Friday, July 22, 2005

உதிராத சருகுகள்

- ஆதிலட்சுமி சிவகுமார் -

வானத்தில் கருமுகில்கள் கூட்டம் கூட்டமாய் நகர்ந்து கொண்டிருந்தன. மழையும் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. மூன்றடி ஒழுங்கைக்குள் ஒற்றையடிப்பாதை தவிர இருமருங்கிலும் புற்கள் மூடி இருந்தன. புஸ்பராசா வீட்டு மதில்கரை ஓரங்கள் மட்டும் புற்கள் செதுக்கப்பட்டு அழகாகத் தெரிந்தது.

மழை பெரிதாகப் பெய்வதற்குள் வீட்டுக்குத் திரும்பிவிடவேண்டும் என்ற நினைப்போடு முத்துராசா சயிக்கிளை இறுக்கி மிதித்தான். பிரதான சாலையில் ஏறியதும்.... வாகனப் போக்குவரத்துகள் அதிகமாயின பாடசாலைப் பிள்ளைகளும் கூட்டம் கூட்டமாய் போய்க் கொண்டிருந்தார்கள்.

"நல்ல மரக்கறியாப்பார்த்து வேண்டிக்கொண்டு வாங்கேப்பா.... இவ்வளவு நாளும் இருந்து போட்டு .... தம்பியும் விரதநாளில வந்திருக்கிறான்....."

மனைவி கூறிவிட்ட வார்த்தைகள் திரும்ப ஞாபகத்துக்கு வந்தன. சயிக்கிளை பாதுகாப்பு கொட்டிலுக்குள் நிறுத்திவிட்டு மரக்கறி வாங்கும் பையை சயிக்கிளில் இருந்து கழற்றிக் கொண்டு திரும்பினான் முத்துராசா ‘முத்து’.....

திரும்பிப் பார்த்தான். நாகராசா நின்றான். "விடிய வெள்ளண எங்ககையடா இந்தப்பக்கம்?.....’"

"தம்பி லீவிலை வந்துநிக்கிறானடா.... அதுதான் நல்ல மரக்கறியா ஏதும் பாப்பமென்டு...’"

"என்னடா.... லீவிலை வந்துநிக்கிறவனுக்கு மரக்கறியோ சாப்பாடு..."

"மனிசியும் மூத்தவளும் கவுரிவிரதமடா.... அதுகளின்ர விரதத்தை நாங்கள் ஏன் குழப்புவான்?..."

"அதுகும் சரிதான்.... அதோடை எங்கடை வைரநாதனெல்லே இத்தாலியிலை இருந்து வந்திருக்கிறான்.... உனக்குத்தெரியுமா....’"

‘தெரியாது..... எப்பவந்தவன்?.....
‘மூண்டாந்திகதி வந்ததெண்டு சொன்னவன்.... ரெண்டு கிழமை நிற்பான்போல.... உன்னையும் எப்படியிருக்கிற தெண்டு விசாரிச்சவன்?...’ நெஞ்சுக்குள் ஏதோபாரம் ஏறினமாதிரி இருந்தது.

‘வேற என்ன?.... வரட்டே...’
நாகராசா சயிக்கிள் பாதுகாப்பிடத்துக்குப் போனான். சந்தைக்குள் மரக்கறிகளை இப்போதுதான் வெளியே எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். வழமையாக அந்த அம்மமவிடம் தான் முத்துராசா மரக்கறி வாங்குவான். அவவின் கணவர் யாழ்ப்பாணத்தில் விமானக்குண்டு வீச்சில் இறந்துவிட்டார். இடம் பெயர்ந்து பல துன்பங்களுக்கு மத்தியில் சுந்தையில் மரக்கறி வியாபாரம் செய்யும் அவளிடம் தான் முத்துராசா வாழ்க்கையாக வாங்குவான். சில வேளைகளில் கையில் காசு தட்டுப்பாடாய் இருக்கிற பொழுதுகளிலும் கடனாக மரக்கிறகள் வாங்குவான். முத்துராசாவின் மனைவி மாமிசம் உண்பதில்லை. பிள்ளைகளுக்கும் அவனுக்கும் மட்டும் சமைத்துத் தருவாள்.

கலியாணம் செய்த புதிதில் இறைச்சி அது இது என்று சாப்பிடா விட்டாலும் சிறிய மீன், முட்டை என்று சாப்பிட்டுவந்தான். மூத்தவன் வீட்டைவிட்டுப் போனபிறகு அததையும் அவள் சாப்பிடுவதில்லை. ‘நீ சாப்பிடாட்டி பிறகென்னத்துக்கு எனக்கு?...’
அவனும் மறுத்துப்பார்த்தான்.

‘நீங்கள் உடம்பை முறிச்சு வேலை செய்யிறநீங்கள்.... இதையும் விட்டா பிறகென்ன?.....

அதற்குப்பிறகு. அவன் எதுவும் சொல்வதில்லை. கொடுப்பதை வாங்கிச்சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவான்...... ஆனாலும் சாப்பிடுகிறவேளைகளில் உள்ளே ஏதோ உணர்வு மாறும்.

பிரதானவீதியில் ஏறமுயன்ற பாரஊர்தி ஒன்று எழுப்பிய அவலஒலியில்.... நடுங்கிப்போய் முத்துராசாவின் சிந்தனைகள் அறுபட்டன. பாரஊர்தி அவனை விலத்திக்கொண்டு விரைந்தது.

இப்போது அவன் மனதை இத்தாலியிலிருந்து வந்திருக்கும் வைரவநாதனின் நினைவுகள் ஆக்கிரமித்தன.

வைரநாதனும் முத்துராசாவும், நாகராசாவும் ஒன்றாகப் படித்தவர்கள். முத்துராசாவுக்கும், நாகராசாவுக்கும் குடும்பத்தில் வறுமை கோலேசியது.

நாகராசா ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டு வயலுக்குள் இறங்கிவிட்டான். முத்துராசா இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு பல்லைக்கடித்து க.பெ.த உயர்தரம் வரை படிப்பை இழுத்துப் பார்த்தான். அதற்குமேல் முடியாதென்று தோன்றியது....குமாரசுவாமி என்கிற பிரபல கட்டிட ஒப்பந்தகாரருடன் நாட்கூலியில் சோந்து கொண்டான்.

வைரவநாதன் க.பொ.த உயர்தரச் சோதினையை மூன்றுதரமும் எடுத்து விட்டு... இரண்டு வருடங்கள் சவுதியில் போய் நின்றான். அங்கிருந்து வந்தபிறகுதான் திருமணம் செய்தான். திருமணம் செய்த இடமும் பெரும் வசதியான இடமென்று சொல்லிவிட முடியாது. இவனுடைய கையை அவர்களும் எதிர்பார்த்தார்கள்.

தெரிந்தவார்கள், நண்பர்கள், பழக்கமானவர்கள் என்று எல்லோரிடமும் கடன்பட்டடான். பொய்கள் தாராளமாய்பிறந்தன. வாங்கிய கடனின் வட்டி சுமையானது.

எப்படியோ வைரவநாதன் கொழும்புக்குபோய் யாரையோ பிடித்து இத்தாலிக்குப் போய்விட்டான். அவனுடைய நான்கு பிள்ளைகளும்.... மனைவியும் இரண்டுவருடங்கள் சொல்லொணாத் துன்பப்பட்டார்கள். பிறகு வைரநாதன் காசனுப்பித் தொடங்கி விட்டான். மளமளவென்று கடன்கள். அழிந்தன. வீடு உயர்ந்தது. வீட்டைச்சுற்றி மதில் எழுந்தது.

மூத்த பெண் பெரியவளானள். ஊர் முழுவதையும் அழைத்து விருந்து போட்டு பெரிதாக சாமத்திய வீடு செய்தார்கள். முத்துராசாவும் வேலையால் வந்து குளித்து – மகளையும் கூட்டிக் கொண்டு போய் சாப்பிட்டுவிட்டு வந்தான். மூன்று நாட்களாக போன எல்லோரையும் வீடியோப்படம் பிடித்தார்களாம்.

இப்போது பதின்நான்கு வருடங்கள் கழித்து வைரவநாதன் ஊருக்கு வந்திருக்கிறான் பெரும் தனவந்தனாக.

ஊரில் பிள்ளையார்கோயில் கோபுரத்தை இடித்து புதிதாக உயர்த்திக் கட்டுகிறார்கள். திருப்பணிகள் இன்னமும் முடியவில்லை. இந்த கட்டிட நிதிக்கு வைரவநாதன் இரண்டு லட்சம் கொடுத்திருக்கிறானாம்.

பதின்நான்கு வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு வந்திருக்கிறவன் அதுவும் ஊரிலே பெரிய பணக்காரன் தன்னை விசாரித்ததாக நாகராசா சொன்ன நம்ப முடியாமலுமிருந்தது முத்துராசாவுக்கு முத்துராசாவின் மனைவி கோயிலில் வைரவநாதனின் மனைவியைக் காண்பதாக கூறுவதுண்டு. ஆனால் கதைபேச்சு என்று ஒன்றுமில்லை சிலவேளைகளில் முத்துராசாவும் வழிதெருவில் அவளைக் கண்டிருக்கிறான். அவள் சிரித்ததில்லை. ஒருவேளை புருசன் ஊரில் இல்லாதபோது அவனுடைய நண்பர்களைப் பார்த்து ஏன் சிரிக்க வேண்டும் முத்துராவின் மனதில் வைரவநாதனைப் பார்க்கவேண்டுமென்ற உந்துதல் இருந்தாலும்....அன்றாடவேலை நெருக்கடிகள் அதற்கு இடம்தரவில்லை. மூத்தவளுக்கு திருமணம் பேசி வந்தது. ஒன்று விட்ட சகோதரியின் மகன் தான். ஆனால் அவர்கள் எதிர்பார்கும் ‘ஏதோ முடிஞ்சளவு கொஞ்சமென்றாலும்’ கூட கொடுக்க வசதியில்லாமல் இருந்தது.

அடுத்தவனுக்கு வவுனியா கல்வியயற் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்தது. அவனுடைய படிப்புச் செலவுக்கு என்னசெய்யலாம் என்று மனம் துடித்துக்கொண்டிருந்தது.

கடைக்குட்டி சோபிதா ஒன்பதாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். அவளையும் எப்படியாவது படிப்பித்துவிடவேண்டுமென்ற ஆசை இருந்தது.

சனிக்கிழமை தலைமுடி அளவுக்கு மிஞ்சி வளர்ந்துவிட்டதாகவும்.....அதை எப்படியாவது ஒழுங்காக்குமாறும் முத்துராசாவை மனைவி சிலநாட்களாய் நச்சரித்துக் கொண்டிருந்தாள். இன்றைக்கு தலைமுடியை வெட்டியபிறகே என்னவேலையென்றாலும் செய்வது என முத்துராசா முடிவெடுத்து... புறப்பட்டான். கடையில் அவ்வளவாக ஆட்களில்லை.

யாரோ ஒருவயதானவருக்கு முடிவெட்டி முடிந்திருந்தது. அவர் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

‘அண்ணை வாங்கோ...’
இப்போது முத்துராசாவின் முடிவெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. முடி வெட்டிக்கொண்டிருந்த போது தான் வடிவாக தன் முகத்தை கண்ணாடியில் பார்தான் முத்துராசா.... சொக்கைகள் இரண்டும் உள்ளிறங்கி தலையிலும் நரை அதிகரித்திருந்தது. கண்களும் சாடையாக உள்ளே போனமாதிரி......

சம்பந்தமில்லாமல் மனைவியின் நினைப்பும்வந்தது. மனைவி பேரழகி என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் மிகுந்த சகிப்புத்தன்மை உள்ளவள் என்ற ரீதியில் அவள் உயர்ந்வள் என நினைத்துக்கொண்டான்.

முத்துராசா காசைக் கொடுத்துவிட்டு வெளியேவந்தான். சயிக்கிளை எடுத்து ஏறமுன்றபோது அருகே யாரோ நடந்து வருவது தெரிந்து. திரும்பிப்பார்த்தான். சட்டென்று அடையாளம் தெரிந்துது. ‘வைரவநாதன்...’

தன்னையும் அறியாமல் முத்துராசாவின் குரல் உயர்ந்தது.
‘ஓ... நீ... முத்தெல்லே....’

இரண்டுகைகளையும் பற்றி இழத்து..... கட்டி அணைத்தான்.

‘எப்பிடி இருக்கிறாய்?....’

‘எனக்கென்னடா... நான் நல்லாத்தான் இருக்கிறன்.....’
‘வீட்டைவாவன்...’

‘இப்பிடிச்சும்மா வாரக்கூடாது.... பிறகொருநாளைக்குவாறன்.... உன்னைக் கண்டவுடனை நிறையக் கதைக்கவேணும் போல கிடக்கு....’ கண்களிற் சிவப்புத் தெரிந்தது.

‘எங்கேயோ குடித்துவிட்டு வருகிறானோ...’ ஊடுருவிப்பார்த்தான். பார்வையை அவன் புரிந்துகொண்டானோ என்னவோ.

‘என்னடாப்பா அப்பிடிபாக்கிறாய்...கோயிலடியால போவம்.....மடத்திலை இருந்து கொஞ்சநேரம் கதைச்சிட்டு போவம்...’

இருவரும் மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். ‘இப்ப என்ன வேலை செய்கிறாய்?....’

‘எங்கடை ஆக்களோடைதான்... இப்ப சண்டையில்லைத்தானே... படம் நடிக்கிறன்...நாடகம் நடிக்கிறன்....பாடுகிறன்...ஏதோ முடிஞ்ச எல்லாம் செய்யிறன்......’

உதடுகள் சொல்லிக்கொண்டாலும்.... மனம் சுவர்கரைந்த வீட்டையும்..... கிழிந்தசட்டையைத் தைத்து அணிந்திருக்கும் மனைவியையும் சடாரென்று ஒருகணம் நினைத்தது.

‘நீ குடுத்து வைச்சனியெடாப்பா.....’

‘எங்கடை நாடகங்கள்...... கூத்துக்கள் எல்லாம் பாக்கிறனியோ அங்க...... வீடியோவில வெளிநாடுகளுக்கெல்லாம் வாறது.......’

அவன் தலையைக் குனிந்து கொண்டு தலையை ஆட்டினான். அவனிடமிருந்து பெருமூச்சொன்று விடுதலை பெற்றது.

மடத்தடி வெறிச்சோடிக்கிடந்தது. பெரிய வேப்பமரத்திலிருந்து நியையப் பச்சை இலைகள் உதிர்ந்து விழுந்து கிடந்தன.

வைரவநாதனும் முத்துராசாவும் முதற்படியிலேயே அமர்ந்துகொண்டார்கள். குரங்குகள் சில நான்கு கால்களில் நடந்து போய்க்கொண்டிருந்தன. ‘நான் உண்மையைச் சொல்லவிரும்புறன்....’


‘இவன் என்னத்தைச் சொல்ல விரும்புகிறான்...ம்...’ மௌமனயாயிச் சில கணங்கள் கழிந்தன.

‘அங்கை எங்கட வாழ்க்கை எப்பிடியிருக்குமெண்டு நீ அறிய விரும்புவாயெண்டு நினைக்கிறன்....’

‘.........’

‘வேலை.... வேலை...வேலை..... இதத்தவிர சத்தியமா எனக்கொண்டும் தெரியாது.....’

காற்று குளிர்iiயாய் வீசியது. மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து நான்கு திசைகளும் பரவின. மழை எந்தக்கணத்திலும் கொட்டலாம், எங்கோ பார்த்துக் கொண்டிருந்த முத்துராசா வைரவநாதனைப் பார்த்தானர். மெல்லிய மஞ்சள் நிறம்..... கருகருவென்ற முடியும் மீசையும் . கைவிரல்கள் இரண்டில் பெட்டி மோதிரங்கள்...... தொப்பைவிழுந்த உடம்பு... ‘உண்மையா முத்து...விடிய எழும்பினா ரயிலைப் பிடிச்சு வேலைக்கு ஓடோணும்..... வேலையில இறங்கினா எதுவும் நினைக்க வராது.... சமைச்சு சாப்பிட்டுப் போட்டு...... மிச்சத்தை பிறிச்சுக்குள்ள தள்ளிப்போட்டு.... படுப்பன். பிறகு விடிய....’ நிறுத்தி விட்டு முத்துராசாவைப்பார்த்தான்.

‘..........’

‘இப்பிடி ஓடிஓடித் தான்ராப்பா வீட்டுக்கு காசு அனுப்புறம்....’
அவனின் கண்களில் நீர் நிறைந்தது. முத்துராசா அவனின் முதுகில் தட்டினான். ‘நீங்கள் எங்களை ஏற்றுக்கொள்ளுவியளோ எண்ட குற்ற உணர்விலை..... குனிஞ்சு கொண்டுதான் வந்தனான்......ஆனா... எங்களில நீங்கள் காட்டுற கரிசனை...’
தலையை ஆட்டி பற்களை உதடுகளால் கடித்தான். அவன் தொடந்து வார்த்தைகளற்றுச் சிரமப்படுவது புரிந்தது. அது இவனுக்குள் ஒருவித உற்சாகத்தை தந்த மாதிரி இருந்தது.
‘எழும்பு மச்சான்...... வீட்டைபோவம்.....’
இருவரும் எழுந்தார்கள். மழைத்தூறல் விழ ஆரம்பித்தது. அதைப் பொருட்படுத்தாமல் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

nantri-erimalai-april-2005