Friday, May 28, 2004

ஓட்டம்

கமலாதாஸ்
தமிழில் - க.லல்லி

கடந்த வருடம்தான் பெருநகரங்களில் வாழ்வதை விட்டு கேரளாவில் குடியேறுவது என்று முடிவெடுத்தேன். என்னுடைய கலைப்படைப்புகளின் புகழ் அதிகரித்த காலத்தில் என்னுடைய விரல்கள் திறமையை இழக்க ஆரம்பிப்பதால் சில வேளைகளில் நினைத்தேன், அனுபவ வறட்சி அதன் பின்புலமாக இருந்திருக்கக்கூடும். இதனைத் தொடர்ந்து என்னுடைய சிற்பங்கள் ஒரே மாதி¡¢யாக உருவெடுத்தன. கலை வாழ்வை பிரதிபலிக்கலாம். தவறில்லை. ஆனால் மாற்றமின்றி தொடர்ந்தால்?

நகரங்களில் எனக்கு மாடலாக வந்தவர்கள் ஆன்மவறட்சியுடைய நகர்ப்புற படைப்புகளாயிருந்தார்கள். வெளிநில முகமும் தூசுபடிந்த தலையுமாய் காணப்பட்டார்கள். நனைந்த பஞ்சு போல அவர்களது தசைகள் தொளதொளத்து இருந்தன. அவர்கள் அடிவயிற்றில் இருந்த கட்டிகளையும் அறுவைசிகிச்சை தழும்புகளையும் புடைத்திருக்கும் நரம்புகளையும் ஒருவித சங்கடத்துடன் கவனித்தேன். ஓய்வு நேரத்தில் கருகில உதடுகளுக்கிடையே சிகரெட்டை பற்ற வைத்தார்கள். பூரியையும் உருளைக்கிழங்கையும் சுவைத்துச் சாப்பிட்டார்கள். என்னுடைய கழிவறையில் பெரும் ஓசையுடன் மலஜலம் கழித்தார்கள். அவர்களுடைய வேகமான அசைவுகள் என்னையும் பீடித்தன. பேரூந்துகளிலும் மின்சார ரயிலிலும் செல்லும் பயணிகளின் பொறுமையின்மை அவர்களிடம் காணப்பட்டது.

எப்போதும் எனது நேரம் நிதானமாக கழிவதையே விரும்பினேன். மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் வித்து போல பொறுமையை என்னுள் வளர்த்து வைத்திருந்தேன். ஒரு செடி செழித்து மரமாக வளர்வதைப் போல எனது சிற்பங்கள் நின்று நிதானித்து உருவெடுத்தன. மேற்கூரையில்லாத வராந்தாக்களில் வேலை செய்தேன். நான் உத்தேசிக்காமலேயே எனது சிற்பங்கள் அனல் பறக்கும் வெய்யிலிலும் காற்றிலும் மழையிலும் உருமாறின. இயற்கை அவற்றைத் தொட்டுத் தடவி ஒளிர்ந்திடச் செய்தது. அதனாலோ என்னவோ பலரும் அவற்றிற்கு உயிர் இருப்பதாகக் கூறினர். மாடல்களிடமிருந்த அந்த உயிர்ப்பை சிற்பங்கள் இவ்வாறாகப் பெற முடிந்தது. என்னுடைய சிற்பங்கள் நிறைய விற்பனையாகி வருவாய் அதிகா¢த்தது. கலையுணர்வு அற்றவர்கள் நான் நிர்வாண உடல்களைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்குவது குறித்து அவதூறுகள் பரப்பினர். இத்தகைய வதந்திகளைப் பரப்புகின்றவர்கள் மனநோய் பீடித்தவர்கள் என்றும் அவர்களின் விஷம் தோய்ந்த இதழ்கள் இத்தகைய அருவருப்பிற்கு பழகிப்போனவை என்றும் கூறி அவர்களைப்பற்றி அறிய வைத்தார் என் கணவர். அதன் பின்னர் அவர்களது வசைச் சொற்களுக்காய் என் கண்ணீரை நான் வீணாக்கியதில்லை.

என் கணவர் தனது நாற்பத்தி மூன்றாம் வயதில் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மூன்று மாதகாலம் படுக்கையில் கிடக்க நேர்ந்தது. அவரது வலது காலும் கையும் முற்றிலும் செயலற்றுப் போனது. சில காலம் அவருடைய பேச்சுப் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில்தான் நான் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. எனது காலை முழு நேரத் தொழிலானது. படிப்படியாக ஊன்றுகோலுடன் வீட்டில் நடக்கவும் பேசவும் அவருக்குத் தெம்பு வந்தது. ஆனால் அந்த நிலை வந்தபோது அவருக்கு வேலை பறிபோயிருந்தது. நான் ஓய்வின்றி சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருக்கும்போது என்னருகில் சாய்ந்தவாறு ஊன்றுகோலில் கையூன்றி மெலிதான குரலில் 'வாதநோய்காரனுக்கு வாழ்க்கைப்பட என்ன தலையெழுத்து உனக்கு. பாவம். துரதிருஷ்டமானவள் நீ' என்று கூறுவார்.

அந்தக் குரலில் இருந்த அனுதாபம் எனக்கு வேண்டியதாயில்லை. குடும்பத் தேவைகளுக்காய் பொறுப்பேற்கு முன்னர் காமவிகாரம் படைத்த என் கணவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையைப் போலிருந்தேன். முழமையாய் என் உடலை அர்ப்பணிப்பதன் மூலமே அவரை நான் திருப்திப்படுத்த முடிந்தது. அவருடைய இடத்தில் ஒருவேளை நான் வாதநோயில் படுத்திருந்தால் ஒரு வருடத்திற்கு மேல் அவரால் தாக்குப் பிடித்திருக்க முடியாது. படுக்கையறையில் கடமையாற்ற முடியாத மனைவியை அவர் கவனித்திருக்க மாட்டார். காம உணர்வுகளுக்கு அவர் அளித்த அந்த முக்கியத்துவம் எனக்கு அச்சமூட்டியது. இதன் காரணமாகவோ என்னவோ இப்போது அவரைக் கவனித்துக் கொள்வது இரகசிய சந்தோஷத்தை அளித்தது. இந்நிலையில் எனக்கு அவநம்பிக்கைக்கு¡¢யவராய் இருக்கமாட்டார் என்ற எண்ணமே தெம்பளித்தது. ஒரு நாள் என்னிடம் 'நீ இப்போதெல்லாம் கண்ணாடியில் உன்னைப் பார்த்துக் கொள்வதில்லையா?' என்று கேட்டார்.

'எனக்குத் தொடர்ந்து வேலைகள். கண்ணாடியில் முகத் பார்த்து பூரிப்பதற்கு வேலை செய்யும் பெண்ணிற்கு எங்கு நேரம்?' என்றேன்.

'இந்நாட்களில் நீ மிகவும் அழகு வாய்ந்தவளாகிவிட்டால், அழகு சாதனங்களின் உதவியின்றியே உன் அழகு சுடர்விடுகின்றது. கண்டிப்பாக உன்னை நீ கண்ணாடியில் பார்க்க வேண்டும்' என்றார்.

எவ்வித பொறுப்புமற்ற சுபபோகத்தில் திளைத்த பழைய நாட்களில் இவர் என் அழகைப் புகழ்ந்து பேசுகையில் அளவிடமுடியாத சந்தோஷமாயிருக்கும். ஒரு விளையாட்டுப் பொருளுக்கு அந்தப் புகழ்ச்சி தேவையானதுதான். அது நம் சார்புத் தன்மையை மறப்பதற்கு பொ¢தும் உதவும். பொருளாதார ரீதியில் கணவனையும் உறவினரையும் வீட்டு வேலையாட்களையும் பொறுப்பேற்றிருக்கும் மனைவிக்கு இத்தகைய புகழ்ச்சி தேவையில்லை என்பதை படிப்படியாக உணர்ந்தேன். என்னை அழகுப் பதுமையாக்கி அவரை சந்தோஷப்படுத்தும் அவசியம் இப்போது எனக்கில்லை. நான் அடிமையல்ல. சுதந்தரமானவள். தலைமுறையாய்த் தொடர்ந்து வரும் பரம்பரைப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டவள் என்று கர்வத்துடன் நினைத்துக் கொண்டேன்.

ஆயள்வேத சிகிச்சைக்காக என் கணவரை கேரளாவிற்கு அழைத்துச் செல்லுமாறு என் நண்பர்கள் ஆலோசனை கூறினர். எங்களது இடமாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம். நகரின் எல்லை தாண்டி கடற்கரையோரத்தில் அமைந்திருந்த 'நாலுக்கட்டு' வீட்டினை ஒரு தரகன் என்னிடம் காண்பித்தான். பழைய வீடாக இருப்பதால் வாடகை மிகவும் குறைவு என்றான். அந்த வீட்டுச் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் பாசி படர்ந்திருந்தது. அந்த இரும்புகேட் துருப்பிடித்து பலவிடங்களில் கிராதி விட்டுப் போயிருந்தது. சுவர்களுக்கு பின்புறம் பயன்படுத்தப்படாத பாழ்நிலங்களில் காட்டுச் செடிகளும் கொடிகளும் படர்ந்து கிடந்தன. அதற்கப்பால் நீலக்கடல் விரிந்து கிடந்தது. நீரில் சூரியஒளி படுவதாலோ என்னவோ கடலுக்கு மேலிருந்த வானம் விநோத வெண்மையில் ஒளிர்ந்தது. அந்தத் தருணத்தில் கடலையும் மேகங்களையும் வானத்தையும் பார்த்தபின்பு தரகனிடம் 'வேறு ஒரு வீட்டைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை' என்றேன்.

கதவைத் திறந்து இருள் அடர்ந்த அந்த வீட்டிற்குள் நுழைகையில் வெளவால்களின் எச்சமும் எலிப் புழுக்கைகளின் வீச்சமும் கூடிய ர்நாற்றம் வீசியது. வீஇட்டுக் கதவுகளிலும் சன்னல்களிலும் படிந்திருந்த தூசியைத் துடைத்துக் கொண்டே வீட்டுத் தரகன்,

"அண்டை அயலவர்கள் இந்த வீட்டைப் பற்றி நிறையப் பொய்கள் சொல்வார்கள். பொறாமை பிடித்தவர்கள். இந்த வீட்டில் யாரோ ஒருவனை அடித்துக் கொலை செய்ததாகக்கூட கூறுவார்கள். இங்கு வாடகைக்கு வருபவர்களை விரட்டுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதைகள் அவை" என்றான். சன்னல்கள் மிகவும் சிறியதாயிருந்தன. நடுமுற்றத்திலிருந்து பார்க்கும்போது நீண்ட உருண்ட தூண்களும் கடப்பைக்கல் தளம் பாவியிருந்த முற்றமும் தொ¢ந்தன. தென்வடல் திசையிலும் கீழ்மேலும் காற்று நுழைந்து செல்வதற்கான வழிகளுடன் வீடு அமைந்திருந்தது. உள்முற்றத்தின் ஓரங்களில் எனது சிற்பங்களை நிறுவத் தீர்மானித்தேன். சிற்பங்களில் வேலை பார்க்கும் போது நிறைய காற்றும் வெளிச்சமும் அங்கு கிடைக்கும்.

தரகனிடம், "இந்த வீடு எனக்குப் பொருந்தும்" என்றேன்.

என் கணவர், "கழிவறைகளை நீ பார்க்க விரும்பவில்லையா?" என்றார். நான் தலையாட்டினேன்.

"இப்போது எதனையும் பார்க்க எனக்கு விரும்பமில்லை".

இத்தனை காலம் எனக்காய்த் தனிமையில் கனவுகளுடன் காத்திருந்த வீடு இறுதியில் என்னுடையதாயிற்று. அதன் கனவுகள் மட்டுமே அந்த பழைய வீட்டை நிலைகுலையாமல் பாதுகாத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வெகுகாலத்திற்கு முன்பே காற்றும் மழையும் அதன் கூரைகளையும் உத்திரங்களையும் தூண்களையும் சூறையாடியிருந்திருக்கலாம்.

நானும் பலவருடங்களாக எனது மனத்தோற்றத்தில் இம்மாதி¡¢யான வீட்டினை கனவு கண்டு வந்திருக்கிறேன். அதன் துரப்பிடித்திருந்த கேட்டும் முட்புதர்கள் நிறைந்த பாழ்நிலமும் அதனைத் தாண்டி கரையை முட்டி மோதிக் கொண்டிருக்கம் அலைகளும் எனது கனவுகளில் திரும்பத் திரும்ப வந்திருக்கின்றன. அதன் தலைவாசலையும் சன்னல்களையும் நடுமுற்றத்தையும் தூண்களையும் கடப்பைக்கல் தரையையும் பாசி படர்ந்த மேற்கூரையையும் வெளவால்கள் படபடக்கும் பரண்களையும் எல்லாவற்றையும் நான் பார்த்திருக்கிறேன்.

என் கணவருக்கு மூலிகைத் தைலங்களை உடலில் தேய்த்துக் குளிப்பாட்டுவதற்கு ஒரு கிழவனை நியமித்தேன். வீட்டு வேலைகளையும் சமையலையும் செய்வதற்கு ஒரு கிழவி வந்து சேர்ந்தாள். முதல் சில மாதங்கள் மகிழ்ச்சியுடன் கழிந்தன.

ஒரு கிராமத்துப் பெண்ணும் எனக்கு மாடலாக கிடைத்தாள். அவள் பெயர் ஸ்ரீதேவி. புதினேழு வயது கூட நிரம்பாதவள். ஆரம்பத்தில் மிகவும் கூச்சமும் தயக்கமும் நிறைந்தவளாயிருந்தாள். பின்னர் பெருமிதத்துடனே தனது நிர்வாணத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தாள். அவளை நிற்க, உட்கார, படுக்க வைத்து நிறைய சிற்பங்களை உருவாக்கினேன். அவளுடைய உயிர்ப்பின் இரத்தத்தையெல்லாம் உறிஞ்சியதாலோ என்னவோ எனது உருவங்களில் அபூர்வ ஜீவன் ததும்பிற்று. அவள் உயிரற்ற பொம்மை போல சரிந்து விழுகையில் அவளின் பிரதிமைகளோ புத்துயிர்ப்புடன் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருந்ததை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். வெயிலின் வெம்மை படுவதாலோ என்னவோ மனித உடம்பின் உஷ்ணமும் அந்தக் கல்லிலும் மரத்திலும் சூடு இருந்தது. ஒரு நாள் எனது கணவர் அந்தப் பெண்ணின் நிலையைப் பார்த்து "போதும் நிறுத்து. இனியும் அவளால் தாங்க முடியாது" என்றார்.

அவர் முகத்தில் கோபம் தெறித்தது. நேரடியாக என்னிடம் காட்டிய கோபம் எனக்குத் திகைப்பூட்டியது. இதுவரையிலும் எனது சிற்பக்கூடத்திற்குள் நுழைந்திராதவர் இப்போது சிலைகள் உருவாக்க வேண்டாமென்று உத்தரவிடுகின்றார்.

அந்தப் பெண் கடப்பைக்கல் தரையில் இடதுபுறம் ஒருக்களித்து படுத்திருந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன.

"அவள் நன்றாகத்தானிருக்கிறாள்" என்றேன்.

"ஒருவேளை இருக்கலாம். ஆனால் இவ்வாறு தொடர்ந்தால் நிச்சயம் அவள் இறந்து போவாள். நீ இரத்தக் காட்டேறி போல அவள் ரத்தத்தை உறிஞ்சுகிறாய். உன்னுடைய சிற்பங்கள் உனது மாடல்களின் உயிரைத் திருடுகின்றன".

அந்தப் பெண்ணின் முகத்தை மீண்டும் ஏறிட்டுப் பார்த்தேன். வெளிறிய அழகிய முகம். நீராம்பல் போன்ற கன்னங்கள். நீண்ட புருவங்களுடைய கண்கள்.

"அவள் அழகானவள் என்ற நினைக்கின்றீர்களா?" என்று அவரிடம் கேட்டேன்.

"எனது கருத்துக்கு இங்கு இடமில்லை" என்று முணுமுணுத்தார். ஸ்ரீதேவி - சதைப்பற்று இல்லாத மெலிந்த இந்த அழகிய பெண்ணின் உடல் மீதான அவர் பார்வை என்னவாயிருக்கும் என்று அறிய முயன்றேன். பறித்துப் போடப்பட்ட பலாக்கிளை போல் படர்ந்திருந்த அவள் உடலின் ஏற்ற இறக்கங்களை கல்லில் வளைவுகளாக என்னால் உருமாற்ற முடிந்தது. ஒவ்வொரு சிலையை முடிக்குந் தறுவாயிலும் அவள் அதிக களைப்பினால் சரிந்து விடுவாள். ஒரு வனவிலங்கின் அயர்ச்சி போன்றிருந்தது அது. நான் ஆறு துருவங்களை முடித்த பின்னர் அடுத்தடுத்து ஆறு குழந்தைகளைப் பெற்ற அதீத அயர்ச்சி அவளிடத்து காணப்பட்டது. ஒருமுறை கண்கள் பாதி மூடிய நிலையில்
"அம்மா எனக்குக் களைப்பாயிருக்கிறது. போக விடுங்கள்" என்றாள்.

அவளுக்குச் சூடான பால் தந்தேன். அவள் உடலை வாசனைத் தைலம் தேய்த்து நன்கு பிடித்து விட்டேன்.

நான் ஸ்ரீதேவியை மிகவும் நேசித்தேன். ஒரு சிற்பி தன்னுடைய மாடலாக பணிபுரிபவர்களிடத்து காட்டும் நேசந்தான் அது. அவளைக் கொண்டு நான் சிற்பங்களை வடித்த பின்பு எனது அன்பு திடீரென்று மறைந்து விடுமா என்று என் கணவர் கேட்டபோது பதில் பேசாமலிருந்தேன். அதற்கானத் ¨தா¢யம் எனக்கில்லை. உணர்வுகளின் வறட்சியை ஒளிவுமறைவின்றிக் காட்ட என்னால். இயலவில்லை. உணவுக்கும் உடைக்குமாய் என்னை முழுவதுமாய் சார்ந்திருக்கும் அவருக்கு என் மீதுள்ள மா¢யாதை குறைந்துவிடும் என்ற பயத்தாலோ என்னவோ நான் ஏதும் பேசவில்லை. குடும்பத் தேவைகளுக்காய் பொறுப்பேற்றவள் என்ற முறையில் அவர் என்னைச் சார்ந்தருப்பதை உள்ளுர சலித்தேன். அதே நேரம் இந்நிலை தொடர்வதையே விரும்பினேன். ஆடம்பரமாகவும் எதிர்காலம் பற்றிய கவலைகளுமற்று இருக்கும் போதுதான் நான் அவருக்கு அவசியமானவள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர் மூட்டைப்பூச்சி போல் என் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு. அவர் பணியிலிருந்த காலத்தில் என் மீது அன்பும் மதிப்பம் வைத்திருந்ததாக நடித்தது கூட இல்லை.

எப்படி நான் அந்த சாப இரவில் எழுந்தேன்? சிறு தூறல் ஜன்னலில் தெறிக்கும் சப்தம் தவிர வேறு எந்த சப்தங்களற்ற அந்த இரவில் எப்படி எனக்கு விழிப்பு வந்தது? இயல்பற்ற அமானுஷ்ய அமைதி என்னுள் ஊடுருவிற்று. அமைதி நம்மை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்புமா? நான் கையில் டார்ச்சுடன் எனது கணவரை ஒவ்வொரு அறையாய்த் தேடினேன். நிலவொளியில் சமையலறைக்கு வெளியே இருந்த வராந்தாவில் என் கணவர் ஸ்ரீதேவியைத் தழுவிக் கொண்டிருப்பதைக் கண்டேன். வேதனை தகிக்கும் உயிர்களின் முகபாவங்களையும் உடல் விறைப்பையும் வெளிப்படுத்திய அவர்கள் பந்தயக் குதிரைகள் பந்தயத்தின் முடிவில் காணப்படுவது போல் இருந்தனர். அந்த ஒரு கணம், பின் வராந்தாவை விட்டு ஓடினேன். ஒரு தொன்மையான சடங்கை சந்தர்ப்பவசத்தால் காண நேர்ந்ததைப் போன்று உணர்ந்தேன்.

அதன் பினன்ர் அரைமணி நேரம் கூட அங்கு நான் தங்கவில்லை. அந்த இடத்திற்கு அந்நியமானவளாகிவிட்டேனா? கரையோரத்தில் நடக்கும் என்னைப் பொ¢ய அலையொன்று கடலுக்குள் மூழ்கடித்திருக்கும் என்று அவர் கருதலாம். அடுத்த மாத வாடகையைக் கூட கொடுக்க முடியாத அவர் தன் துரதிருஷ்டத்திற்கும் காரணமான அந்த பெண்ணை வெறுக்கலாம். அவள் அழகு திடீரென்று ஊனமாகவும் மாறக்கூடும்.

கீழ்த்திசையில் சில ஒளிக்கீற்றுக்கள் தோன்றியிருந்தாலும் அந்த கடற்கரையில் இருள் அடர்ந்திருந்தது. அந்த இருள் புகைந்து கொண்டிருக்கும் மயானத்து சாம்பலின் நிறமாயிருந்தது. சிற்பங்களை உருவாக்கப் பயன்படும் கணிமண்ணின் எண்ணற்ற வெறிநாய்களின் முகங்களாக கொந்தளிக்கும் அரபிக் கடலோரம் நான் நடந்து கொண்டிருந்த போது நூற்றைம்பது வருட காலத்து அரூத வீடு எனக்கு அமைதியாக இறுதி விடை கொடுத்திருக்குமா?

அந்த வீட்டைத் தவிர வேறு யாரிடத்தும் அந்தக் கணத்தில் எனக்குப் பற்று ஏற்படவில்லை. என்னுடைய வாழ்வு ஒரு கனவென்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். இந்த ஓட்டம் மட்டுமே நிஜம். ஒரு காலத்தில் நான் நேசித்த மனிதனிடமிருந்தும் திருமணம் என்ற பொன் விலங்கிலிருந்தும் ஓடிப் போகிறேன் எனது கைகள் அழுத்தமாகப் பற்றியிருப்பதையும் மீறி நான் அணிந்திருந்த வெள்ளைச் சேலை நான் முன்னேறி நடக்க நடக்க பாய்மரம் போல் காற்றில் ஆவேசத்துடன் படபடத்தது. அமைதி குலைவுற்றிருந்த வேளையில் தனிமை, மேகத்தின் மென்மையுடனே என்னைப் போர்த்திக் கொண்டது. ஒரு சிறுமியாயிருக்கும் போதே அதன் தொடுதலை உணர்ந்திருக்கிறேன். கடற்காற்று ஓங்கி வீசுகையில் என் கால்கள் பிடி தளர்ந்து தள்ளாடின தண்டு வளைகள் நிறைந்த ஈரமணலில் பாதம் புதையுண்டது. அந்தத் தருணங்களில் மட்டும் புதிதாய் முளை விட்டிருக்கும் வேதனை இதயத்திலிருந்து பீறிட்டது.

கடலின் சில்லிப்பு என் பாதங்களை மரக்க வைத்தது. பறவைகள் வராந்தாவில் கீறிச்சிடும் போது, நடுமுற்றத்தில் சூரியஒளி படரும்போது அந்த இரண்டு பேரும் இறந்தவர்கள் - உயிருள்ளவர்கள் தங்கள் கண்களை கசக்கி சுற்றும் முற்றும் பார்ப்பார்கள். கனத்த மனதுடன் அங்குமிங்குமாக ஒவ்வொரு அறையாக என்னைத் தேடுவார்கள்.

சூரியனின் ஒளிக்கீற்றுக்கள் நடுமுற்றத்தின் ஓரங்களிலிருக்கும் சிலைகளின் மேல் விடும். அவை உயிர் பெறும். வயோதிகம் பீடிக்கப்பெற்ற அந்த மனிதனும் அந்த பதினேழு வயது பெண்ணும் சிலையாக மாறுவார்கள். அவர்கள் கல்வியிலும் வெறும் சிலையாக மட்டுமே இருப்பார்கள். விரிந்த நாசிகளுடைய பந்தயக் குதிரைகளின் சிலைகள் போல.

திடீரென்று கடலில் பிணவாடை வீசுவதை உணர்ந்தேன். மேலெழும்ப முயற்சிக்கும் பட்டம் போல, எனது கரங்கள் காற்றில் உறைந்து விடாதபடிக்கு அவற்றை ஆட்டிக்கொண்டே முன்னே ஓடினேன். அந்தத் தருணத்தில் சூரியன் எனது வலது கண்ணின் ஓரம் வழியே கிழக்கில் உதிக்கக்கண்டேன்.

நன்றி: Indian Literature (Original)
நன்றி: யுகம் மாறும் 1999 (தமிழில் வெளிவந்தது)

Sunday, May 23, 2004

எங்கே தவறு?

பறந்து வந்த சாப்பாட்டுக் கோப்பையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மதுமிதா குளிர்சாதனப் பெட்டிக்கும் மின்சார அடுப்புக்கும் இடையில் இருந்த இடைவெளிக்குள் புகுந்து குனிந்தாள்.

ஏழு மாதக் கர்ப்பிணியான அவளால் அந்தச் சிறிய இடைவெளிக்குள் தன்னை முழுமையாக அடக்க முடியவில்லை.
கோப்பை அவளைத் தாண்டிச் சுவரில் மோதி, அவள் ஆசை ஆசையாகச் சமைத்த சாப்பாடுகள் நிலத்தில் சிதறின.

ஏற்கனவே படபடத்த அவளது நெஞ்சு, கோப்பை உடைந்த சத்தத்தில் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் வெடவெடத்தன.

-உனக்குப் புருஷன் வீட்டாரோடை சரியான முறையில் பழகத் தெரியாது. -
சாப்பாட்டை நிலத்தில் விதைத்ததோடு திருப்பிப்படாத மகேசன் அவளை அடிப்பதற்காக கோபாவேசத்துடன் நெருங்கினான்.

அந்தச் சிறிய சமையலறைக்குள் ஒடுங்கி நிற்கும் அவளுக்கு, தன்னை எப்படிக் காத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. பயத்தில் வீரிட்டாள்.

அந்தச் சத்தத்தில் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருந்த கண்ணன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தான். மூர்க்கத்தனத்துடன் மதுமிதாவை நோக்கி விரையும் மகேசனை கட்டிப் பிடித்து மறித்தான்.

ஒரு நொடிப்பொழுது பிந்தியிருந்தாலும் கர்ப்பிணியான மதுவின் உடலின் ஏதோ ஒரு பகுதியை மகேசனின் மூர்க்கத்தனம் பதம் பார்த்திருக்கும்.
மதுவின் கண்கள் கண்ணனுக்கு நன்றி கூறின.

-என்ன மகேசண்ணை நீங்கள்........! உங்களுக்கு மதுவை அடிக்க மனம் வருதே? ஏன் இப்பிடி அவளைக் கொடுமைப் படுத்துறீங்கள்? அவள் உங்கடை தம்பி பெண்சாதியெண்டதை மறந்திட்டீங்களோ? -
கண்ணன் வேதனை இழைந்தோட வினவினான்.

-நீ என்னடா கதைக்கிறாய். அவளுக்கு நான் அவளின்ரை புருஷன்ரை அண்ணன் எண்டதே மறந்து போச்சு. நீ அதுக்குள்ளை வந்திட்டாய். - சீறினான் மகேசன்.

மகேசனின் சீற்றம் மதுவை இன்னும் பயமுறுத்த அவள் கண்ணனின் பின் ஒளிந்து கொண்டாள்.

- என்னடி அவனுக்குப் பின்னாலை ஒளியிறாய்? அவன் என்ன உனக்குப் புருஷனோடீ?-

அவனது அநாகரிகமான பேச்சைக் கேட்க விரும்பாமல் மது தனது அறைக்குள் ஓடிச் சென்று கட்டிலில் வீழ்ந்து அழுதாள்.

- ஏன் எனக்கு இந்தக் கொடுமை. இன்னும் எத்தினை காலத்துக்குத்தான் இந்த அவஸ்தைகளை நான் தாங்கோணும்! -
மனசுக்குள் வேதனை பொங்கக் கண்ணீரைச் சொரிந்தாள்.
இன்று அவளது முதலாவது திருமணநாள். அதைக் கொண்டாடத்தான் அவள் ஸ்பெஷல் சமையல் செய்திருந்தாள்.

அவளது அக்கா சுபேதாவும,; அத்தான் மகேசனுமாகத்தான் அவளை மகேசனின் தம்பி சபேசனுக்கு மனைவியாக்க இங்கு யேர்மனிக்குக் கூப்பிட்டார்கள்.

-கொம்பியூட்டர் கோர்ஸ் செய்கிறேன் - வரமாட்டேன் என்று மது மறுத்துத்தான் பார்த்தாள்.
சுவேதாதான் போனுக்கு மேல் போனாக அடித்து ஊரிலிருந்து அம்மா சகோதரர்கள் படும் கஷ்டங்களைக் காரணங்களாக்கி யேர்மனிக்கு மதுவை வரச் செய்தாள்.

வந்து ஹோல் எடுத்து, தாலி கட்டி திருமதி. சபேசன் ஆகும் வரையிலான அந்த
மூன்று மாதங்களும், மது சிட்டுப் போல் சிறகடித்துப் பறந்து திரிந்தாள்.
சபேசனின் கடைக் கண் பார்வையில் களித்திருந்தாள்.

கூட்டுக் குடும்பமாய் சுவேதா மகேசன் ஒரு அறையிலும், மது சபேசன் இன்னொரு அறையிலும், சபேசனின் நண்பன் கண்ணன் இன்னும் ஒரு அறையிலுமாக அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே, மகேசனின் நடவடிக்கையில் ஏதோ தப்பிருப்பதை மது உணர்ந்து கொண்டாள்.

குளித்துக் கொண்டிருக்கையில் திறப்புத் துவாரத்தில் நிழலாடுவதும், உடை மாற்றிக் கொண்டிருக்கையில், எதேச்சையாக உள்ளே நுழைவது போல் மகேசன் அவள் அறையில் நுழைவதும,; எதேச்சையான விடயங்கள் தான் என்று மதுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனாலும் சந்தோசமான குடும்பத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் துணிவின்றி, மௌனித்திருந்து மனதுக்குள் சஞ்சலப்பட்டாள்.

சுவேதா வேலைக்குப் போகும் நேரத்தில் தனது வேலை நேரத்தை மாற்றி மகேசன் வீட்டில் நிற்கத் தொடங்கியதுமல்லாமல் - hP போட்டுத் தா. பக்கத்திலை
இருந்து சாப்பாடு போட்டுத்தா. என்னோடை கதை....... என்று தொல்லைப் படுத்தவும், அவள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் அவளை மூர்க்கமாகத் தாக்க முற்படவும் தொடங்கிய போதுதான், அவள் துணுக்குற்று, சபேசனிடம் - உங்கள் அண்ணனின் நடவடிக்கை சரியில்லை - என்று முறையிட்டாள்.

முதலில் புரியாது விழித்த சபேசன், என்ன சொல்கிறாள் என்று புரிந்ததும்
- என்ரை அண்ணனை எனக்குத் தெரியும். நாங்கள் ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த குடும்பம். இப்பிடியான கதையளைச் சொல்லி எங்களைப் பிரிக்கலாம் எண்டு மட்டும் நினைக்காதை. - புழுவைப் போல மதுவைப் பார்த்து பொரிந்து தள்ளினான்.

வெகுண்ட மதுவின் மனதுள் அன்றுதான் சபேசனிலிருந்த காதல் மயக்கம் மெதுமெதுவாய் கரையத் தொடங்கியது. - மனைவி நான் சொல்லுறன். நம்ப மறுக்கிறானே - என்று சினப்பட்டாள்.


குழந்தை பிறந்ததும் மகிழ்வில் எல்லாவற்றையும் மறக்க முயன்றாலும், மகேசனின் அருவருப்பான லீலைகளில் வாழ்க்கையையே வெறுத்தாள். தனிக்
குடித்தனம் போய் விடுவோம் என்று சபேசனிடம் மன்றாடிப் பார்த்தாள்.

பலனில்லாது போக, அக்கா சுபேதாவிடம் தனது அவஸ்தைகள் பற்றிச் சாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தாள்.

- உனக்கு அடக்க ஒடுக்கம் இல்லை. பெரியாக்களை மதிக்கிற குணமும் இல்லை. அவரே உன்ரை அடங்காப்பிடாரித் தனத்தைப் பற்றி என்னட்டைச் சொல்லிப் பேசினவர். நீ அடங்காமல் வாழுற ஆசையிலை, சாமிப் போக்கிலை வாழுற அவரையே நாக்கூசாமல் குறை கூற நினைக்கிறாய். இப்பிடி ஒரு தங்கைச்சி கிடைச்சதை நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்கு.

சுவேதா சீறிய சீறலில் மது அடங்கிப் போனாள். ஒடுங்கிப் போனாள். அனாதையாக உணர்ந்தாள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்த வீட்டுக்குள் நடக்கும் அநியாயங்களை மென்று விழுங்கினாள்.

மகேசனுக்கு இது நல்ல வசதியாகப் போய்விட்டது. பகல் வேலையையே விட்டு விட்டு இரவில் வேலை செய்யத் தொடங்கினான்.
பகலில் இவளின் அழகிய மேனியைத் தொடுவதிலும், உரசுவதிலும் கண்ணாயிருந்தான். மறைமுகமாகக் கட்டிலுக்குக் கூட அழைத்துப் பார்த்தான். அவள் மறுக்கும் நேரமெல்லாம் மூர்க்கம் பிடித்தவனாய் அவளை அடிக்கவும் உதைக்கவும் முயற்சித்தான்.
இப்படியான சமயங்களில்தான் கண்ணன் இவர்கள் விடயத்தில் தலையிடத் தொடங்கினான்.

இந்த நரக வாழ்க்கையின் நான்கு வருட ஓட்டத்தில் மது இரண்டாவது குழந்தையையும் பெற்றிருந்தாள்.
தனிமைப் படும் நேரத்திலெல்லாம், தன்னைக் காத்துக் கொள்ள மதுவே கண்ணனை அழைக்கத் தொடங்கியுமிருந்தாள்.

அண்ணன் மேல் கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கும் சபேசனோ, கணவன் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் சுபேதாவோ தராத பாதுகாப்பை, கண்ணன் தந்ததில் கண்ணன் மீது தன்னையறியாமலே பாசமாகிப் போனாள்.

மகேசன் - அவன் உன்ரை புருசனோ - என்று கேட்கிற ஒவ்வொரு தருணத்திலும் அவளுக்கு கண்ணனிடமான மன நெருக்கம் இறுக்கமாகிக் கொண்டே போனது.

அந்த மனநெருக்கம் தப்பென்று தெரிந்தும், தப்பிக்க முடியாமல் மது தடுமாறினாள். கட்டிய கணவன் பக்கத்தில் கட்டிலில் து}ங்கிய போதும், மனம் துப்புக் கெட்டு பக்கத்து ரூம் கண்ணனைத் தொட்டுத் தொட்டு வருவதைத் தடுக்க முடியாமல் தவித்தாள்.

நான் என்ன கெட்டவளா? ஏன் இப்படியானேன்? தன்னையே கேள்விகளால் துளைத்தாள்.

-சபேசன் என் கணவன்தான். ஆனாலும் காதலிக்க முடியவில்லையே. வெறுப்பில்லா விட்டாலும் மனதால் விரும்ப முடியவில்லையே!
ஏன் இப்படியானது? இவனுடனான நான்கு வருட வாழ்க்கை கசந்து விட்டதா? அல்லது கசக்க வைத்தானா?

பருந்தாகத் திரியும் இவன் அண்ணன் முன் நான் கோழிக்குஞ்சாய் நடுங்குவதைக் கூடக் கண்டு கொள்ளத் தெரியாத இவனை என்னால் கணவனாகவே கருத முடியவில்லையே! - தானே தனக்குப் பதிலும் சொன்னாள்.

இரவு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், மது நினைவுகளால் கண்ணனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.

சந்திரவதனா
யேர்மனி


ஒரு பிற்குறிப்பு
-------------------------
ஐந்து வருடங்களின் பின் கலாச்சாரமும் பண்பாடும் தன் கழுத்தை நெரித்து விடப் போகிறதே என்ற பயத்தில், குடல் தெறிக்க ஓடிய மது, வேகமாக வந்த ரெயின் ஒன்றில் மோதி, யேர்மனிய நகரமொன்றின் தண்டவாளங்களில் இரத்தமும் சதையுமாகச் சிதைந்து போனாள்.
அவளைக் கூட்டி அள்ளி.................!


பிரசுரம் - ஈழமுரசு (30 செப்டெம்பர் - 06 ஒக்டோபர் 1999)

Saturday, May 22, 2004

விடுபடல்

சு. தர்ம மகாராஜன் - இலங்கை

தன்னைச் சூழவுள்ள மனிதர் கூட்டத்திலிருந்து விலகி, மனித நடமாற்றமற்ற நிசப்தமான ஒரு பிரதேசத்தின் ஒரு மூலையில் அடங்கி இருக்க வேண்டும்போல், அவளது உள் மனது தனிமையைத் தேடித் தவித்தது. சுற்றிலும் தாக்கும் பார்வைக் கணைகளிலிருந்து தப்புவதற்கு தனிமைக்குள் அடங்கினால்தான் முடியும். வாழ்க்கையின் பல பிரச்சனைகளின் இறுதித் தீர்வு அதிர்ஷ்டவசமாக அவளுக்கு தனிமையில்தான் கிடைத்திருக்கிறது. யாருடைய தலையீடுகளையும் பொருட்படுத்தாது, ஒரு கணத்தில் குற்றவாளியாகவும், இன்னுமொரு கணத்தில் குற்றம் சாட்டுபவளாகவும், சில நேரங்களிலே தானே ஒரு நீதிபதியாகவும் நின்று, தன் மனத் தவிப்புகளுக்கான பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள தனிமை உதவியாய் இருந்திருக்கிறது.

தனது இருபத்தியாறாவது வயதில், முதல் காதல், சாதியாலும், பணத்தாலும் முறித்துக் கொண்டு விலகியபோது, உலகமே வெறுத்துப்போய் துவண்டு வீழ்ந்திருந்தபோது, தனிமைதான் தீர்வு கொடுத்தது. காதலன் எனும் வேஷத்தில், அவன் தன்னை பயன்படுத்தி, ஆசைகள் கொடுத்து, இறுதியாய் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கித் தள்ளிவிட்டபோது, அவள் உண்மையிலும் வாழ்க்கையின் இறுதிக் கிடங்கில் வீழ்ந்ததைப் போல்தான் உணர்ந்தாள். கிடங்கின் ஒரு மூலையில் ஒதுங்கும் தவளையைப்போல், வீட்டின் ஒரு அறையில் அடங்கி, குடும்பத்தின் வசவுகளிலிருந்தும், சமூகத்து பார்வைக் கணைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டாள். அந்த ஒதுங்கலிலான தனிமை, அவளை உசுப்பிவிட்டது. வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்போனவளுக்கு, அதிர்ஷ்டவசமாய் தனிமையின் சிந்தனை மீளெழச் செய்தது. அன்றிலிருந்து, துக்கமானாலும் தனிமை, மகிழ்ச்சியானாலும் தனிமை. யாருடைய உதவியுமின்றி தனிமையாய் மன உணர்வுகளை தனக்குள்ளேயே பகிர்ந்து உள்வாங்கிக் கொள்ள பழகிக் கொண்டாள்.

இன்றும் அப்படித்தான், தனிமை தேவைப்படுகிறது. உள்ளத்துள் உருண்டுக் கொண்டிருக்கும் இனம் காண முடியாத, கணக்கும் உருண்டையை உடைக்க மனம் தனிமையைத்தான் தேடுகின்றது. தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டம் தானாய் கலையும் மட்டும் காத்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.

பார்வைக்கு நேரே தெரியும் யன்னலினூடாக வெளியே நோக்கினாள். அங்குமிங்கும் நடமாடும் சனத்துக்கிடையே, வெள்ளைக் கொடிகளாலான அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் மனதுக்குள் இருக்கும் அந்த உருண்டை, மேலும் கீழும் வேகமாய் உருளத் தொடங்கியது.

நான்கு வருடங்கள் தட்டிக் கழித்தலின்பின், குடும்ப நெருக்கடியில் நசிந்து, மனதின் விருப்பம்கூட எண்ணாது, குமாருக்கு கழுத்தை நீட்டியபோது, பல அலங்காரங்களோடும், மேள முழக்கங்களோடும், பல பெரியோர்கள் ஆசிர்வாதங்களோடும்தான் கழுத்தில் தாலி ஏறியது. கழுத்தில் தாலி கனக்க, உடல் மேல் அவன் தேகம் கணக்க, சாராய நெடியுடனான முதலிரவின் வேதனை தனிமையைத்தான் தேடியது. தேகங்களின் உணர்வுப் பகிர்தலில் அவனது சுயநலம் அவளை தனிமையில் கண்ணீர் வடிக்க வைத்தது. எல்லை மீறிய போதையுடனான அவனது செயற்பாடுகள் ‘‘போகப் போக சரியாயிடும்’’ என்கிற பெரியோரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து சகித்துக் கொண்டாள்.

வாரத்தில் நான்கு நாட்கள், இரவில் அவனது எல்லை மீறிய குடிபோதையும், அதன் பின்னாலான பலாத்காரமான புணர்தலும், தவிர்த்து ஒதுங்கிய போதான அடியையும், உதையையும் அவள் தனிமையோடு பகிர்ந்து கொண்டாள்.

இரவுகள் என்றாலே பயம், எங்கேயாவது ஓடி ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்ற, அவளது தனிமையான தீர்வு, வயிற்றில் உருப்பெற்றிருந்த கருவும், அதனது சகமான வருடலாலும் மெய்மறக்கச் செய்தது.

தனது இரண்டாவது கரு, குடிபோதையில் அவன் உதைத்த உதையால் கலைந்துபோன போது, தளர்ந்த வாழ்க்கையின் பிடிப்பு, தன் இரண்டு வயது பிள்ளையின் மழலை மொழியின் தனிமையில் மீண்டும் பற்றிக் கொண்டது.

போகப் போக தேகத்தின் இச்சை இறந்துபோய், ஒவ்வொரு இரவும் அவனுக்கு, ஒரு பிணமாய் புணர்தலில் ஈடுகொடுத்தாள். குடிபோதையின் இயலாமையும், அதனாலான நரம்பின் வீரியக் குறைவும் அவனை பாதியிலேயே சோர்வடையச் செய்தது. அவனது சோர்வும், இயலாமையும் அவளில் சந்தேகம் கொள்ள வைத்தது. சந்தேகத்தின் உச்சத்தில் ஊர்கூட்டி வார்த்தைகளால் அவள் துகிலுரித்தான்.

அவளது மானம்காக்க கிருஷ்ணர்கள் வரவில்லை. பதிலாக தமக்கிடையே கோடு போட்டு பிள்ளையோடு முடங்கிக் கொண்டாள்.

அவள் கணவனை உதறிய சமூகம், அவளை பரிதாபமாய் விமர்சனம் பண்ணியது. ஆனால், அவனிடமிருந்து விலகவிடாது அவளை கலாசாரத்தால் நசுக்கியது.

தன் பிள்ளையின் எதிர்காலம் நினைத்து, திருமணமாகி ஐந்து வருடங்களின்பின், முதன் முதலாய் கணவனின் எதிர்ப்பையும் மீறி வேலைக்குச் சென்றாள். எப்போதும் போல் தனிமைதான் அவளுக்கு அந்த தீர்வைக் கொடுத்தது. ஆரம்பத்தில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவன், பின் ஏனோ பேசாது விட்டு விட்டான்.

அவள் உழைப்பின் சந்தோஷத்தைப் பிள்ளையோடு தனிமையில் அனுபவித்தாள். சந்தோஷமாய் வேலைவிட்டு வீடு திரும்பிய ஒரு பொழுதில்தான், அவன் விபத்தில் இறந்த செய்தி கிடைத்தது. ஏனோ மனம் பதறவில்லை. நிதானமாய் ஹாஸ்பிடல் செல்ல, அவளுக்கு முன்னமேயே அவன் உறவுகள் கூட்டம் கூடியிருந்தது.

வீடு திருமணத்திற்கு பின், அவனது மரணத்தில், சனநெரிசலால் நிறைந்து காணப்படுகிறது. தனிமையையே நாடிப் பழகியவளுக்கு, அதிகளவான சனநடமாட்டம் தொந்தரவைக் கொடுத்தது. ஒரு அறைக்குள்ளேயே அடங்கியவளை, உறவினர் கூட்டம் இழுத்து வந்து, சவத்தினருகே குந்த வைத்து, வேடிக்கைப் பார்த்தது. பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு, ஒன்றும் செய்வதறியாது மரக்கட்டையாய் அவளும் வேடிக்கைப் பார்த்தாள்.

இன்று இரண்டாவது நாள். இன்னும் சிறிது நேரத்தில் அவனது இறுதிப் பயணம். அவள் மனம் தவித்தது. ஆவல் கொண்டது. எதற்காகவென்று இனம் காண முடியாது தடுமாறியது. பிள்ளையின் தலை வருடியவாறே உயிரற்ற அவனது முகத்தைப் பார்த்தாள். போதை வெறியில் வாயில் எச்சில் வடித்தபடி, புணரத்துடிக்கும், அந்த விகாரமான முகத்தைவிட, உயிரற்ற உப்பிய முகம் சற்ற ஆறுதலை அளித்தது.

மரண வீட்டில் கூட்டம் சலசலத்தது. அவளை பெண்கள் கூட்டம் தனியறையில் அமர்த்தியது. திருமணத்திற்கு பின் மீண்டும் ஒரு அலங்காரம். அவள் நினைவுகள் பின் நகர்ந்து மீண்டன. அறையிலுள்ள சிறுயன்னலினூடாக பார்வையை செலுத்தினாள். அவனுக்கான இறுதி மரியாதை செலுத்துவதில் குழுமியிருந்த கூட்டம் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்மனம் வெளிக்காட்ட இயலாத ஒரு உணர்வால் நிறைந்திருந்தாலும், அதன் கனம் முனனிலும் பார்க்கக் குறைவதை உணர்ந்தாள். அக்கூட்டத்தினரிடையே தன் பிள்ளையின் முகம் கண்டு மனம் பதறியது. கண்கள் நீர்த்திரையால் வெளிகாட்சிகளை மங்கலாக்கின.

இப்போது அவளுக்கான நேரம். ஒரு சில சடங்குகளை முடித்து, இரு பெண்கள் கைப்பிடித்து சவத்தினருகே புரட்டிப் போட்ட ஒரு உரலில் அவளை அமர வைத்தார்கள். அவர்களது முகத்தில் அப்பியிருந்த சோகம் கண்டு, அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. தனக்குள் இல்லாத ஒன்று, அவர்களுள் வெளிப்படுவதில் இருந்த ஹாஸ்யத்தை மனதுக்குள்ளேயே ரசித்தாள். சவத்துக்கு முதுகுகாட்டி அமர்ந்ததில் மனதுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது.

நேரம் போகப் போக, அவள் மனது இருப்புக் கொள்ளவில்லை. சடங்குகளினாலான சங்கடத்தை தவிர்க்க தலையை கவிழ்த்து நிலம் பார்த்தாள். அவளை சுற்றியிருந்த பெண்களின் கால்கள்தான் கண்ணில் பட்டது. அவை தன் கால்களிலும் பார்க்க நேர்த்தியாக இருப்பதைப் போல் தோன்றியது. திடீரென்று பெண்களிக் கால்களது இடமாற்றம் அவளை உசுப்பியது.

ஒரு சீலையின் மறைவில் இரு பெண்களது உதவியோடு அவள் அணிகலன்கள் கழன்ற வீழ்ந்தன. நெற்றிப் பொட்டு துடைக்கப்பட்டது. இறுதியில் ஒரு வெட்டவெளி அமைதியில், அவளது கழுத்தில் கனத்துக் கொண்டிருந்தது அறுந்து வீழ்ந்தது. அவள் கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் துளிகள் வழிந்து கன்னத்தில் உருண்டோடின.

ஏதோ ஒரு இருக்குப் பிடியிலிருந்து விடுபட்டதைப் போல், அவள் நெஞ்சுக் குழியிலிருந்து பலமாய் ஒரு பெருமூச்சு வெளிவந்தது.

முற்றும்

சு. தர்ம மகாராஜன்
இலங்கை