ்தரிக்க எனக்கு அவசரமாகத் தேவை" என்றபடி தனது சட்டைப் பையுள் திணித்துக் கொண்டான்.

'கெதியாய்ச் சமை நான் வெளியே போட்டுவாறான்" அவன் சைக்களில் புறப்பட்டுவிட்டான்.

திண்ணை அருகேயிருந்த வேப்பமரத்திலிருந்த ஒரு காகம் அனுங்கியபடி தொப்பெனக் கீழே விழுந்தது. அதைத் தூரத்தி வந்த கொழுத்த அண்டங்காகம், அதன் ஈனஸ்வரக் கத்தலையும் பொருட்படுத்தாமல் தடித்த கருஞ் சொண்டுகளால் கொத்திக் கொத்தி...........

முரளி அதைப்பார்த்துப் பயத்தால் சரஸ்வதி சிலையையும் சான்றிதழையும் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.

புனிதா உடுப்பை மாற்றிக் கொண்டு சமைப்பதற்காக அடுப்பை மூட்டினாள்.

'ஆணாதிக்க சமூக அமைப்பில் குடும்ப நிறுவனத்தில் பெண்ணின் கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியை உயிரும் உணர்வுள்ள சக மனுஷியாக அல்லாமல், வீட்டு வேலைக்கார அடிமைபோல நடத்தும் ஆண்நாயகப் போக்கு சமுதாயத்திலிருந்து ஒழிக்கப்படும்வரை பெண்களுக்கு விடிவேயில்லை."

கருத்தரங்கில் கேட்ட குரல் புனிதாவின் காதுகளில் மந்திரம் போல் மீண்டும் மீண்டும் ஒலித்தது!

அந்த அடுப்பு மெல்ல மெல்ல மூண்டு சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.

- ஞானம் -
நன்றி - சூரியன்.கொம்

Saturday, March 06, 2004

எதிர்வினை

படுதலம் சுகுமாரன்

அர்ச்சனா, வீட்டுக்குள் நுழையும்-போதே, ராம்பிரசாத்தின் கழுகுப் பார்வை, அவள் கொண்டு வந்த துணிப்பை மீது விழுந்தது. அவள் முழுவதுமாக உள்ளே வருவதற்குள் கேள்வி தோட்டா சீறியது.

""என்ன பையில?...''

""புடவை'' என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள் அர்ச்சனா.

பின்னாடியே விரட்டிக் கொண்டு வந்தான்.

""யாருக்கு?...''

""இதென்ன கேள்வி.... புடவையை யார் கட்டுவாங்க?...''

""இந்த எதிர்கேள்வியெல்லாம் வேண்டாம். கேட்டதுக்கு பதில். இப்ப தீபாவளியுமில்ல, புத்தாண்டுமில்லை. பொங்கலும் முடிஞ்சிருச்சி. ஒரு விசேஷமுமில்லாத நேரத்துல புடவை எதுக்கு?...''

என்று கேட்டபடி, பையிலிருந்து புடவையை எடுத்து, விலை வில்லையை பார்த்தவன் கண்களை விரித்தான்.

""எழுநூற்றைம்பதா?...'' என்று பாய்ந்து அவளை மறித்துக் கொண்டு நின்றான்.

""எட்டு மணி நேரம் ஆபீஸ்ல மாரடிச்சுட்டு வந்து நிக்கறேன். களைச்சுப் போய் வந்திருக்கேன். புடவை மாத்திகிட்டு, முகம் கழுவிகிட்டு வந்துடறனே....

அவசரமா ஒண்ணுக்கு போகணும் நான்...''

கோபமும் வெறுப்பும் பின்ன, கணவனை ஏறிட்டு கேட்டுக் கொண்டு உள் அறைக்குள் போனாள் அர்ச்சனா.

"என்ன நினைச்சுகிட்டுருக்கிறாள் அவள். மாசக் கடைசி. பெட்ரோலுக்கும் காசில்லாமல், நானே கம்பெனிக்கு சைக்கிள்ல போய்ட்டு வந்து-கிட்டிருக்கேன். ஏதுங்கெட்ட நேரத்துல இவளுக்கு எழுநூற்று ஐம்பது ரூபாய்ல புதுப்புடவை கேட்குதோ.... வரட்டும்...''

என்று நாற்காலி முனையில் உட்கார்ந்து, பதட்டமாய் நகம் கடித்தான் பிரசாத்.

அஞ்சு நிமிஷம் கழித்து, முகம் அலம்பி, புடவை மாற்றிக் கொண்டு டீ போட்டுக் கொண்டு வந்த அர்ச்சனா.... ஒரு கோப்பையை ராம்பிரசாத்துக்கு கொடுத்தாள்.

அதை அவன் வாங்காமலே,

""இதுக்கு முதல்ல பதில் சொல்லு...'' என்று துணிப்பையைக் காட்டினான்.

""என்னங்க.... ஒரு புடவையை வீட்டுக்குள்ள கொண்டு வந்ததுக்கு இவ்வளவு கலாட்டா பண்ணணுமா?... கொஞ்சம் பெருந்தன்மையா நடந்துக்கக் கூடாதா! நானே சொல்ல மாட்டேனா.... பூனைக்குட்டியை கழுத்தைப் பிடிச்சுத் தூக்கினாப்ல நெருக்கறீங்களே.....''

""லுக்... இந்த பெருந்தன்மைங்கிற வார்த்தையை உடைப்பில போடு. உங்க வம்சத்துக்கே பொருந்தாத வார்த்தை அது. உங்கப்பா கல்யாணத்துக்கு முன்ன இதைத் தர்ரேன், அதைத் தர்ரேன்னு வாக்கு கொடுத்துட்டு, கழுத்துல தாலி ஏறினதும் கையை விரிச்சிட்டான். கடைசில, பொண்ணு வேலைக்குப் போகுது. மாசம் எண்ணாயிரம் வீதம், வருஷத்துக்கு போனசும் சேர்த்து லட்சத்துக்கு மேல சம்பாதிக்கிறாளே.... இதுக்கு மேல என்ன வேணும் மாப்பிள்ளை?'னு அல்வா கொடுத்தாரு. உங்க குடும்பத்து பெருந்தன்மை அது... எனக்கு பெருந்தன்மை பத்திச் சொல்ல வந்துட்டியா?...''

""எங்க குடும்பத்தை ஏன் இழுக்கறீங்க. எங்க அப்பா சொன்னதுல என்ன தப்பு. நான் சம்பாதிச்சுத் தரலையா என்ன?''

""நல்லா சம்பாரிச்சே.... சம்பளப் பட்டியல்லதான் கணக்கு எட்டாயிரம். கைக்கு வர்றதென்னவோ... பாதிகூட இல்லை....''

""மீதியை நான் விழுங்கறேனா... அல்லது எங்க குடும்பத்துக்கு அனுப்பறேனா.... சம்பளம் வாங்கினதும் முதல் காரியமாய் நீங்கள் வாங்கின மோட்டார் சைக்கிளுக்கும், உங்க பேர்ல போட்டிருக்கிற இன்சூரஸ் பாலிசிக்கும் உங்க பேர்ல வங்கியில உள்ள ரெகரிங் டெபாசிட்டுக்கும் தவணை கட்டிட்டுத்தானே வீட்டுக்கு வர்ரேன்.... அதெல்லாம் என்னவாம்?...''

""அது ஒண்ணு போதுமா.... மாசா மாசம் பவுடருக்கும், பொட்டுக்கும், வளையல் அந்த தைலம் பவுடர். இந்த எண்ணெய்னு கணிசமா ஒரு தொகை போய்கிட்டிருக்கே. மாசத்துக்கு ஒரு ஜோடி செருப்பு, வருஷத்துக்கு நாலு வானிடிபேக், பண்டிகை தப்பாம புதுப்புடவை... போதாக்குறைக்கு வயித்தெரிச்சல்... எளநி சாப்பிட்டேன். வெயில் தாங்கலை... கூல் ட்ரிங்ங்ஸ் சாப்பிட்டேன், டயம் ஆயிருச்சு ஆட்டோவுல போனேன்னு தினசரி பேட்டா வேற....''

அவன் அடுக்கிக் கொண்டே போக, அர்ச்சனாவுக்கு அவமானமாக இருந்தது.

""என்னங்க பண்றது. நான் வீட்டோடு இருக்கிறவளாயிருந்தால் இந்த செலவுக்கு அவசியமே இருக்காது. தலையெழுத்து. வேலைக்கு போக வேண்டியிருக்கு. நாலுபேருக்கு மத்தியில வேலை செய்யும்போது கொஞ்சம் நாகரீகமாய் இருக்க வேணாமா....''

""யார் வேணாம்னது. அதுக்காக மாசம் ஒரு புடவை வாங்கணுமா? டி.வி.ல நியூஸ் வாசிக்கிறவகிட்டகூட இத்தனை வெரைட்டி இருக்காது. ஆஃப்ட்ரால், குமாஸ்தா வேலை பாக்குற உனக்கு பதினெட்டு புடவை...''

அர்ச்சனா வெடித்தாள்.

""கணக்கு பார்த்து வச்சாச்சா... எண்ணிக்கை புடவைக்கு மட்டும்-தானா. ஜாக்கெட், உள்ளாடை-களுக்குமா?....''

""ஏன்.... அதெல்லாம் காசு போட்டு வாங்கினதுதானே...'' என்ற பிரசாத், ""சொல்லு.... இப்ப.... எதுக்கு புதுப்புடவை?'' என்றான் விடாப்-பிடியாய். ""பிடிக்கலைனா கொளுத்திப் போடுங்க. நாளைக்கு இந்த பாவிக்குப் பிறந்த நாள். ஆபீஸ்ல ஒவ்வொருத்-தியும் அவளவள் பிறந்த நாளைக்கு விதம் விதமா உடுத்தறாங்க. அவங்க புருஷன்மார் அன்பாவும், பாசமாவும் வாங்கித் தர்ராங்க. புடவை மட்டுமில்லே... நகை, பரிசு பொருள்னு பலதும் வாங்கித் தர்றாங்க. அதைப் போட்டுட்டு வந்து பெருமைப் பட்டுக்கறாங்க. "என் புருஷன் மத்தவங்களைப் போýல்லை.... வித்யாசமானவரு. பரிசை பொருளாய் கொடுத்தால் அது கால ஓட்டத்துல பழசாய்ப் போயிரும்னு... தன் இதயத்தையே கொடுத்திருக்கார்னு' சொல்ýக்க முடியுமா. என் கெüரவத்தை காப்பாத்திக்க உங்களை பெருமையாய் சொல்ýக்க வச்சி-ருக்கேனே... அதற்காகவாவது, நானாகவே ஒன்னை உடுத்திக்கிட்டு போக வாணாமா?...''

என்று கண்களில் நீர் திரள, அர்ச்சனா சொன்னபோதும்,

""இந்த பிறந்த நாள் கொண்டாடறதெல்லாம் நம்ம கலாச்சாரத்திலேயே கிடையாது. வாங்கிப் பூட்டிக்க இதெல்லாம் ஒரு சாக்கு'' என்றான் ராம் பிரசாத், புடவை பார்சலை விட்டெறிந்து.

அர்ச்சனாவுக்கு, இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. முள் படுக்கை-யில் விழுந்தது போல் இருந்தது.

வேதனை, பிடுங்கித் தின்றது.

என்ன புருஷன் இவன்...

கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும், மரத்திலும் நெகிழ்வு இருக்கும்.

இவன் வறண்டு வெடித்த பாலையாய், எரிமலைக் கரியாய் இருக்கிறானே.

இரண்டு வருட தாம்பத்யமே இப்படி வேம்பாய் கசக்க வைக்கிறானே...

மனைவியின் பிறந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ளாத கல்நெஞ்சன்.

தன் கையால் புடவை.... வேண்-டாம்... ஒரு முழம் பூகூட வாங்கித் தந்து அறியாதவன். மனைவி தானே ஒரு புடவை.... ஆசைப்பட்டுக் கூட அல்ல.... அவசியத்தை முன்னிட்டு ஒரு புடவை வாங்கி வந்தால், கொஞ்சம்-கூட புரிந்து கொள்ளாமல், இங்கித-மின்றிப் பேசுபவனை என்ன செய்ய...?

""பையனுக்கு அப்பாவோ அம்மாவோ இல்லை. உறவுன்னு இருக்கிறது அண்ணன் மட்டும்தான். அவரும் பம்பாய்ல குடும்பத்தோடு செட்டிலாய்ட்டாராம். புகுந்த வீட்டில், உனக்கு ஒரு தொல்லையும் இருக்காது'' என்று தப்புக் கணக்குப் போட்ட அப்பாவை இப்போது கட்டி வைத்து கேள்வி கேட்கணும் போýருந்தது.

மாமியார் இல்லாத வீடு....

நாத்தனார் இல்லாத வீடு....

உறவுகள் இல்லாத வீடென்றால்.... மகள் சுகமாயிருந்துவிடுவாள் என்று எதன் அடிப்படையில் தீர்மானிக்கி-றீர்கள் பெற்றோர்களே...

அவர்கள் மட்டும்தான் கொடுமைப்படுத்துவார்களா?

அன்பற்ற, புரிதல் இல்லாத புருஷன் வாய்த்துவிட்டால், ஒரு பெண்ணுக்கு அதைவிடக் கொடுமை வேறென்ன வேண்டும்.

கொண்டவன் சரியாக இருந்தால் கூரை ஏறிச் சண்டையிடலாம்.

மனைவியை, அதுவும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாய், சம்பளமில்லாத வேலைக்காரியாக மட்டும் பார்க்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பெண், என்ன சுகம் பெறுவாள்..... என்று இராவெல்லாம் கண்களில் சுடுநீர் விட்டு கவலைப்பட்டவள், விடியலில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தாள். காலையில் ராம்பிரசாத், கம்பெனிக்கு கிளம்புகையில் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்து, ""இதை என் ஆபீஸ்ல கொடுத்திடுங்க...'' என்றாள்.

""என்ன இது லீவ் லெட்டரா.... உடம்புக்கு என்ன.... நல்லாத்தானே இருக்கே. தேவையில்லாத நேரத்துல எதுக்கு லீவு போடணும். அனாவ-சியமா ஒருநாள் சம்பளம் கட்டாகுமே....'' என்றான்.

""இது லீவ் லெட்டர் இல்லைங்க...''

""பின்னே?''

""ராஜினாமா கடிதம்....''

""ரா...ஜி...னா...மா... கடிதமா?... உனக்-கென்ன பைத்தியமா?'' ராம்பிரசாத் திகைத்துப் போய்க் கேட்டான். அர்ச்சனா, நிதானமாய் பதில் சொன்னாள். ""நான் நல்லா யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். பெண்கள் வேலைக்குப் போறதே, அவர்களது தேவைகளுக்கு யாரையும் எதிர்-பார்க்காமல், சுதந்திரமாய்த் தன் காýல் நிற்கறதுக்குதான். சம்பாதிச்சும், ஒரு புடவை எடுக்க, பொட்டு, பவுடர், வளையல் வாங்கவும்கூட பேராட வேண்டியிருக்குன்னா... அதுக்கு ஏன் சம்பாத்யம். வீட்ல இருக்குற பெண்களுக்கு இதைவிட அதிகமாய் கேட்காமலே கிடைக்குது. நான் ஏன் மெனக்கெட்டு உழைச்சும், உங்ககிட்ட நல்ல பேர் வாங்க முடியாம, வேதனைப் படணும். வேலைக்குப் போறதாலதான நாலுவகை புடவையும் இன்னும் பல செüகர்யமும் தேவைப்படுது. வீட்ல இருந்துவிட்டால் ஏதோ நீங்க வாங்கித் தந்ததைக் கட்டிக்கிட்டு, பொங்கிப் போட்டுக்கிட்டு, டி.வி. பார்த்துக்கிட்டு, அக்கம்பக்கம் கதை பேசிகிட்டு, நிம்மதியா இருப்பேன் பாருங்க. உங்களுக்கும் என்னோடு சண்டை சச்சரவு பண்ண வேண்டிய அவசியம் இல்லை பாருங்க... அதான் இந்த முடிவு.... லெட்டரைக் கொடுத்துட்டு, பி.எஃப்., கிராஜ÷விட்டி எப்ப கிடைக்கும்னு விசாரிச்சுட்டு வாங்க....'' என்று உள்ளே போனாள்.

ராம்பிரசாத்துக்கு, கால்கள் துவண்டது. உடம்பு நடுங்கியது. விரல்கள் படபடத்தது. எதிர்காலமே இருண்டது போலாகிவிட்டது. அவள் மட்டும் வேலைக்குப் போகா-விட்டால்,

இன்சூரன்ஸ் தவணை, பைக் வாங்கின தவணை, வங்கித் தவணை, ப்ளாட் வாங்க போட்டிருக்கும் திட்டம்.... மேலும் அன்றாடச் செலவுக்குப் பணம்.... என் ஒற்றைச் சம்பளம் எந்த மூலைக்கு காணும்.... கடவுளே.... இதென்ன விபரீதம்.... சைக்கிளைப் போட்டுவிட்டு, ""அர்ச்சனா.... அர்ச்சனா.... ப்ளீஸ்.... இதென்ன அபத்தமான முடிவு.... ஆப்ட்ரால் ஒரு புடவை பிரச்சனைக்கு இவ்வளவு கோபப்படணுமா... நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிக்கக் கூடாதா... நானே இன்னைக்கு இன்னொரு புடவை எடுத்து தரலாம்னு இருந்தேன் தெரியுமா.... அர்ச்சனா.... அர்ச் கண்ணு...'' என்று கெஞ்சிகொண்டு வீட்டுக்குள் ஓடினான் ராம்பிரசாத்.

Nantri - Kalachuvadu

Friday, March 05, 2004

பிளாஸ்டிக்

சுமதி ரூபன்

விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு நேரம். சிதைந்து விடும் விரைவில். இதுதானே என் சுபாவம். எல்லை என்பதாய் ஏதோ வரும். பின்னர் புஸ்ஸென்று மறைந்து விடும். இன்றும் சில மணிநேரம் சிந்திக்கக் கிடைத்தால் ஏதும் செய்து விடுவேனோ என்று அஞ்சியே காலங்கள் கரைந்து கொண்டிருந்தன. இன்றும் அதுபோல் தான்.

பட்டு வேட்டி அவன் உடுத்தாயிற்று.. பட்டில் என் செல்வங்களும் பழபழத்தன. இனி பட்டுடுத்தி பிளாஸ்டிக் பொட்டு பூ வைத்து நானும் புறப்பட வேண்டும். இது எழுதாத எழுத்து. குளிரோ வெய்யிலோ வார இறுதியில் முதுகு கனக்கும் பாரத்துடன் நீண்ட பயணம் போல் கழிந்து கொண்டிருந்தது. பையைத் திறந்து பார்த்தேன். பால் போத்தல்போத்தல் சாப்பாடு டயப்பர் வீணீர் துடைக்கும் துண்டு சூப்பி மாற்றுடுப்பு கம்பளி என்று கச்சிதமாய் எல்லாம் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன் நிறைவாய்ச் சிரித்தான். எப்படிக் குறைகாண. மை நிரம்பிய கண்களுடன் தொடர்ந்தேன் அவனை. தூக்கிப்பிடித்த பட்டுப்பாவாடையுடன் ஓடிச்சென்று காருக்குள் தம்மைப் புகுத்திக்கொள்ளும் என்ர பெட்டைகளின் சிரிப்பை விட என்ன வேணும் எனக்கு. என் முகத்திலும் புன்னகை.

வியர்வை முகத்திலிருந்து வழிந்து கழுத்தால் எதையோ தேடி உள்ளே சென்றது. வாள் வாள் என்று கத்திமுடித்து விம்மலுடன் நித்திரையாய் போயிருந்தான் என் மகன். பட்டிண்கள் கழன்ற மேற்சட்டையுடன் ஓடித்திருந்துகொண்டிருந்த என் பெட்டைகள்இ குத்துவிளக்கடியில் வரும்போது மட்டும் தானாகவே தலைதிருப்பிக் கண்காணித்துக்கொண்டிருந்தான் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்த என் கணவன். வயிறு முணுமுணுத்தது இன்னும் பொம்பிள்ளையே மணவறைக்கு வரவில்லை.. குடிக்கவாவது ஏதாவது தரலாமே. பச்சை உடம்புக்காரி. என்ர பெட்டைகளுக்கு சொந்தங்கள் இல்லாத இடத்திலதான் மாப்பிள்ளை எடுக்கவேணும். எல்லாமே போலியாயிருந்தது. அந்த எல்லை வந்துவிடுமோ என்று அஞ்சி மகனை அணைத்தபடி மேலோட்டமாய் பார்வையை ஓடவிட்டேன்.. பட்டுக்களின் நிறங்கள் இப்போதெல்லாம் எனக்குப் பயத்தைக் கொடுத்தன. ஓடிய பார்வையில் பலமுகங்கள். தெரிந்தவை தெரியாதவை எல்லாமே எனக்குப் பிடிக்காததாய். ஏனிந்த தண்டனை எனக்கு. அலுப்பு வாசல் வரை வந்தபோது அவன் கண்களை நான் சந்தித்தேன். பார்வை அவனைக் கடந்தபோது அவன் பார்வை என்னில் உற்று நிப்பது தெரிந்தது. குனிந்து பார்த்தேன் சீலை சரியாகவே இருந்தது. திரும்பிப்பார்த்தேன் சுவர்தான் தெரிந்தது. அவன் புன்னகைத்தான். என்னை நோக்கி நடக்கத்தொடங்கினான். நான் எதேட்சையாய் முகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்தவளிடம் எதையோ கேட்டு வைத்தேன் அவள் என்னை வினோதமாகப் பார்த்தாள். நான் சிரித்தேன். அவன் கால்கள் என் கண்களுக்குள் தெரிந்தது. கறுப்பு சப்பாத்து கறுப்பு பாண்ஸ் கோட் கச்சிதமாய் இருந்தது.

வேட்டியுடன் இன்னும் அழகாய் இருப்பான். நான் பேசாமல் இருந்தேன். அவன் சிரித்தான் பின்னர் கேட்டான் “நீ.. நீங்கள் மேகலாதானே..”? நான் திடுக்கிட்டு என் கணவனைப் பார்த்தேன் அவன் ஆழமாக எதையோ நண்பர்களுடன் வாதித்துக்கொண்டிருந்தான்.. அனேகமாக இலங்கை அரசியலாய் இருக்கலாம். இனி அவன் என்னைத் திரும்பிப்பார்க்கக் பல மணிநேரங்களாகும். பெட்டைகளும் மூலையில் இருந்து வேறு குழந்தைகளுடன் நுள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி விளையாடிக்கொண்டிருந்தன. எல்லாக் குழந்தைகளுக்கும் அந்த விளையாட்டுத் தெரிந்திருந்தது எனக்கு அதிசயமாய் இருந்தது. எல்லா வீட்டிலும் அப்பம்மா இருக்குப்போல.. நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மகனை சும்மா ஆட்டினேன். ஊரிலும் கனடாவில் நான் போன பாடசாலைகள் வேலைத்தளங்கள் திருமணங்கள் சாவீடுகள் என்று ஒரு முறை நினைவிற்குக் கொண்டு வர முயன்றேன்.. இந்தக் கருப்புக் கோட்டுக்காரனின் முகம் தட்டுப்படவில்லை. அவன் சிரித்தான்.

“என்ன நான் கேட்டதுக்குப் பதிலைக் காணேலை” ...........................

பக்கத்தில் இருந்தவள் தன் கற்பை பாதுகாக்க எண்ணி எழுந்து சென்று விட அவன் இருந்து கொண்டான். ஒரு விதமான விலையுயர்ந்த மணம் அவனிடமிருந்து வெளிவந்தது. நிச்சயமாக எனக்கு அவனைத்தெரிய நியாயம் இல்லை. என் சீலையில் பொட்டில் மேக்கப்பில் கவனம் எடுக்காததற்காய் இப்போது வருந்தினேன். பசியால் உறுமும் பச்சை வயிறு. வூய் திறந்தால் மணக்குமோ என்ற அச்சம் எனக்கு. என்ன என்பதாய் புருவம் உயர்த்தினேன். அழகான அளவான அந்தச் சிரிப்புடன் மீண்டும் கேட்டான்

“நீங்கள் மேகலா தானே”

அளவாக நானும் வாய் திறந்து

“ஓம் நீங்கள் ஆர் என்ர கஸ்பண்ட பிரண்டோ அவரும் இஞ்ச வந்திருக்கிறார்”

அகலமாக உடலுடன் நெற்றியில் குங்குமம் கையில் குழந்தை என்று இருந்து கொண்டு எதற்காக அவசரமாக எனக்குக் கலியாணம் முடிந்து விட்டதையும் கணவன் அங்கே வந்திருப்பதையும் சொல்ல முயல்கிறேன். ஆசைக்கு அளவே இல்லை..

அவன் கண்கள் ஒரு முறை மிளிர்ந்து அடங்கியது எனக்குப் பயத்தைக் கொடுத்தது. அவன் சிரித்தான் இப்போது வாய் திறந்து பற்கள் தெரிந்தன. டெண்ரிஸ்ஸிடம் ஒழுங்காப் போறான் போல.. டெண்ரல் பெனிபிட் இல்லாத என்ர மனுசன்ர வேலை மேல் எனக்கு கோபம் வந்தது.

“நீங்கள் தின்னவேலி மசுக்குட்டி மாஸ்டரின்ர மகள்தானே..”

அவன் தோற்றத்திற்கும் வார்த்தைகளுக்கம் ஒத்துவராமல் இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. நான் சிரித்தேன்.. அந்தஸ்த்து இடைவெளி குறைந்து விட்டிருந்தது.

“நீங்கள்.. எங்கேயோ பாத்தமாதிரி இருக்கு ஆனால் ஞாபகந்தான் வரேலை..”

சும்மா பொய் சொன்னேன். “என்ன.. நீங்கள் என்னை மறந்திட்டீங்கள்..”

பொய்க் கோபத்துடன் அவன் சிணுங்கினான்.. கணவன் இன்னும் ஆக்ரோசமாகக் கதைத்துக்கொண்டிருந்தார். பெட்டைகள் குப்புறக்கவிண்டிருந்து எதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். என் அடிவயிற்றில் ஒரு வித நாதம் எழுந்தது. அவன் சிணுங்கலில் உரிமை தெரிந்தது. நான் பாடசாலையில் ஒருத்தனையும் காதலிக்க அனுமதிக்கப்பட்டதில்லை.. கள்ளமாக மனதுக்குள் காதலித்தது கௌரியின் அண்ணனை மட்டும்தான். இது அவனில்லை.. கனடாவில் அப்பிடி இப்பிடி ஒருநாள் சலனங்கள் வந்திருந்தாலும் இந்தளவிற்கு கச்சிதமானவனை நான் கனவில் கூட நினைத்தில்லை..

“இன்னும் உங்களுக்கு நினைவுக்கு வரேலை போல என்ன..”

அவன் குனிந்து தன் முகத்தை எனக்கு அருகில் கொண்டு வந்தான். நான் முகத்தை இழுத்துக்கொண்டேன். அவன் தன் கன்னத்தைத் தடவியபடியே “மசுக்குட்டி மாஸ்டரின்ர அடி இன்னும் எனக்கு விண்விண் எண்ட மாதிரி இருக்கு” என்றான். அவன் கன்னங்கள் சிவந்து போக கண்களில் எதுவோ தெரிந்தது.. நான் எல்லாவற்றையும் ஒரு கணம் மறந்து அவன் கண்களைப் பார்த்தேன். அவனை இப்போது அடையாளம் தெரிந்தது. எனக்கு வோஸ்ரூமுக்கு போக வேணும் போல் இருந்தது அடக்கிக்கொண்டேன் சுகமாக இருந்தது. “சங்கரா?” சின்னதாக ஒரு குழறலுடன் கேட்டேன். அவன் சிலோ மோஸனில் “ஓம்”; என்று தலையசைத்தான். என் உள்ளங்கைகள் குளிர மகன் அசைந்தான். ஒரு பெரிய வட்டத்திற்குள் விழுவது போலிருந்தது எனக்கு.. என்னை நிதானப்படுத்த முயன்று முயன்று தோற்றுத்தோற்று கடைசியில் கேட்டேன்

“எப்பிடி இருக்கிறீங்கள்.. உங்கட அப்பா அம்மா குடும்பம் எல்லாம் எங்க..” அவன் தலையசைத்து ஒரு விதமாகச் சிரித்த படியே

“எல்லாரும் இஞ்சதான் இருக்கீனம்.. ரேணு கலியாணம் கட்டி லண்டனில இருக்கிறாள்..” “உனக்குக் கலியாணம் முடிஞ்சுதா?”

மனதுக்குள் நான் கேட்க.. “நான் இன்னும் கலியாணம் கட்டேலை..” என்றான் அவன். மேளச்சத்தம் அளவுக்கு அதிகமாய் இருப்பதுபோல் பட்டது.. அவன் கலியாணம் கட்டாதது எனக்கு ஏனோ சந்தோஷத்தைத் தந்தது. அவன் என் மகனின் விரல்களைத் தடவி விட என் உடல் புல்லரித்தது.

வீடு அமைதியாக இருந்தது.. அமைதியென்றால் இது மயான அமைதி பெரிய இழப்பின் பின்னர் வரும் அமைதி.. ஆனால் இங்கு இழப்பு இனிமேல்தான்.. அக்காவின் விசும்பல் சத்தமின்றி சுவர்களில் மோதியவண்ணம் இருந்தது ஆச்சி இருமல்களை விழுங்கிக்கொண்டிருந்தாள். அம்மா சுவரில் சாய்ந்து ஏமாற்றியவன் வருகைக்காய் காத்திருக்கும் கதாநாயகிபோல் காட்சியளித்தாள்.. நான் அழுவதற்கு என்னைத்தயார் செய்த நிலையில் குப்புறப்படுத்திருந்து பென்சிலால் சத்தமின்றிச்சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன்..

மசுக்குட்டி மாஸ்டர் வீடு அடிக்கடி இப்படிக்காட்சியளிக்கும்.. இதற்கெல்லாம் காரணம் இந்த வீட்டிலிருக்கும் பெண்கள்.. அது என்னில் தொடங்கி ஆச்சிவரை வயது வேறுபாடின்றி இருக்கும்.. பெண்கள் தவறு செய்யப்பிறந்தவர்கள்.. தவறு செய்தவண்ணமே இருப்பார்கள்.. ஆண்களுக்கு மானம் போகும்.. தவறை தட்டி நிமிர்த்தி நேர்த்தியாக்கி ஒருவாறு பெண்களைக் காப்பாற்றி வருகின்றார்கள்.. பெண்கள் தவறு செய்து தவறு செய்து ஆண்களின் கருணையால் ஏதோ அழிந்து போகாமல் இன்னும் வாழ்ந்த வண்ணமிருக்கின்றார்கள்..

எனது அக்காள் எனப்படும் பதினெட்டு வயது மங்கை மகா தவறை செய்துவிட்டாள்.. எனது குடும்பத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் தன் நடத்தையால் கெடுக்கப்பார்க்கின்றாள்.. இனி வீட்டுத்தலைவன் வரவேண்டும்.. அவளைத்தட்டி நிமிர்த்தி தவறை உணரப்பண்ணி வீட்டுமானத்தைக் காப்பாற்ற வேண்டும்.. அதற்காகத்தான் இந்தக் காத்திருப்பு.. தன்னோடு படிப்பவன் பாடப்புத்தகம் கேட்டான் குடுத்தேன்.. எனக்கும் அவனுக்கும் வேறு விதமாக ஒன்றுமில்லை அக்காள் விம்மல்களுக்கிடையில் சொல்லிச்சொல்லிக் களைத்துவிட்டாள்.. பாடப்புத்தகம் ஒரு பெடியனுக்குக் குடுத்தது முதல் தவறு அதுவும் இளித்தபடியே குடுத்தது மகா தவறு.. பாடப்புத்தகத்துக்குள் அக்காள் மறைத்து வைத்த காதல் கடிதத்தைப் பெற்று வர மசுக்குட்டி மாஸ்டர் பெடியன் வீட்டிற்குப் போய் விட்டார்.. கடிதம் இருக்குதோ இல்லையோ அக்காள் நிச்சயம் தட்டி நிமிர்த்தப்படுவாள்.. காரணம் பெண்கள் எப்போதுமே தவறு செய்யப்பிறப்பவர்கள் ஆண்கள் அவர்களைத் தட்டி நிமிர்த்தி வாழப்பழகிக்கொடுப்பவர்கள்.. சட்டியில் மீன் குழம்பு காய்ந்து போயிருந்தது.. எனக்கு வயிறு அழுதது.. இனிமேல் இரவுக்குச் சாப்பிட்டால்தான்..

இன்றும் சங்கர் வந்தான்.. அவன் வருவான்.. ஒவ்வொருநாளும் வருவான்.. இல்லாவிடில் நான் அவன் வீட்டிற்குப்போவேன்.. இது எப்படியோ எழுதாத எழுத்தாகிவிட்டது.. முற்றத்து நாவல்பழம் பொறுக்கி வாழைக்குத்தண்ணி கட்டி குட்டிச்சோறு கறியாக்கி மூலைக்கடை போய் சில்லறையாய் பொருட்கள் வாங்கி வந்து.. நானும் சங்கரும் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் ஒன்றாகக்கழிப்போம்.. அவன் வீடு கோயிலுக்குப்போனால் நானும் அவர்களுடன்.. என் வீடு கீரிமலை போனால் அவன் எங்களுடன்.. இரு வீட்டு உறவும் எங்களால் பிணைந்திருந்தது.. நான் இன்னும் பெருசாகாததால் இன்னமும் மூலைக்குள் குந்தத் தொடங்காததால் மசுக்குட்டி மாஸ்டரின் கவனம் என்மேல் திரும்பியிருக்கவில்லை..

ஆச்சி வினோதமான ஒரு போஸில் படுத்திருந்தாள். தலைமயிர் கலைந்து தலையணைய மூட மெல்லிய சூரிய ஒளி முகத்தை சிவப்பாக்கியிருந்தது. நான் குந்தியிருந்து அவளைக் கூர்ந்து பார்த்தேன். பின்னர் மெல்லத்தொட்டுப் பார்த்தேன். பயத்துடன் கைகளை மெல்லத் தூக்கிப்பார்க்க ஆச்சி இருமினாள். உயிரோடதான் இருக்கிறாள்.. எனக்கு யாருடனாவது கதைக்க வேண்டும் போலிருந்தது.. அக்காள் இப்போதெல்லாம் என்னுடன் அவ்வளவாகக் கதைப்பதில்லை.. அவள் கண்கள் சோபை இழந்தவையாய் எனக்கு அச்சம் தருகின்றன.. அம்மா கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாதவள்.. நான் கேள்வி கேட்பதே தவறு என்பது அவள் எண்ணம்.. அதிலும் என் கேள்வி சைக்கில் மிதித்து சந்தைக்குச் சென்றிவிட்ட மசுக்குட்டி மாஸ்டரின் காதில் எப்படியும் விழுந்து விடும் என்பதாய்க் கண்களை அலையவிட்டுத் தவிப்பாள்..

சங்கரின் வீடு வெறுமையாய்க்கிடந்தது.. நான் யாருக்கும் சொல்லாமல் முள்ளுக்கம்மி பிரித்து உடல் நுழைத்து அவன் வீட்டுக்கதவை கை சிவக்கத்தட்டிப் பார்த்துவிட்டேன்.. தோட்டத்துக் குருவிகள் சத்தமும் தூரத்தில் நாய்களில் குரைத்தலையும் தவிர எனக்காய் எந்த ஓசையும் அற்று அடங்கிப்போயிருந்தது அந்த வீடு.. நானில்லாது முதல்முதலாய் சங்கர் வீடு எங்கோ சென்றுவிட்டிருந்து.. இனி இது வெறும் கட்டிடம்.. இங்கே இனிமேல் எனக்கும்இ சிரிப்புகளுக்கும் இடமில்லை.. பழுத்த பலா இலைகள் காய்ந்து முற்றம் பாழாப்போயிருந்தது.. மாமரத்து ஊஞ்சலின் ஓரத்தில் சங்கரின் பழைய சேட் இன்னமும் அவிழ்க்காமல் கிடந்தது..

முள்ளுக்கம்பிக் கீறல்களுக்கு துப்பல் போட்டுத் துடைத்துவிட்டாள் ஆச்சி.. “கொப்பனுக்குத் தெரிந்தால் கொண்டு போட்டிருவான்..” தலையை இழுத்துப்பின்னிய படியே பொரிந்து தள்ளினாள்.. கண்ணாடியில் என் கண்களின் சோபையைத் தேடினேன்.. என் கேள்விக்கு ஆச்சியிடம் தான் பதில் கிடைக்கும்.. தலைமயிர் நுனியை கிழித்த துணியால் இறுக மடித்துக்கட்டிய படியே “அந்த ராஸ்கலுக்கு இந்த வயசில இப்பிடிப் புத்திபோனால் கொப்பன் கொண்டுதானே போடுவான்” ஆச்சியின் பூடகப் பேச்சு விளங்காமல் இருந்து..

“எந்த ராஸ்கல் ஆச்சி.. அப்பா ஏன் சங்கருக்கு அடிச்சவர்.. என்னை ஏன் இழுத்துத் தள்ளினவர்.. சங்கரின்ர அப்பாவையும் அம்மாவையும் என் அப்பா பேசினவர்.. சங்கர் ஆக்கள் எங்கை போட்டீனம் ஆச்சி”

ஆச்சி என்னை வினோதமாகப் பார்த்தாள்.. “நீயும் விட்டிருப்பாய் ஆர் கண்டது” எனக்கு ஆச்சியைப் பிடிக்காமல் போயிற்று.. அப்பா அம்மா அக்காஇ ஆச்சி ஒண்டுமே எனக்குப் பிடிக்காமல் போயிற்று..

சோபை இழந்த கண்களுடன் வாழ நானும் பழகிக்கொள்ள.. அமைதி - பூகம்பம்இ அமைதி - பூகம்பம் என்பதாய் மசுக்குட்டி மாஸ்டரின் வீடு வாழப்பழகிக் கொண்டது.. என் உடல் மாற்றம் கண்டு மூலைக்குள் இருந்து.. அக்காள் தாலி பெற்றுப் பின்னர் பிள்ளை பெற்று.. நான் தாலி பெற்று பின்னர் பிள்ளை பெற்று.. இப்போது கடல் கடந்து மசுக்குட்டி மாஸ்டரின் பார்வையிலிருந்து தூரமாய்.. ஒரு சின்ன மசுக்குட்டி மாஸ்டருடன் அமைதி -பூகம்பம் வடிவில் தொடர்கிறது என் வாழ்வு..

மணவறையின் ஆரார்த்தி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.. சங்கர் மௌனமாக இருந்தான்.. அவன் கன்னங்களை தடவிவிடலாம் போலிருந்தது.. சங்கர் என் முகம் பார்த்தான் “ உனக்கு எப்பிடியோ தெரியேலை.. ஆனால் உன்ர அப்பா நடந்து கொண்ட முறை சரியான கேவலமானது.. சின்ன வயசுதான் எனக்கு இருந்தும் அந்தக்காயம் ஆறக் கனகாலம் எடுத்துது..” சங்கரின் முகம் இறுகிப்போயிருந்தது.. சங்கர் என்னிலும் விட மூன்று வயது மூத்தவன் கன்னத்தில் மட்டுமல்ல மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை மனதிலும் காயத்ததை அவனுக்கேற்படுத்தியிருந்தது இப்போது எனக்குப் புரிந்தது.

நான் இழந்தது நல்ல ஒரு நண்பனை.. நாள் முழுதும் விளையாடும் ஒரு நண்பனை.. அதனால் எனக்குள் நண்பனை இழந்த காயம் மட்டுந்தான் ஏற்பட்டிருந்தது.. அதற்கு மேல் புரியும் வயது வர சங்கரை நான் மறந்து போயிருந்தேன்.. புதிய நண்பிகள் உறவுகள் என்று என் வாழ்வு மாறிப்போயிருந்தது..

நான் அவன் முகம் பார்த்து “அண்டைக்கு நடந்ததுக்கு இப்ப நான் உங்களிட்ட மன்னிப்புக்கேட்கிறன்” ஏதோ பொருந்தாதது போலிருந்தாலும் அதை விட எனக்கு வேறு வழி அப்போது எனக்குத் தெரியவில்லை.. அவன் சிரித்தான்.. நான் மயங்கினேன்.. மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை என்னில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது எனக்குப் புரிந்தது.. என் கணவனையும் பெட்டைகளையும் சந்திக்கவேண்டும் என்றான்.. நான் மௌனமாக தலை குனிந்திருந்தேன்.. தான் சாப்பாட்டிற்கு நிற்கவில்லை போகவேணும் என்று விட்டு எழுந்தான்.. அப்போதும் நான் பேசாமல் இருந்தேன்.. “சரி நான் போட்டு வாறன்” என் மகனின் கையிலும் என் முதுகிலும் அழுத்தி அவன் விடை பெற என் தொண்டை அடைத்தது..

குட்டிச் சோறு காய்ச்சி விளையாடும் போது கண்ணுக்குள் தெறித்த தூசு ஊதாமல் வாயில் அவன் முத்தமிட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.. ஈரம் ஊற நான் எழுந்து சாப்பிடப்போனேன்..

- சுமதி ரூபன் -
நன்றி - திண்ணை