Wednesday, February 18, 2004

ஒரு கட்டுக்கதை

அம்பை

பன்றி என்னுடன் சம்பாஷிக்க வந்தபோது மாலை ஆறரை மணி இருக்கும். ஒரு பதினைந்து இருபது குட்டிகளாவது இருக்கும் தொளதொளத்துத் தொங்கிய அதன் வயிற்றில். சாக்கடையில் புரண்டுவிட்டு வந்திருந்தது. மேல்உடம்பு கன்னங்கரேல் என்று சாக்கடைத் தண்ணீரில் பளபளத்தது. கீழே, வயிறு சதையின் நிறத்தில் கட்டிகட்டியாய்த் தொங்கியது.

''இதோ பார். எனக்குப் பேச வேண்டும்'' என்றது.

''என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?'' என்றேன்.

''உன் புத்திசாலித்தனமான, தீட்சண்யமான கண்களைக் கண்டு உன்னைத் தேர்ந்தெடுத்தேன் என்றெல்லாம் சொல்வேன் என்று எதிர்பார்க்காதே. பார்க்கப்போனால் அப்படி ஒரு ஒளியும் எனக்குத் தெரியவில்லை. பார், நான் ஒரு பன்றி. எனக்குப் பேச வாய்ப்புக் கொடு. பொழுது போகாமல் திண்டாடும் பன்றி நான்'' என்றது.

அப்படி புகழ்ச்சியில் மயங்கும் நபர் இல்லை நான். இருந்தாலும் இது கொஞ்சம் அத்து மீறிய ஆணவமாய்ப் பட்டது.

''இதோ பார், எனக்கு நேரம் இல்லை'' என்று சூடாகச் சொல்வதற்குள் குட்டிகள் தொங்கும் பகுதியைப் பக்கவாட்டில் தழையவிட்டு அமர்ந்துவிட்டது பன்றி.

''சரி பேசு'' என்றேன்.

''பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்றது, பெருத்த தலையைக் கீழே சாய்த்தபடி.

''என் காதில் விழவில்லை''

''மெளனமாய்ப் பேசுகிறேன்'' என்றது.

ஆணவப் பன்றிகளுக்கு அடுத்தபடி என்னால் பொறுக்க முடியாதது வேதாந்தப் பன்றிகள். அசுவாரஸ்யமாய்த் தலையைத் திருப்பிக் கொண்டடேன் எதிர்ப்பக்கம்.

''சும்மா தமாஷ். ஜனங்கள் மிருகங்களின் வாயிலிருந்து ஞானம் சொட்டும் சொற்கள் வரும் என்று நினைக்கிறார்கள். நீதிக் கதைகளில் ஓட விடுகிறார்கள். 'சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்' போன்ற நீதியை உதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குப்பையில் அளைந்து, சோர்ந்து, சலித்துப்போன பன்றி நான். ஞான சம்பந்தமான விஷயங்களில் எனக்கு ஈடுபாடில்லை'' என்றது.

''எதைப் பற்றித்தான் பேச விரும்புகிறாய்?''

''உங்கள் கட்டடத்தின் வாயிற்கதவு பற்றி.''

மாடியும் கீழுமாய் ஆறு வீடுகள் கொண்ட கட்டடம் அது. அடுத்தாற்போல், முள்வேலியால் இரு பக்கமும் அடைக்கப்பட்ட வெற்று மனை. வெற்று மனை என்று சொன்னது பேச்சுக்காத்தான்.குடிசை ஜனங்களின் கட்டணம் இல்லாத கழிப்பிடம் அது. பன்றிகளின் வாசஸ்தலம். மத்தியான வேளைகளில் ஜன்னல் அருகே ட்ரியோ ட்ரியோ என்று கூச்சம் கேட்கும். பன்றிகள் ஓடும். சில சமயம் தெரு ஆரம்பத்திலுள்ள சந்தில் நுழையும் போது க்ஹே க்ஹே என்று ஆரம்பத்திலுள்ள ச்நதில் நுழையும்போது க்ஹே க்ஹே என்று மூச்சு சீறும் கதறல் கேட்கும். நின்றால், ''போயிட்டேயிருங்க. பன்னி அடிக்கிறாங்க'' என்று தள்ளி விடுவார்கள்.

''எதுக்கு, எதுக்குப்பா அடிக்கிறாங்க?''

''எதுக்கு அடிப்பாங்க? சாப்பிடத்தான். நவந்துகிட்டே இருங்க.''

கட்டடத்தின் வாயிற்கதவில் ஒருநாள் நுழையும் சதுர அளவு இடம் இருந்தது. பலமுறை, துரத்தப்பட்ட பன்றிகள் அதில் நுழைந்து ஓடும். அதை மூடிவிடும் யோசனை இருந்தது.

''அந்த நுழைவாயில் எனக்குப் பிடிக்கிறது. அதில் நான் ஆனந்தமாய் நுழைய முடிகிறது. நாலு பக்கமும் முள்வேலி இருக்க, நுழைவதற்கான வாகான இடம். பரபரவென்ற நான் ஓடும்போது சுவர்க்கக் கதவு மாதிரி எனக்குத் திறந்து வழிவிடுகிறது. அதைப்பற்றிப் பேச எனக்குப் பிடிக்கிறது. ஒரு பன்றிக்குத் தேவை, நுழையக் கூடிய கதவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.''

வோட்ஹவுஸின் புத்தகங்களின் செல்லப் பன்றி நினைவுக்கு வந்தது. பிரபுவின் கொழுத்த ரோஜா வண்ணப் பன்றி. போட்டிகளில் பரிசு பெறும் பன்றி.

அதைப்பற்றிச் சொன்னேன்.

அமெரிக்கப் பன்றிப் பண்ணைகளில் கொழுக்கவைக்கப்பட்டு, வலியில்லாமல் இறக்கும் பன்றிகள்பற்றிச் சொன்னேன். வலியில்லாமல் இறப்பது ஒரு பெரிய சலுகைதான் என்ற. நிறம்பற்றி அவ்வளவு சுவாரஸ்யம் காட்டவில்லை. சாகப்போகிற பன்றி கறுப்பானால் என்ன, ரோஜா வண்ணமானால் என்ன என்றது. மற்றவர்கள் சாப்பிடுவதற்காக இறப்பதுப்பற்றி ஒரு ஆட்சேபனையும் காட்டவில்லை. அதுபற்றிக் கேட்டபோது ஆட்சேபணை காட்டக்கூடிய அதிகாரம் உள்ள நிலையில் தான் இல்லை என்று பேச மறுத்துவிட்டது. சிறிது நேரம் மெளனத்தில் கழிந்தது.

''சாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றேன்.

''அது ஒரு பெரிய கழி'' என்றது. ''நீளமாய், உருண்டையாய் இருப்பது. இரும்பாலோ, மரத்தாலோ ஆனது. இரும்பானால் ஆசனத்திலிருந்து வாய்வரை செருகப்படும் சாவு. மரமானால் அடிச்சாவு.

''எப்படி அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறாய்?''

''அலட்டிக்கொண்டு ஒன்றம் ஆகப்போவதில்லை. செருகுச் சாவு, அடிச்சாவு, இயந்திரச்சாவு என்று பிரித்துத் தேர்ந்தெடுக்கும் சலுகை வேண்டும் என்று போராடலாம். பன்றிகளிடம் ஒற்றுமை இல்லை.''

''இயற்கையான சாவு பற்றிச் சொல்லமாட்டேன் என்கிறாயே?''

''சாவதில் என்ன இயற்கை இருக்கிறது? வலுக்கட்டாயம்தான்.''

''இல்லையில்லை. மரத்திலிருந்து இலை உதிர்வது மாதிரி மெல்ல இயற்கையோடு கலப்பது...''

''எனக்கு ஒரு உபகாரம் செய்''

''என்ன?''

''தயவுசெய்து இதில் கவிதையைக் கொண்டுவராதே'' என் வாழ்க்கை ஏற்கனவே கெட்டுக்கிடக்கிறது. கவிதையை வேறு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.''

''நான் சொன்னதில் என்ன கவிதைத்தனம் இருக்கிறது?''

''நீ சாவிலிருந்து ரத்தத்தைப் பிரிக்கிறாய். ரத்தம் சிந்தாத, அழகான இலையுதிர்ச் சாவு பற்றிச் சொல்கிறாய். ஆனால் ரத்தம் சேர்ந்தது சாவு. வெளியில் கொட்டினாலும் உள்ளே உறைந்து போனாலும் ரத்தமில்லாமல் சாவு இல்லை. நீ சாவை அழகாக்கப் பார்க்கிறாய்.''

குற்றச்சாட்டு.

சாவைப்பற்றி முதலில் எண்ணியது பன்னிரண்டு வயதில். கால்கள் அந்தரத்தில் மிதக்க, ஒரு பந்தை எம்பிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, தலையை மேலே வீசிப் பந்தைப் பார்த்த கணத்தில், வலியுடன் கூடிய மின்னலாய் அந்த எண்ணம் தாக்கியது. நாம் சாகிறோம். உள்ளே ஓடிவந்து முட்டியில் முகம் கவித்துப் பயந்தேன். கை, கால், முகம், உடம்பு எல்லாம் அந்நியமாகப்பட்டது. மாட்டிவிட்ட ஒன்றாய்த் தோன்றியது. இதனுள்ளே நான், நான், நான் என்று புகுந்து பார்த்தேன். பீதி கவ்வியது. செவிக் குழியிலா, கண்ணினுள்ளா, பல்லிடுக்கிலா, அக்குள் பள்ளத்திலா எதில் நான் இருக்கிறேன் என்று தேடினேன். பயத்தில் வியர்த்துப்போனேன்.

அதன்பின் சில சலுகைகளை நானே எனக்குத் தந்துகொண்டேன். சில வகைகளில் நான் சாக விரும்பவில்லை. விபத்தில் சாக விரும்பவில்லை. உடல் சிதைய, திடீர்த் தாக்குதலில் சாவு, விபத்துச் சாவு. எனக்கு வேண்டாம். வலியுடன் துடித்துச் சாவு - அதுவும் வேண்டாம். இரண்டாம் உலகப்போர்பற்றிப் படித்தபின் யூதர்களைப் போல் விஷப் புகைக்கூண்டுகளில் சாக நான் விரும்பவில்லை. அணு ஆயுதத்தால் ஆன ஹிரோஷிமாச் சாவும் வேண்டாம். வியட்நாமிற்குப்பின் நபாம் போன்ற இரசாயனக் குண்டுகளால் ஆன சாவையும் ஒதுக்கினேன். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைக் கண்டுகொண்டபின், பஞ்சசாவு, வெள்ளச் சாவு, பூகம்பச் சாவு, சிறையில் சாவு, தூக்குக் கயிற்றுச் சாவு, துப்பாக்கிச் சாவு என்று ஒவ்வொன்றாய் விலக்கிக்கொண்டே வந்தேன். எஞ்சியது அழகுச் சாவு. வெளியுடன் கலக்கும் கவிதைச் சாவு. வலியில்லை. ரணமில்ல. குருதியில்லை.

பன்றியின் கோபம் எனக்குப் புரிந்தது.

சில நாட்களுக்குப் பின் ஒரு விடிகாலைப் பொழுது க்ஹரே... என்று அலறல் கேட்டது. நாலு பேர் கழியுடன் பன்றியைத் துரத்தினார்கள். அது விரைந்து வாயிற்கதவை நோக்கி ஓடியது. அதன் உடம்பு இன்னமும் பெருத்துவிட்டதை அது மறந்துவிட்டது. அந்தச் சதுர இடைவெளியில் சிக்கிக்கொண்டது. நான் ஓடிவரும் முன் ரத்தம் பீறிட்டு, பொம்மைகள் மாதிரிப் பன்றிக் குட்டிகள் வெளியில் விழுந்தன.அருகில் போனதும் பன்றி என்னை அடையாளம் கண்டுகொண்டது. சிவப்பேறிய கண்களைத் திறந்து சொல்லியது.

''தயவுசெய்து சாவைப்பற்றிய ஏதாவது அரிய உண்மையைச் சொல்லிவிட்டுப் போவேன் என்று எதிர்பார்க்காதே. ஒன்றுதான் என்னால் சொல்ல முடியும். நாம் சாகிறோம்.''

நீண்ட கழிகள் நெருங்கி வந்தன.

நன்றி : வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

No comments: