Sunday, June 27, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 4

சல்மா

சொஹ்ராவுக்குத் தன்னை ஒரு அப்பாவியாக எல்லோரும் நம்பிக்கொண்டிருப்பதை நினைத்து ரொம்பவும் ஆசுவாசமாக இருந்தது. தனது பெரும்பாலான உணர்ச்சிகளைத் தனக்குள்ளாகப் புதைத்து வைத்துக்கொள்ளவும், யாரும் தன்னைக் கிளறிவிடாமல் இருக்கவும் இந்த பிம்பம் அவளுக்குத் துணையாக இருந்தது. எப்பொழுதுமே அவள் தனது மனத்திலுள்ள எண்ணங்களை எளிதில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டாள். பிர்தவ்ஸைப்போல. பிர்தவ்ஸ் எதையும் உடனுக்குடன் போட்டு உடைப்பது போல வெளிப்படுத்திவிடுவாள். அதனால்தானே தனது வாழ்க்கையையும் இப்படி சீரழித்துக் கொண்டாள். யாரிடம் பகிர்ந்து என்னவாகப் போகிறது என்று நினைத்துத் தன் மனத்திற்குள் வைத்துக்கொள்வாள் எதையுமே.

தந்தை இஸ்மாயிலின் மவுத்திற்குப் பிறகும் நன்றாக இருந்த தன் குடும்பத்திடம் தனது திருமணத்திற்குப் பிறகு தன் கணவனால் நிகழ்ந்துகொண்டிருந்த அத்துமீறலான ஊடுருவல் குறித்து அவளுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லாமல்போயிற்று. தனது தாயும் தங்கையும் மென்று விழுங்கிக்கொண்டிருக்கும் வேதனை புரிந்தாலும், தன்னைக் கட்டிப்போட்டிருந்த இயலாமை அவளைச் செயலற்றவளாக ஆக்கியிருந்தது. அக்குடும்பத்திற்கென ஒரு பொறுப்பான ஆண்துணை இல்லாததால்தான் தன் கணவனிடமிருந்து அவர்களை விலக்கவோ, அவனது உதவிகளை மறுக்கவோ இயலாத நிலை உருவாகியிருந்தது. பிர்தவ்ஸ§க்கு மாப்பிள்ளை பார்த்தது, திருமணம் முடிந்தது, சீர் செய்தது என்றெல்லாம் நிறையக் கடமைகளும் செலவும் இருந்தன. இதையெல்லாம் வேறு யார் பார்க்கப்போகிறார்கள் இவனை விட்டால்? அதே சமயம் அவனிடம் எவ்வளவு நாள் அழுதிருக்கிறாள்: "நீங்க அங்கெ போய் வர்றது நல்லாவா இருக்கும்?", "தகப்பனில்லாத பிள்ளைக்குத் தகப்பனா இருக்கக்கூடாதா?", "வெளியில் தெரிந்தால் யார் அவளைக் கல்யாணம் செய்ய வருவாங்க" என்றெல்லாம்.

அவன் எதைத்தான் காதில் வாங்கியிருக்கிறான்! "நீயும் உன்னோட அம்மா வீட்டுல போய் இருந்துக்கறதா இருந்தா எனக்கு சரிதான்!’" என்று அலட்சியமாகச் சொல்லிவிடுவான்.

ஆனால் இவள் தனக்கு எதுவுமே தெரியாத மாதிரித்தான் தங்கையிடமும் தாயிடமும் இருந்து கொண்டிருந்தாள். நடந்து முடிந்த இந்தத் திருமணத்தின் சகல நோக்கங்களையும் இவளும் அறிவாள். இந்த மாப்பிள்ளையை முடிக்க இவள் ஒத்துக்கொள்ளவேயில்லை. கொஞ்சமாவது பொருத்தம் வேண்டாமா என்று அழுது தவித்துப்பார்த்தாள். "உங்க குடும்ப நிலைமைக்கு இவன் ஒத்துக்கிட்டதே பெரிய சங்கதி. உன் வேலையைப் பார். பொருத்தம் பாக்குறாளாம். பொருத்தம்" என்று சொல்லி விட்டான்.

பெண்ணாகப் பிறந்துவிட்ட பிறகு தன் சொல்லுக்கு யாரும் இங்கே மதிப்பு வைக்கப்போவதில்லை என்ற நிலையில் அவள் மௌனமாக இருக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு நடந்தவை எல்லாம் அவசர கதியில் நடந்து முடிய, சொஹ்ரா ரொம்பவுமே மனம் ஒடுங்கிப்போய்விட்டாள் என்பதே உண்மை.

அந்த மாலை நேரம் கடுமையான வெப்பத்தைக் கொண்டதாயிருந்தது. பள்ளியிலிருந்து திரும்பிய ராபியாவுக்கு மற்றெந்த நாளையும்விட இன்று மிக முக்கியமானதாக இருந்தது. எல்லாப் பிள்ளைகளுக்கும்தான். ஏன் பெரியவர்களுக்கும் அப்படித்தான். இன்னும் சிறிது நேரத்தில் இருள் கவியத் தொடங்கிவிடும். அப்பொழுதுதான் வானில் ரமலான் பிறை தோன்றும். அதன் பிறகு அடுத்த ஒருமாத காலத்திற்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்த ரமலான் மாதத்தில் செத்துப்போவதற்கும் கூட கொடுத்துவைத்திருக்க வேண்டுமாம். நேரடி சொர்க்கம் நிச்சயமாம். இதெல்லாம் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதோடு தினமும் வீடுகளில் தின்பதற்குத் தீனி நிறையக் கிடைக்கும். இவையெல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இம்மாதத்தில் அல்லா பேய்களை வானத்தில் கட்டிப்போட்டு வைத்துவிடுவான் என்பதுதான். குழந்தைகளுக்கு இதைவிட சந்தோஷம் தரும் விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது இல்லையா?

சாயங்காலத்திலிருந்தே அவளும் மதினாவும் இன்னும் சில பிள்ளைகளுமாக அவளது வீட்டுக்கருகிலிருந்த காலியிடத்தில் ஆளுக்கொரு கல்லைத் தூக்கிப்போட்டுக்கொண்டு அதில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார்கள். ராபியாவின் கெண்டைக்காலில் கொசுக்கடிக்க ஆரம்பிக்க, பல்லைக் கடித்தபடி சொறிந்துகொண்டிருந்தவாறு மதினா கேட்டாள், "ஏன் ராபியா இன்னிக்கு அவசியம் பிறை வருமில்ல" என்று. அவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது. அது தங்களை ஏமாற்றிவிடுமோ என்று. அவளது நீளமான முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் படர்ந்திருந்ததைக் கவனித்த ராபியா அவளுக்காகவேனும் இன்றே பிறை தெரிந்துவிட வேண்டும் என விரும்பினாள். அவளது முக வாட்டத்தைத் தற்சமயத்திற்காவது போக்க வேண்டுமென்கிற நினைப்பில், "வரும், கட்டாயம் வரும்" என்றவள், "அப்படித் தெரியலைன்னாலும் கூட சிலோன் ரேடியாவுல சொல்வாங்க இல்ல" என்றாள். ஆறுதல் சொல்கிற தோரணையோடு.

"ஆமா உங்க வீட்டுல மாவு இடிச்சாச்சா?" என்று கேட்டாள் மதினா. "உம் இடிச்சாச்சே. உங்க வீட்டுல இடிச்சதுக்கு மறுநாள் அதைக்கூட மறந்துட்டியா" வியப்பு மேலிடக் கேட்டாள் ராபியா.

"அடடா, மறந்தேபோயிட்டேன் பாரு" என்று தன் நெற்றியில் லேசாகத் தட்டிக்கொண்டாள் மதினா.

அதன்பிறகு அவர்கள் மௌனமாக இருந்து வானத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ராபியாவுக்கு மாவு இடிப்பது பற்றி ஞாபகம் வந்தது. ரம்ஜான் துவங்க ஒருமாதம் முன்பே அதற்கு முன்னேற்பாடாக வீடுகளில் மாவு இடிக்கத் துவங்கிவிடுவார்கள்.

ராபியாவுக்கு ரொம்பவே கொண்டாட்டமாக இருக்கும். அந்த வேலை உண்டு பண்ணுகிற பண்டிகை ஞாபகங்கள் இவளுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். முன்னாடியே அம்மாவும் பெரியம்மாவும் நெல் அரைக்க ஏற்பாடு செய்வார்கள். முதலில் ஆள்விட்டு நெல்லைப் புடைப்பார்கள். பிறகு அதை அரைத்து வரும்படி செய்து, தேவையான அளவு மாவுக்கு எடுத்துக்கொண்டு, மீதியை மறுபடி மிஷினில் கொடுத்து இரண்டாக உடைத்து வர அனுப்புவார்கள். அதை நோன்புக் கஞ்சிக்கென ஒதுக்கி வைத்துவிடுவார்கள். முதல் நாளிலிருந்தே ராபியா பக்கத்து வீடுகளுக்குச் சென்று உலக்கைகள், மாவு சல்லடைகள் உட்காரும் பலகை, மாவு வறுக்கும் ஓடு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்ப்பாள். ஒவ்வொன்றிலும் பத்து, பத்து வேண்டியிருக்கும். மறுநாள் அதிகாலையிலேயே பண்ணையார் முதல் நாளே சொல்லி வைத்திருந்து வரச்சொல்லியிருந்த கூலிப்பெண்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். அம்மாவும் பெரியம்மாவும் காலை மூன்று மணிக்கே எழுந்து அரிசியை அண்டாக்களில் கொட்டிக் களைய ஆரம்பிப்பார்கள். களைந்த அரிசியை நீர் வடிய கூடைகளில் அள்ளிப் போட்டுவிட்டு கழனித் தண்ணியை மாடுகளுக்கென்று குழுதாடியில் நிரப்பிவிட்டு மறுபடி மறுபடி அரிசி வெள்ளை வெளேரென மாறும்வரை களைந்து ஊறவைத்துவிடுவார்கள்.

றைமா பெரியம்மா, "ராபியா மாதிரி அரிசி பளீர் வெள்ளையா மாறணும்" என்று சொல்லி சிரிப்பாள். இவளுக்குப் பெரியம்மா சும்மா தனக்காகச் சொல்கிறாள் எனத் தோன்றும். இரவெல்லாம் அம்மாவைத் தூங்கவிடாமல் ராபியா கெஞ்சிக்கொண்டிருப்பாள். அரிசி களைய எழுந்திருக்கும்பொழுது தன்னையும் எழுப்பிவிடச் சொல்லி. அம்மா ஒத்துக்கொள்ள மாட்டாள். காலையில மூணு மணிக்கி எந்திரிச்சு என்ன செய்யப்போறே நீ என்று. அவளை றைமா பெரியம்மாதான் எழுப்பி விடுவாள்.

அதிகாலை ஐந்து மணிக்குப் பக்கத்து ஊர்களிலிருந்து கூலிக்கு வரும் பெண்கள் வெயில் வரும் முன் உலக்கையால் அரிசியைக் குத்த ஆரம்பிப்பார்கள். வீடெல்லாம் அதிரும். மூச்சை தம் பிடித்து நான்கு நான்கு பேராக இடிக்கத் துவங்க, மற்றவர்கள் சலிக்க ஆரம்பிப்பார்கள். சலித்த பச்சை மாவை முற்றத்தில் வெயில் இல்லாத இடத்தில் அடுப்பு மூட்டி ஒருத்தி வறுப்பாள். பிறகு வறுத்த மாவை அடுப்படிக்குள் பாயில் கொட்டி ஆறவைப்பார்கள். வீடே போர்க்களமாக மாறியிருக்கும். புகையும் தூசியும் கண்ணைப் பிழிந்தெடுக்க, வீட்டுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருப்பாள் ராபியா, பச்சை மாவை அள்ளித் தின்றுகொண்டு. வயித்துக்குப் பச்சை மாவு ஒத்துக்கொள்ளாது என்று அம்மா அவளை அதட்டியதும், வறுத்த மாவைத் தின்றுகொண்டிருப்பாள். வீட்டில் ஒவ்வொருவருக்கும் செய்ய ஒரு வேலை இருந்து கொண்டேயிருக்கும். அத்தனை கூலிப் பெண்களுக்கு மத்தியில் மாவு இடிக்கவரும் ஒரே ஆண் சாத்தப்பன் மட்டும்தான். அவனைப் பார்த்தால் பெண் மாதிரிதான் தெரியும் இவளுக்கு. தனது உடம்பைப் பெண்ணைப் போலவே அசைத்து மாவு இடித்தபடி இடையிடையே பாட்டுப்படித்து ஆடிக்காட்டி எல்லோருக்கும் உற்சாக மூட்டுவான்.

சாயங்காலம்வரை நடந்துகொண்டிருக்கும் வேலைகளுக்கிடையில் அதிரசம் சுடுவதற்காக மாவு கிண்டத் தயார் செய்வார்கள். அம்மாவும் பெரியம்மாவும். நோன்பில் ஆடிப்போகும் பாக்கிஹாவுக்கு அதிரசமும் வைத்து ஓதவேண்டும். வெல்லம் போட்ட அதிரசமாவும் சீனி போட்ட அதிரசமாவும் தனித்னியே கிண்டி, வேடு கட்டி அறைக்குள் வைப்பார்கள். சூடாக அதிரச மாவு தின்பதற்கு இவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதற்கும் அம்மா அதட்டுவாள், சீக்கிரம் உக்காரப்போறே என்று. வீடெங்கும் மாவுத்தூசியால் நிறைந்து போயிருக்கும் இவளும் மாவு இடிக்க வந்த பெண்களும் பெரியம்மா, அம்மா அத்தனை பேருடைய உருவமும் பார்க்கையிலேயே சிரிப்பு பொங்கும் இவளுக்கு.

தலைமுடி உடம்பெல்லாம் மாவு பூசி பூச்சாண்டியைப் போல இருக்கும். எவ்வளவு தட்டி விட்டாலும் தலைமுடி நரைத்தது போலிருப்பது போகாது. இக்கோலத்தோடு தெருவில் போய் தன்னைத் தன்தோழிகளிடம் காட்ட ஆசைதான் என்றாலும் அன்றைய நாள் முழுக்க வீட்டுக் கதவு பூட்டப்பட்டே இருக்கும், வெளியாட்கள் உள்ளே வர முடியாதபடிக்கு. அம்மா சொல்வாள் "யாராவது இத்தனை மாவு காயிறதைப் பார்த்தால் திருஷ்டி வெச்சிடுவாங்க" என்று.

அதன் பிறகு வீடெல்லாம் கழுவி முடித்து அவர்களுக்குக் கூலியைக் கொடுத்து அனுப்பிவிட்டு இவர்களும் குளித்து முடிக்க இரவாகிவிடும். அன்று மட்டும் அத்தாவும் பெரியத்தாவும் சாப்பிட வீட்டுக்கு வராமல் கடையிலிருந்துகொண்டு கேட்டு அனுப்புவார்கள். இரவெல்லாம் கால் வலி தாங்காமல் அம்மாவும் பெரியம்மாவும் முனகிக்கொண்டிருப்பார்கள். இவளுக்குக் கஷ்டமாக இருக்கும். "எதுக்காக இவ்வளவு பாடுபட்டு மாவு இடிக்கணும்" என்று அம்மாவிடம் கேட்பாள்.

"நோன்பு திறந்திட்டு ஆம்பளைங்களுக்கு சாப்பிட இடியாப்பம் சுடணும் இல்லெ அதுக்காகத்தான்" என்பாள் அம்மா.

ரம்ஜான் மாதம் ஆரம்பமாவதற்கு முதல் மாதத்திலேயே அனேகமாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாவு இடிக்கும் ஓசை ஒருவித ராகத்துடன் ஊரெங்கும் சுற்றிச் சுற்றி ஒலித்தபடி இருக்கும், ரம்ஜானை வரவேற்கத் தயாராக.

அவர்கள் நெடுநேரமாகவே வானை அண்ணாந்து பார்த்து சோர்ந்து போய்விட்டார்கள். பிறை தெரிந்தவுடன்தான் சஹருக்கான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும். வீட்டில் சமைக்க ஆரம்பிக்க, இவள்தான் கடைக்குப் போய் வாழைப்பழமும் முட்டையும் வாங்கி வர வேண்டும், சஹருக்காக.

ராபியா அலுப்புடனும் வருத்தத்துடனும் எழுந்துகொண்டு பாவாடையின் பின்புறத்தைத் தட்டி மணலை உதிரச் செய்தாள். "நான் சாப்பிடப்போறேன், பசிக்குது" என்று மதினாவிடம் சொன்னபடி நடக்க ஆரம்பித்தாள். "அப்ப பிறை வந்த விபரம் ரேடியோவுல கேட்டு சொல்லுவ இல்ல" - பின்னாடியிருந்து கத்தினாள் மதினா.

அவள் தன்னிடம் மதிப்பு வைத்துக் கேட்டது ராபியாவுக்குத் தாங்க முடியாத சந்தோஷத்தை உண்டாக்க, மற்ற பிள்ளைகளுக்கு மத்தியில் தான் ஒரு முக்கியமான ஆளாக இருப்பதுபோல உணர்ந்தாள். அதுவும் பக்கத்தில் அஹமது வேறு இருந்தான்.

"ஓ, சொல்றேன்" என்றாள் கர்வமாக. அஹமது தன்பாட்டுக்கு இருக்காமல், "நீ என்ன சொல்றது. இன்னும் கொஞ்ச நேரத்துல பள்ளிவாசல் மைக்குல மோதினார் பாவா சொல்லிருவாருல்ல, சும்மா எம்முன்னால பீத்திக்கிறான்" என்று.

மதினாவுக்கும், ராபியாவுக்கும் அவன் பேச்சு கடும் கோபத்தை உண்டுபண்ணினாலும் பதில் சொல்லாமல் வீட்டை நோக்கிப் போகத் துவங்கினார்கள்.

முதல் நோன்பு என்பதால் ராபியாவும் மதினாவும் நோன்பு வைத்திருந்தார்கள். அவர்களால் முப்பது நோன்பும் வைக்க முடியாது என்பதால், முதலாவது பதினைந்தாவது, இருபத்தி ஏழாவது, முப்பதாவது என்று விசேஷமான நோன்புகளைத்தான் வீட்டில் வைக்க அனுமதிப்பார்கள். காலையில் சாப்பிடும் வேலையும் இல்லை மதரஸாவும் இல்லை என்பதால் அவர்களிருவரும் சீக்கிரமாகவே ஸ்கூலுக்கு வந்துவிட்டார்கள், உமா இனிமேல்தான் வருவாள். பள்ளிக்கு இன்னும் ஒரு ஆசிரியர்கூட வந்திருக்கவில்லை. பள்ளியே வெறிச்சோடிக் கிடந்தது. வகுப்பறைக்கு வெளியில் பின்புறமாக இருந்த மாமர நிழலில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். தரையோடு தாழ்ந்திருந்த கிளையில் தாவி ஏறி உட்கார்ந்த ராபியாவுக்கு, அம்மா இதைப் பார்த்தால் என்ன சொல்வாள் என்பது ஞாபகத்துக்கு வந்து சிரிப்புண்டாக்கியது. தனக்குள் சிரித்தபடி தான் அணிந்திருந்த பச்சை நிற சீருடையின் பின்பகுதியை லேசாகக் கை வைத்து அழுத்திப்பார்த்தாள். பிறகு மன நிம்மதியோடு கையை எடுத்து மரக்கிளையின் மீது வைத்து அதனை மெதுவாக ஆட்டிவிட்டுக்கொண்டாள். இவளைத் தொடர்ந்து மரக்கிளையில் ஏறி உட்கார்ந்த மதினா இவளது செயலின் அர்த்தம் புரியாமல் ராபியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவளது வட்ட முகம் ஏதோ கவலையினால் இருப்பது போலத் தோன்றிற்று.

"ஏன் ராபியா, இன்னைக்கு உங்க வீட்டுல ஸஹருக்கு என்ன சாப்பாடு?" என்றாள் மதினா.

சிறிது நேரம் யோசனை செய்வது போலிருந்துவிட்டு, "முதல் ஸஹருல்ல? அதனால பருப்பானமும். கறியும்தான்" என்றவள், "உங்க வீட்டுல" என்றாள்.

"எங்க வீட்டுலயும்தான்" என்ற மதினா, "நீ எத்தினி மணிக்கு எந்திரிச்சே சாஹர் நேரம்?" என்றாள்.

"நான் மூணுமணிக்கே எந்திரிச்சிட்டேன் தெரியுமா" என்றாள் ராபியா பெருமையாக. "சஹர் பொஸார நீ பாக்கலையா என்ன?" என்றாள்.

"ப்சி, நான் நாலுமணிக்குத்தான்" என்றாள் வருத்தத்துடன் மதினா. "ஆமா அப்பவே முழிச்சு என்ன செய்வியாம்?"

"எங்க அம்மா இரண்டரை மணிக்கே அலாரம் வச்சு எழுந்திரிச்சுருவாங்க, அந்த சத்தத்துல நானும் எழுந்திரிச்சிருவேன் இல்ல."

"அப்பவே எழுந்திரிச்சு உங்கம்மா என்ன செய்வாங்க?" கண்களை அகலத் திறந்து ஆச்சர்யமாகக் கேட்டாள் மதினா.

"அப்ப எழுந்தாத்தானே சரியா இருக்கும்? முதல்ல அடுப்பு மூட்டி சோறு ஆக்குவாங்க. சோறு வேகுறப்போ ஏலுச் செய்துட்டு தஜஜ்ஜத் தொழுவாங்க. அப்புறம் மத்த வேலைகளப் பாக்கறதுக்குள்ள நாலு மணி ஆயிரும் இல்ல" என்று தான் பார்த்தவற்றைப் பெரிய மனுஷத்தன்மையுடன் விவரித்தாள் ராபியா.

கொஞ்ச நேரம் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. மதினாவுக்கு ஆதங்கமாக இருந்தது, சஹர் முஸாபரைப் பார்க்க முடியவில்லையே என்று. காற்று இதமாக வீசியது. மாமரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்து தரையில் விழுவதைக் கவனித்துக்கொண்டிருந்த ராபியா திடீரென நினைவு வந்ததுபோல, "ஆமா நீ வீட்டுப்பாடம் எழுதிட்டியா?" என்றாள்.

"இல்லை" அலட்சியமாக பதில் சொன்னாள் மதினா.

"ஏன், சார் அடிக்க மாட்டாங்க?" தன் பயத்தை வெளிப்படுத்தினாள் ராபியா.

"நான்தான் நோன்பு வச்சிருக்கேன் இல்ல, சார் அடிக்க மாட்டாங்களே" என்ற மதினா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க அவளோடு சேர்ந்துகொண்டாள் ராபியாவும்.

ரம்ஜான் மாதத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் சிறு சலுகை ஆசிரியர்கள் யாரும் அடிக்கமாட்டார்கள் என்பதுதான். அந்தப் பெருமை எல்லாக் குழந்தைகளுக்குமே உண்டு.

மதினாவின் தலையில் செல்லமாகக் குட்டிய ராபியா, "நீ சரியான ஆளு" என்றவளின் குரலில், தான் மட்டும் வீட்டுப்பாடத்தைக் கை வலிக்க எழுதி விட்டோமே என்கிற ஆதங்கம் நிறையவே இருந்தது.

- தொடரும்

nantri - Ulagathamizh

இரண்டாம் ஜாமங்களின் கதை - 5

சல்மா

நடு இரவில் திடுக்கிட்டுக் கண் விழத்தாள் ஆமினா. அவளது கை அவளையறியாமலேயே அருகில் பாயைத் துழாவிற்று. பிர்தவ்ஸின் கதகதப்பான உடல் கையில் தட்டுப்பட்டவுடன் நிம்மதியடைந்தவள் ‘துவோய் யா அல்லாஹ்’ என முனகினாள். பிர்தவ்ஸை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி வயிற்றுக்குள் போட்டுப் படுத்திருக்கப் போகிறோமோ என்கிற நினைவு எழுந்து, பெரும் துக்கமாக மாறி தொண்டையை அடைத்தது. சொஹ்ராவின் கணவன் கரீமிடமிருந்து அவளைப் பாதுகாத்த காலம் போய், இன்று மனசொடிந்த நிலையில் என்னமும் செய்துகொண்டு உயிரைப் போக்கிக்கொள்வாளோ என்கிற பயம் ஆமினாவை தூங்க விடாமல் செய்துகொண்டிருந்தது.

அவளுக்குத் தன் திருமணம் நடந்த விதமும் தன் தாய், தந்தை, தங்கை ஞாபகமும் ஏனோ வந்தது. தன் தந்தை கனி ராவுத்தர் நிறம் தொட்டுப் பொட்டு வைத்துக்கொள்ளலாம் போலக் கறுப்பு. அம்மாதான் எத்தனை வெண்மையாக அழகாக இருப்பாள். அவள் ஒரு அறைக்குள் உட்கார்ந்திருந்தாள் என்றால் ஒரு மின்னல் கீற்று உள்ளேயிருப்பது போல பிரகாசமாக இருக்கும். விளக்காங் குழியிலிருக்கும் சிம்னி விளக்கின் ஒளியில் அவள் நிறம் தகதகப்பதுபோல இருக்கும். அம்மாவுக்கும் அத்தாவுக்கும் எப்போதாவது சண்டை வந்திருக்குமாவென ஞாபகப்படுத்திப்பார்த்தாலும் நினைவுக்குள் அப்படி ஒரு விஷயமே நிகழ்ந்ததில்லை என்றுதான் இருந்தது.

கனி ராவுத்தர் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பினாரென்றால் ஏதோ ஆர்ப்பாட்டமாகத்தானிருக்கும். தான் கொண்டு வந்த பணத்தினை வைத்து தடபுடலாகச் செலவு செய்து ஊரைக் கலக்கிக்கொண்டிருப்பார். ஒரே நேரத்தில் கறிக்கார நைனார் கடையில் போய் நான்கு ஆட்டுத் தலையை வாங்கி தெருவில் அனைவரும் பார்க்கும்படி இரண்டு கைகளிலும் இரண்டிரண்டாகக் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு வருவார். தெருப் பெண்கள் பேசிக்கொள்வார்கள், "இவருக்கு எதுக்கு இத்தினி பவுசு" என்று.

பொழுதுபோகாத நேரத்தில் பஞ்சாயத்துக் கல்லில் அமர்ந்து சீட்டாடத் தொடங்குவார். அப்படிச் சீட்டாடும் பொழுதுதான் இஸ்மாயிலும்கூட வந்து ஆடத் துவங்கியதும். ஒரு நாள் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த இஸ்மாயில் கனியிடம் "பணம் வெச்சு விளையாடப் புடிக்கலே மாமு, எங்கிட்டே இல்லாததா" என்று சொல்லி எழுந்திருக்க.

"பிறகு என்ன வச்சு வெளையாட மாப்பிள்ளை சொல்லு" என்று குஷியாக ராவுத்தர் கேட்க.

"உங்க பொண்ணை வச்சு ஆடலாம். நான் ஜெயிச்சா அவளைக் கட்டிக்கிர்றேன்" என்று இஸ்மாயில் சொல்ல அவரும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"உனக்குப் பொண்ணுக் குடுக்க எனக்குக் கசக்குதா. இருந்தாலும் வெளையாடிப் பாத்துடுவோம்" என்று ஆட்டத்தை ஆரம்பிக்க அன்று மாலை ஆமினா பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு, ஒரே சந்தோஷமும் பாட்டுமாக வந்தவர், தெருவில் நின்று எதையோ சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆமினாவை "ஏண்டி பொண்ணு இங்கனெ வா" என்று கூப்பிட்டார். குடுகுடுவென ஓடிவந்து அவர் மடியில் உட்கார்ந்து கொண்டு என்ன என்கிற மாதிரி அவர் முகத்தை நிமிந்து பார்த்தாள்.

"ஏய் கத்துஜா, வா இங்கே" என்று உற்சாகமாகக் கூப்பிட்டவர். உம் மகளுக்குக் கல்யாணம் பேசிட்டு வந்திருக்கேன் ஓடி வா" என்று அடுப்படியை நோக்கி தலையை எட்டிப் பார்த்துவிட்டுத் தன் மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டார்.

அறைகுறையாகக் காதில் விழுந்த விஷயத்தைத் தெளிவாக்கிக்கொள்ளும் பொருட்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தாள் கத்துஜா. அவளுக்கு சிறு வயதில் காலில் அம்மி விழுந்து நைத்து விட்டதால், நடை நேராக வராது. இழுத்து வைத்துத்தான் நடப்பாள்.

அவரது அருகில் வந்தவள் தரையில் விரித்திருந்த தடுக்கில் அமர்ந்தபடி, "என்ன சொன்னீங்க" என்றாள் ஆர்வமாக.

"பெரிய வீட்டு இஸ்மாயில் இல்ல. அவன் ஒம் பொண்ணை கட்டிக்குடுன்னு கேட்டான். சரி கட்டிக்கடான்னு சொல்லிட்டேன்" என்று சொல்லி சத்தம்போட்டு சிரித்தார், எப்படி என் சாமர்த்தியம் என்பதுபோல.

அவர் எதிர்பார்த்தபடி கத்திஜாவின் முகத்தில் பெரிய சந்தோஷம் எதுவும் தோன்றாதது அவருக்கு ஏமாற்றமாக இருக்க அதனை மறைத்துக்கொண்டபடி, "ஏன் ஒண்ணும் சொல்ல மாட்டிகளோ" எனக் கிண்டலாகக் கேட்டு அவளைக் கூர்ந்து நோக்கினார்.

"அதுக்கில்லேங்க" என்றவள் "இவளுக்கு இப்போதான் பத்து வயசு முடிஞ்சிருக்கு, என்ன அவசரம்னுதான். அந்த இஸ்மாயிலும்கூட மொதத் தாரம் கட்டி இழந்து வயசும் முப்பதத் தாண்டிக் கெடக்குமுல்ல" என்று தயக்கத்துடன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியவள், அவரது பதிலை எதிர் நோக்கி உட்கார்ந்திருந்தாள்.

"இம்புட்டுத்தானாக்கும். நான்கூட என்னவோ ஏதோன்னுல்ல நெனைச்சேன். போடி போ. இதெல்லாம் ஒரு காரணமா?" என்றவர் "ஊர் உலகத்துல இல்லாததச் செய்ற மாதிரியில்ல சலிச்சுக்கிர்ற. நான் வாக்குக் குடுத்தாச்சு. அடுத்த வாரத்துல ஜிம்மாவுல நிக்கா" என்று சொல்லிவிட்டு "சரி சரி, போய் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி வெச்சுக் குடு" என்று சொல்லியவாறே துண்டை உதறித் தோளில் சுற்றிப் போட்டபடி மிடுக்காக நடந்து திண்ணைக்குப் போனார்.

அடுத்த சில நாட்களில் திருமணம் நடந்தபொழுது ஆமினாவுக்கு அது பற்றிய எந்த புரிதலும் இல்லை. ஊரெல்லாம் ஆச்சரியப்படும் விதத்தில் சாப்பாடும் குதிரை ஆட்டமும் நடந்தது. கனி ராவுத்தர் புளியங்கொம்பு பார்த்துப் பிடித்ததையே ஊரெல்லாம் பேசிப் பொறாமைப்பட்டது. அதே கனி ராவுத்தர் தன் இரண்டாவது பெண் மைமூதுக்குத் தன் வியாபாரத் தொடர்புகள் மூலம் மாப்பிள்ளை பார்த்து முடித்தபிறகுதான் அவரது சந்தோஷமும் உற்சாகமும் பறிபோனது. மணமான இரண்டே மாதத்தில் வீடு வந்து சேர்ந்தாள் மைமூன். அவனோடு வாழவே மாட்டேன் என்றபடி வீட்டின் மச்சு அறையில் நெற்குதிரை ஒட்டி ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்த அவளிடம் ஆமினாவும் கதிஜாவும் புத்திமதி சொல்லித் திருப்பி அனுப்பிவிட எவ்வளவோ முயற்சித்தும் மன்றாடிப்பார்த்தும் அவள் அசைந்து கொடுக்கவேயில்லை. "முடியாது" என்று மட்டும் சொல்லியபடியேயிருந்தாள். சிம்னி விளக்கின் ஒளி பட்டுத் தெறித்த அவளது பிஞ்சு முகத்திலிருந்த பிடிவாதத்தையும் வைராக்கியத்தையும் இவர்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. யாரும் இனி இது குறித்துப் பேசக்கூடாது என்கிற கட்டளையும் அதிலிருக்கவே செய்தது.

தன் குடும்பத்திற்கு நேர்ந்த அவமானம் கதிஜாவைக் காட்டிலும் கனி ராவுத்தரை ரொம்பவே பாதித்தது. தனது சிரிப்பு, பாட்டு, கிண்டல் அனைத்தையும் மறந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தார் அவர். கதிஜா அழுததெல்லாம் "நாமதான் பொட்டச்சிக வீட்டுக்குள்ள கிடக்கறோம். அவரு ஆம்பளை நாலு இடம் போக, கொள்ள, கடைத்தெரு போகக்கூட வழியில்லாமப் போயிருச்சே" என்று தான்.

கனி ராவுத்தருக்கு ஆமினாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்ணீர் கோர்க்கும். "என் பிள்ளை," என்று தனக்குள் முனகிக்கொள்வார். தான் சொன்ன மாப்பிள்ளையை ஒரு மறுப்பும் சொல்லாமல் கட்டிக் கொண்ட தியாகியாகத்தான் அவர் அவளை நினைத்துக்கொள்வார். இப்போதெல்லாம் வெளி உலகத்திற்கோ வியாபாரத்திற்கோ போகாத நிலையில் ஆமினா இஸ்மாயில் தயவில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவன் எத்தனை தங்கமானவன் என தன் மாமனை நினைத்துப் பூரித்துப்போவார். அவர் முன்பு மாதிரி வெளியில் வியாபாரத்திற்க்குப் போவதில்லை என்றாலும் ஏதோ வீட்டிலிருந்தேனும் கொஞ்சம் வருமானத்திற்க்கு வழிபார்ப்போமென நினைத்திருந்ததினால் தினமும் காலை உணவுக்குப்பின் உட்காரும் பலகையை எடுத்துப் போட்டு முற்றத்தில் அமர்ந்துகொள்வார். வெளியிலிருந்து மொத்த விலைக்கு வாங்கி வந்து வைத்திருக்கும் ஊதுபத்திக் கட்டைக் கவிழ்த்து நான்கு நான்காகப் பிரித்துக் கைகளில் எடுத்துக்கொள்வார். பிறகு தனது சிறிய மரப்பெட்டியிலிருக்கும் சென்ட் குப்பிகளை வரிசையாக எடுத்துத் தரையில் அடுக்கி பிறகு ஒவ்வொன்றாகத் திறந்து முகர்ந்து பார்த்து ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு சில துளி அத்தரை உள்ளங்கையில் விட்டு ஒன்றாக்கிக்கொள்வார். பிறகு அதை நான்கு ஊதுபத்திகளின் மீதும் மிருதுவாகத் தடவித்தடவி விடுவார். பிறகு வாசனை சரியாக இருக்கிறதாவென முகர்ந்து முகர்ந்துபார்த்துக்கொண்டிருப்பார். அவருக்கு திருப்தி வரும்பொழுது அதனை ஒரு முறத்தில் அடுக்கிவைத்து முற்றத்து வெயிலில் காயவைப்பார். நாள் முழுக்க அத்தர் பூசிய ஊதுபத்திகளை ரோஸ் வண்ண ஜரிகைக் காகிதங்களில் பத்துப் பத்தாக அடுக்கி வைத்து சுருட்டி நுனி வரை சுருட்டி மடித்து ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கத் துவங்குவார். யாருடைய ஒத்தாசையையும் அவர் விரும்புவதில்லை. மிகச் சன்னமான குரலில் தனக்குள்ளாகவே ஒரு பைத்தை முணு முணுத்தபடி வேலை செய்து கொண்டிருப்பார். யாரும் இடையூறு செய்யவோ பேசவோ தயங்கும் விதத்தில் அக்குரலில் வருத்தம் தோய்ந்து நெஞ்சைப் பிழிவதாக இருக்கும். பிறகு அவரே மரப்பெட்டியில் அத்தர் பாட்டில்களை வரிசையாக அடுக்கத் துவங்குவார். ஆமினாவுக்கு அந்தப் பாட்டில்களை பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். விதவிதமான வடிவங்களில் கலை நயமிக்கதாக இருக்கும். மூடிகளும் மிக அழகழகான வடிவத்தில் இருக்கும். நடுங்கும் தன் கரங்களில் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து இறுக அடைத்திருக்கிறதாவென சரிபார்த்து பத்திரப்படுத்துவார். ஒரு சில நாட்களில் யாரேனும் ஒரு வியாபாரி வந்து ஊதுபத்திக் கட்டுகளை பணம் கொடுத்துப் பெற்றுச் செல்வான்.

- தொடரும்

nantri - Ulagathamizh

Thursday, June 24, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 3

சல்மா

காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டாள் ராபியா. மதரஸாவுக்கு ஓதச் செல்ல வேண்டும் என்பதைவிட வாதா மரத்தினடியில் உதிர்ந்து கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டும் என்கிற ஆசையில் அதிகாலையிலேயே எழுந்து கிளம்பிப் போவாள். இவளைப் போலத்தான் மற்ற பிள்ளைகளும். யார் முதலில் போவது, யார் நிறைய பழம் பொறுக்குவது என்கிற போட்டி அவர்களுக்குள் இருந்துகொண்டிருக்கும்.

வழக்கம்போல தலைக்கு ஒரு துண்டையும் குர்ஆனையும் எடுத்துக்கொண்டு கிளம்பியவளின் ஓட்டத்தை சொஹ்ராவின் குரல் தடுத்து நிறுத்த, வாசல் படியருகிலிருந்தவாறே "என்னம்மா?" என்றாள்.

"குர்ஆனைத் தொடுறதுக்கு முன்னால ஏலுச் செய்தியா?" என்று கத்தினாள் சொஹ்ரா,

"செய்தாச்சும்மா" என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி ஓடினாள் அவள். பள்ளிவாசலில் பஜருத் தொழுகைக்குப் பின் யாரும் இருக்கமாட்டார்கள். மோதினார் பாவா மட்டும்தான் ஏதாவது வேலைகள் செய்துகொண்டிருப்பார். அவரை ராபியாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். காலையில் இவள் போகும்பொழுது அவர் ஒரு பெரிய இரும்புத்தட்டில் சலித்த நைசான மணலை அள்ளித் தண்ணீர் ஊற்றிக் கரண்டியில் கலக்கிக்கொண்டிருப்பார். ராபியா அவர் பக்கத்தில் போய்க் குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொள்வாள்.

"மோதினார் பாவா இது எதுக்கு?" என்று கேட்பாள்.

"சொல்றேன் புள்ளை இரு" என்பார்.

இவளிடம் ஒரு குவளையைக் கொடுத்து "இந்தா போய் அவுசுல தண்ணி மெத்திக்கிட்டு வா" என்பார். இவள் ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவருவாள்.

"இப்பச் சொல்லுங்க இது எதுக்கு" என்று மறுபடி கேட்பாள்.

அவர் தனது தாடியை லேசாகச் சொறிந்துவிட்டுக்கொண்டு "அதுவந்து நீங்கள்ளாம் சுட்டிபானை வச்சு விளையாடுவீங்க இல்லெ, அதுமாதிரித்தான் நான் விளையாடுறேன். இப்பப் பாரு" என்று சொல்லிவிட்டு விளக்குமாறால் மண்தரையைச் சுத்தமாகக் கூட்டிவிட்டு, அந்த இடத்தில் கரைத்த மணலை ஒவ்வொரு கரண்டியாக இடம்விட்டு வரிசையாக இட்லியைப் போல ஊற்றுவார். அவர் பொய் சொல்கிறார் என்பது இவளுக்குத் தெரியும், அதனால் அவர் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவாள் "பொய் சொல்லாதிங்க பாவா. தினமும் இப்பிடி மணல் இட்லி ஊத்துறிங்களே, எதுக்காக?" என்று கேட்பாள். அவள் முகத்தில் தெரியும் ஆர்வம் அவருக்குப் பரிதாபமாக இருந்தாலும் சிரித்துக்கொள்வார். அவர் சிரிக்கும்பொழுது அவரது குட்டையான தாடியும் மீசையும் கறுத்த உதடுகளுக்குள்ளிருந்து வெளித் தெரியும் பற்களும் ரொம்பவே வினோதமாக இருக்கும் இவளுக்கு.

தினமும் அவர் இப்படிச் செய்வதும் பள்ளிவாசலுக்குத் தொழுகை செய்ய வரும் ஆண்கள் அதிலொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குப் போவதும் இவளுக்கும் இவளது தோழிகளுக்கும் பெரும் புதிராகவே இருக்கும். ஒரு நாள் மதரஸாவில் இவளோடு ஓதும் அஹமது கேட்டான், "ஏய் அதுக்குப் பேரு என்னன்னு தெரியுமாடி உங்களுக்கு?" என்று எகத்தாளமாகக் கேட்டான். அவனுடைய கெக்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் தனக்கு மிகப்பெரிய ரகசியம் ஒன்று தெரியும் என்றும் அதைக் கேட்பவர்கள் அவனிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும் என்றும் சொல்வதுபோலவும் இருந்தது.

மதினாவும் ராபியாவும் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் இவனிடமிருந்து நாம் எதையும் தெரிந்துகொள்ளவே வேண்டாம் என்று. இவர்கள் அவனை அலட்சியத்துடன் விலக்குவது அவனுக்குப் பெருத்த அவமானமாக இருக்கும். "ஏண்டி உங்களுக்குத் தெரிய வேணாமா? சொல்லுங்க" என்று கண்களை உருட்டிப் பயம் காட்டினான்.

வேணாம் போடா! அஜரத்துங்ககிட்ட சொல்லிடுவோம் தெரியுமில்ல" என்று மதினா மிரட்டினாள். அதன் பிறகு ஒரு ஓரத்தில் போய் உட்கார்ந்துகொண்ட அஹமதுவுக்குத் தனக்குத் தெரிந்த விஷயத்தை இவர்களிடம் சொல்லியே ஆக வேண்டுமென நாவு துடித்தது. எவ்வளவோ தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு, பிறகு அவர்களைப் பார்த்துத் திரும்பி உட்கார்ந்துகொண்டவன், அவர்களிடம் சொன்னான்.

"அது பேரு வந்து டேலாக்கட்டி. சில மக்குப் பொண்ணுகளுக்கு இதுகூடத் தெரியலை பாவம்" என்று அவர்களிடம் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டான். ராபியாவும் மதினாவும் அன்று அதன் பெயரை மட்டும் காதில் வாங்கிக்கொண்டார்கள்.

ராபியாவின் தந்தை கரீம் தன் மனைவியிடம் பேசும்பொழுதெல்லாம் யாரையேனும் திட்ட நேரும்பொழுது, "அவனுடைய உறவு எனக்கு டேலாக்கட்டியாக்கும். நெனைக்கறப்போ தூக்கியெறிஞ்சிடுவேன்" என்று அடிக்கடி சொல்வார்.

மோதினார் பாவாவின் கைகள் அளவோடும் அழகாகவும் மணலை மொண்டு ஊற்றுவதைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு இன்று வாதா மரத்தினடியில் பழங்களேயில்லை என்பது கவலையாக இருந்தது.

"ஏன் பாவா இன்னிக்கு மரத்தடியில் பழங்களே இல்லை?" என்றாள் ஏமாற்றத்தோடு.

"ஏன் இல்லை. அங்கே பாரு பெரிய அஜரத்து பொறுக்கிவச்சிருக்காங்க. போய் வாங்கிக்க" என்று சொல்லிக் கைநீட்டினார். அவர் காட்டிய இடத்தில் பெரிய அஜரத் தலைப்பாகையைக் கழட்டி மடியில் வைத்துக்கொண்டு கையில் தஸ்பீஹ் மணியுடன் உட்கார்ந்திருந்தார். ராபியா சந்தோஷமாக அவரை நோக்கி ஓடினாள். தன்னை நோக்கி ஓடிவந்தவளைத் தன் கருணை மிகுந்த கண்களால் பார்த்தவர். "இங்கெ வாம்மா என்று அருகில் கூப்பிட்டார். "அஸ்ஸலாமலைக்கும் அஜரத்துங்க" என்றபடி அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டாள் அவள்.

"அலைக்கும் ஸலாம். எங்கே வந்தீங்க பழம் வாங்கத்தானே" என்றார் குறும்புச் சிரிப்புடன்.

"இல்லை சும்மாதான்" என்று சொல்லிக் கூச்சத்துடன் தலைகுனிந்துகொண்டாள் இவள்.

அவர் மெலிந்த உடலும் சுருங்கிய தோலுமாக ரொம்பவும் ஒட்டிப்போயிருந்தார் முதுகில் கூன் விழுந்திருந்தது. கண்கள் குழிக்குள் இருப்பதுபோல உள்ளே ஒடுங்கியிருந்தன. மிக நீளமான மூக்கும் நீண்ட தாடியும் அவருக்கு இருந்தன. அந்த தாடிக்குள் விரலை நுழைத்துக் கோதி விட்டுக்கொண்டிருந்தார். பிள்ளைகள் மீது அவருக்குப் பிரியம் அதிகம். பல நாட்கள் தானே பழங்களைப் பொறுக்கிவைத்துக்கொண்டு, எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து, அவர்களது சந்தோஷத்தைப் பார்த்து ரசிப்பார். வெற்றிலையை அசைபோட்டபடியிருக்கும் வாய்க்குள்ளாக ஸல்வல்லாஹ் என்றபடி தஸ்பீஹ் மணியை உருட்டியவாறு முணுமுணுத்துக்கொண்டிருப்பார். அவர் என்றால் பிள்ளைகளுக்கும்கூடப் பிரியம்தான். ஆனால் சின்ன அஜரத்தை யாருக்குமே பிடிக்காது. முக்கியமாக ராபியாவுக்கும் மதினாவுக்கும். ஓதும்பொழுது ஒரு வார்த்தை தப்பாக உச்சரித்தால் போதும், தொடையிலேயே கிள்ளுவார். அவர் தொடையைத் தொடுவது கிள்ளுவதற்காக மட்டுமில்லை என்று இவளுக்குத் தோன்றும். அவர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியால் பையன்களை மட்டும்தான் அடிப்பார். பொண்ணுகளைத் தொடையில்தான் கிள்ளுவார். அவரைப் பார்த்தாலே இவளுக்குக் கூச்சமாகவும் வெறுப்பாகவும் இருக்கும்.

"ராபியா இங்க வந்து எம்பக்கத்துல உக்காரு. உனக்கு நல்லா சொல்லித்தரணும்னு உங்கம்மா சொல்லியனுப்பிருச்சிருக்காங்க" என்று பக்கத்தில் வேறு உட்கார வைத்துக்கொள்வார். அவ்வப்போது இவளது கன்னத்தில் கிள்ளுவதும் தடவுவதும் உண்டு. அப்பொழுதெல்லாம் ராபியாவுக்கு அழுகை வரும். மதினாவிடம் "எனக்கு இந்த ஆள்கிட்ட ஓதப் புடிக்கவேயில்லை" என்பாள். அதற்கு "ஒனக்கு மட்டுமா, எனக்குந்தான் புடிக்கலை" என்பாள் மதினாவும்

பையன்களுக்கும் அவரைப் பிடிக்காது, நன்றாக அடிப்பார் என்பதால். அஹமது சொல்வான், "இந்த ஆள் கல்யாணமும் பண்ணலை புள்ளையும் பிறக்கலை, அப்புறம் எப்புடிப் பிள்ளைகள் மேல பாசம் இருக்கும்? காட்டுப்பய மாதிரி அடிக்கிறான்" என்று.

ராபியா அவனைக் கோபிப்பாள் "அஜரத்துங்கள அப்பிடித் திட்டாதே. நரகத்துக்குப் போயிருவே. அஜரத்துங்க அடிக்கிற எடத்திலயெல்லாம் நரகத்து நெருப்பு படாது தெரியுமில்ல" என்பாள்.

"நரகத்துக்குப் போனா சரி, சொர்க்கத்துக்கு நான் போனேன்னா, அப்ப என்ன ஆவும் இப்ப வாங்கின அடியெல்லாம்?" என்று சொல்வான்.

"போடா லூசு, உங்கிட்ட பேசுறதுக்கு" என்று அலுத்துக்கொள்வாள் ராபியா.

பள்ளிவாசலிலேயே ராபியாவுக்குப் பிடித்தமான இடம் அவுஸ்தான். தரையோடிருக்கும் பெரிய தண்ணீர்த் தொட்டி. தொழ வருபவர்கள் அந்தத் தண்ணீரில்தான் ஏலுச்செய்வார்கள். அந்தத் தொட்டியில் ஏராளமான மீன்களை வாங்கி விட்டிருப்பார்கள். தண்ணீரில் வளர்ந்து கிடக்கும் பாசிக்குள் நுழைந்துகொண்டு, பதுங்கி விளையாடும் மீன்களை மேலே வரச்செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். காலையில் வீட்டிலிருந்து வரும்போது மறக்காமல் கொண்டுவரும் காசில் பள்ளிவாசலுக்கு வெளியே புட்டு விற்கும் பையனிடம் புட்டு வாங்கிக்கொள்வாள். அதை அவுஸின் ஒரு மூலையில் அமர்ந்து தூளாக்கி அதனுள் போடுவாள். மொத்த மீன்களும் அதைச் சாப்பிட மேலேறி வரும். ஒரே பரபரப்பும் சண்டையும் அவைகளுக்கிடையே நடக்கும். அதைப் பார்த்து ரசிப்பது அவளுக்கு அன்றாட வேலை. இதை யாரோ அவளது அம்மாவிடம் சொல்லிக்கொடுத்து அம்மா நன்றாகத் திட்டினாள்.

"உன்னைப் பள்ளிவாசலுக்கு அனுப்பறது ஓதத்தானே தவிர வெளையாட இல்லை. வயசுக்கு வர்றதுக்கு முந்தி குரானை முடிச்சிட்டா அஜரத்துங்களுக்கு வேட்டி பணம் வச்சுக் குடுக்கலாம்னு இருக்கேன். நீ இப்படி விளையாடிட்டா வர்றே" என சத்தம் போடுவாள். அதே மாதிரி பள்ளிக்குப் போகும்பொழுதும், போய்விட்டு வந்த பிறகும் "முகம் கழுவி பவுடர் போட்டுக்கொள். வயசுக்கு வர்ற வயசாகப்போகுது" என்று அறிவுறுத்துவாள்.

அன்று காலை மதரஸா நடக்கும்பொழுது பிள்ளைகள் எல்லோருக்கும் குப்பியின் மூணாம் நாள் கத்தப் பாத்திஹாவுக்காக ஒவ்வொரு ரூபாய் கொடுத்தார்கள். பிள்ளைகளுக்கு ஒரே சந்தோஷம். எதிர்பாராமல் கிடைத்த ரூபாயை எப்படியெல்லாம் செலவழிப்பது என்று மனதிற்குள் கனவு கண்டுகொண்டிருந்தார்கள். பள்ளிவாசல் எதிரிலிருக்கும் பெட்டிக் கடைக்கு முன்னால் ஒரே கூட்டம்.

மதினா ராபியாவின் காதில் கிசுகிசுத்தாள் "காசை செலவழிக்காதே" என்று. ஏன் எனப் புரியாமல் கேட்டவளிடம் "மவுத்தான வீட்டுக்காசு. அத வச்சுக்க வேணாம். அவுஸ் தண்ணிக்குள்ள போட்டுருவோம்" என்றாள் பிறகு இருவரும் காசை யாருக்கும் தெரியாமல் அவுஸ் தண்ணிக்குள் வீசினார்கள். ராபியாவுக்கு மனசே சரியில்லை. காலையில் புட்டு வாங்கியாவது மீனுக்குப் போட்டிருக்கலாமே என்று தோன்றியது. மதினா ஒன்று சொன்னால் நிச்சயம் அதற்குக் காரணம் இருக்கும் என்பதனால்தான் அவள் சொல்படி செய்தாள். மதினாவுக்கும் இவளுக்கும் இடையில் எந்த ஒளிவு மறைவும் ரகசியங்களும் இதுவரைக்கும் இருந்ததில்லை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது ராபியாவின் சித்தி பிர்தவ்ஸ், தன் கணவனிடமிருந்து தலாக் வாங்கி வீட்டிற்குத் திரும்பிவிட்டது மட்டும்தான். அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று அவளை அம்மா மிரட்டிவைத்திருந்தாள்.

றைமா பெரியம்மா சத்தம் போடுவாள் "இதையெல்லாம் எத்தனை நாள் மறைத்து வைக்க முடியும். இன்னைக்கு இல்லே நாளைக்கு வெளியில் வரத்தான் போகிறது. இதெல்லாம் ஒண்ணும் தெரியாத பொண்ணிடம் போய் என்ன பேச்சு பேசுற நீ" என்று.

அவர்கள் இருவரின் வாக்குவாதங்களும் எதையட்டி என்கிற விபரம் புரியாமல் ராபியா தடுமாறுவாள், ஏகப்பட்ட குழப்பங்களுடன். தலாக் என்றால் என்னவென்று யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது என்றும் தெரியவில்லை. ஒருவேளை அஹமதுவுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ?

nantri - Ulagathamizh

Wednesday, June 16, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 2

"இப்பத்தான் வர்றியா ராபியா" என்றபடி அறைக்குள் எட்டிப்பார்த்த றைமா பெரியம்மாவை ஓடிப்போய்க் கட்டிக்கொண்டாள். "நாம இப்ப குப்பி வீட்டுக்கு எதுக்காகப் போறோம்" என்று அண்ணாந்து அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

"ஆமா, குப்பி மௌத்தாப் போயிட்டாங்க தெரியுமா, அதுக்காக," என்ற றைமா, "சரி சரி, நீ கௌம்பு. ஏற்கனவே ஒங்கம்மா கோபமா இருக்கா" என்றாள்.

குப்பியை ராபியாவுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதனால் அவளுக்கு விசேஷமாக ஒன்றும் தோன்றவில்லை. அவசர அவசரமாகப் பாவாடை சட்டையை பீரோவிலிருந்து உருவி எடுத்து உடுத்திக் கொண்டாள். சீப்பை எடுத்துத் தனக்குத்தானே தலைமுடியை ஒதுக்கிக்கொண்டாள். நீளமான தலைமுடி. ஈரம் காயாமல் நசநசத்தது. அம்மா பார்த்தால் நன்றாகத் திட்டுவாள் என நினைத்தபடி முடியை அறைகுறையாகப் பின்னி விட்டுக்கொண்டு ஓடிப்போய்த் தயாராக வாசல்படியை ஒட்டி நின்று கொண்டாள்.

"ராபியா!" மறுபடி அம்மா கூப்பிடும் குரல் கேட்டதும் அடுப்படிக்குள் ஓடினாள். "இந்தா, இந்த பால குடி. குடிச்சிட்டு இந்த தூக்குப் போணிய கையில எடுத்துக்க கிளம்பறதுக்கு. இந்தா நாங்களும் துப்பட்டிய போட்டுட்டு கௌம்புறோம்" என்றபடி அடுப்படியைத் தாழ்ப்பாள் போட்டாள்.

ராபியா பாலைக் குடித்துவிட்டு வாசற்படியில் போய் நின்றுகொண்டாள். மழை இன்னும் லேசாக தூறிக்கொண்டிருந்தது. எதிர் வீட்டு பரிதாக்கா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கேட்டாள். "ராபியா, எங்கெ போறிங்க? அடக்கம் பண்ணப் போறாங்களாக்கும்."

"ஆமா. குப்பி வீட்டுக்குத்தான்" என்றாள் ராபியா. வாசல்படியை ஒட்டி நிறுத்தியிருந்த காரிலிருந்து முத்து கீழே இறங்கி பரிதா வீட்டு ஜன்னலைப் பார்க்க திரும்பியதும் பரிதா விடுக்கென்று தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டாள்.

முத்துவுக்குச் சிரிப்பு வந்தது. "ஏன் ராபியா நான் என்ன பேயா பிசாசா? ஏன் இப்படி பயந்து ஒளியுது" என்று கேட்டான். "அதெப்புடி? பரிதாக்கா வயசுக்கு வந்துட்டாங்க இல்லெ? பிறகெப்புடி ஆம்பளைங்க முகத்துல முழிப்பாங்க. அதெல்லாம் முழிக்கக்கூடாது தெரியுமா" என்றாள் பெருமை பொங்க.

அதற்குள்ளாக அம்மாவும் பெரியம்மாவும் வெளியில் வரவும், முத்து காரில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்துகொள்ள, முதலில் காரில் ஏறப் போன ராபியாவிடம், "இந்தா இதைப் போட்டுக்க" என்றபடி சொஹ்ரா ஒரு தாவணியை அவள் கையில் கொடுத்தாள். இவள் அதைக் கையில் வாங்கியபடி மலங்க மலங்க விழித்தாள், இது எதுக்காக என்கிற மாதிரி.

"உஷ், நெஞ்சு தெரியுதுல்ல. மவுத்தான வீட்டுக்கு நாலு பேர் வருவாங்க. அசிங்கம் பிடிச்சாப்புல இப்படியா நிக்கப் போறே? பொண்ணா லச்சணமா இருக்க வேணாம். சொல்றத செய்யி" என்று கிசுகிசுத்தாள் சொஹ்ரா.

றைமா பெரியம்மாவுக்கு ஏனோ கோபம் வந்தது. "எதுக்காக நீ அவள இப்பிடி விரட்டுற? இப்ப என்ன அவ்வளவு பெரிய பொம்பளையாயிட்டா அவ, எப்பப் பாரு குத்தம் சொல்லிக்கிட்டு" என்று அவளை அதட்டியவள், ராபியாவிடம் "சும்மா இப்போதைக்கு இதை உடம்புல சுத்திக்கோ, உங்கம்மாவுக்காக" என்றாள்.

ராபியாவுக்கு சொஹ்ராவே தாவணியை சுத்தி விட்டாள். இருவரும் காரில் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. அம்மாவும் பெரியம்மாவும் வெள்ளை நிறத் துப்பட்டியினால் தங்கள் உடம்பை முழுவதுமாகச் சுற்றி மூடியிருக்க அவர்கள் இருவருக்கும் நடுவே ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தாள் ராபியா.

இரண்டு தெரு தள்ளித்தான் மவுத்தான குப்பியின் வீடு இருந்தது. ஐந்தே நிமிடத்தில் போய்ச்சேர்ந்து விட்டார்கள். வாசலில் பெரிய பந்தல். நிறைய ஆண்கள் அங்கு கிடந்த சேர்களில் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். மணி ஐந்து தான் இருக்கும் என்றாலும், மழை பெய்ததால் வேகமாக இருட்டிக் கொண்டிருந்தது. காரிலிருந்து இறங்கிய அம்மாவும் பெரியம்மாவும் முகத்தைக் கண் மட்டும் தெரியும்படி மூடிக்கொண்டு வேகமாக நடந்து அங்கிருந்த ஆண்களைத் தாண்டிப்போய் வீட்டிற்குள் நுழைந்து கொள்ள, புதிதாகப் போட்டிருந்த தாவணி வெட்கத்தை உண்டு பண்ண, முன்னும் பின்னும் அதை இழுத்து சரிசெய்தபடி நடந்தாள் ராபியா.

வீட்டினுள்ளிருந்து கேட்ட அழுகைச் சத்தம் வேறு பயமாக இருந்தது என்றாலும் தயங்கியபடி வீட்டிற்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்ததுமே குப்பென்று ஊதுபத்திப் புகை வாடை மூக்கில் ஏறி பயத்தை அதிகப்படுத்தியது. நாலா பக்கமிருந்தும் அழுகையலி கேட்கும் அந்த ஹாலின் நடுவில் செத்துப்போன குப்பியின் மையத்தைப் பெரிய பெஞ்சில் மேற்கு நோக்கி கால் நீட்டி படுக்க வைத்திருந்தார்கள். முழுக்க வெள்ளைத் துணியால் மூடியிருந்த உடல் இவளுக்கு நடுக்கத்தை உண்டு பண்ணியது. கையிலிருந்த தூக்கை நழுவவிட்டு விடுவோமோ என்கிற பயத்தில் அதனை இறுகப் பற்றித் தன் நடுக்கத்தை அதனுள் புதைக்க முயன்றாள்.

அம்மா இருக்கும் இடத்தை நோக்கி சுவர் ஓரமாகவே பதுங்கிப் பதுங்கி மெதுவாக நடந்து அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் நடுவில் உட்கார்ந்துகொண்டாள். நாற்காலிக்குக் கீழே ஒரு வட்ட டப்பியில் உப்பை நிரப்பி அதில் ஒரு கட்டு ஊதுபத்தியைச் சொருகி வைத்திருந்தார்கள். அதிலிருந்து திமுதிமுவென்று மேலெழும்பி வந்துகொண்டிருந்த புகையை உற்றுப் பார்த்தவளுக்கு குடலைப் புரட்டியது.

அம்மா, நபிஸா மச்சியைத் தன் மடியில் சாய்த்து, முதுகை தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். "அழுகாதே நபிஸா. நமக்கு வகைஞ்சது அவ்வளவுதான். அழுகாதே."

நபிஸாவுக்கு அழுகை ஓயவில்லை. "என்னைப் பெத்த அம்மா என்னைய அனாதையா விட்டுட்டுப் போயிட்டியே. அத்தாவை இப்படி அனாதையா விட்டுட்டுப் போயிட்டியே, இனி எங்களுக்கு யாரு இருக்கா? அல்லா எம் மொகத்தப் பாக்கமாட்டேன்னுட்டியேடா" என்று உரத்த குரலில் கதறினாள்.

அவளது கத்தலின் துக்கம் பற்றிக்கொள்ள, இன்னும் ஒன்றிரண்டு பேர் அவள் கூட சேர்ந்து கொண்டு ஒப்பாரிவைக்க ஆரம்பித்தார்கள். நபிஸா மச்சியின் சிவந்த உருண்டை முகம் அழுதழுது வீங்கிப் போயிருந்தது. பிரிந்து கிடந்த தலைமயிர் நெற்றியிலும் முகத்திலும் வந்து விழுந்து முகத்தை மறைத்தது. அவளது கேவல் சத்தம் அம்மாவின் மடியிலிருந்து பெரிதாகக் கேட்டுக்கொண்டிருக்க, இந்தத் தூக்கைப் பெரியம்மா வாங்கிக்கொள்ள மாட்டாளா என்று அவள் முகத்தையே உற்றுப் பார்த்தாள் ராபியா. இதைக் கொடுத்த நிமிடமே ஒரே ஓட்டமா இங்கிருந்து வெளியே ஓடிவிட வேண்டும் என நினைத்தவள் மெதுவாக, "பெரியம்மா எனக்குப் பயமா இருக்கு. நான் வெளிய போய் உக்காரட்டுமா?" என்றாள்.

"சரி போ" என்று இவள் காதில் கிசுகிசுத்த றைமா இவள் கையிலிருந்த காப்பியை வாங்கிக்கொண்டாள். "மொத இதை நான் எல்லாருக்கும் ஊத்திக் குடுக்குறேன். . . ஏம்மா யாராவது இந்தக் காப்பியை ஒரு டம்ளர்ல ஊத்திக்கொண்டு வாங்களேன் இந்தப் பொம்பளைப் புள்ளைக்குக் குடுக்க" என்றவாறு நபிஸாவை சொஹ்ராவின் மடியிலிருந்து எழுந்து உட்கார வைக்க முயன்றாள்.

ராபியாவுக்கு பெரிய நிம்மதி. அங்கிருந்து எழுந்து மெதுவாக கூட்டத்தைக் கடந்து வெளியே வந்தவள், இனி உட்கார ஒரு சௌகரியமான இடம் தேட வேண்டும் என நினைத்தபடி கண்களை நாலாபுறமும் சுழற்றிப் பார்த்தாள். காலியாகக் கிடந்த ஒன்றிரண்டு சேர்களில் எதில் உட்காரலாம் என்று யோசித்து விட்டுக் கறுப்புக் கலர் சேரொன்றை சுவர் பக்கம் சத்தமில்லாதபடி தூக்கி வந்தாள். மழை பெய்து தரையெல்லாம் சேறும் சகதியுமாக இருந்ததால் பாவாடையைக் கெண்டைக் காலுக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி சேரில் உட்கார்ந்தாள்.

அவளுக்குச் சற்றுத் தள்ளி குப்பியின் கணவர் கமால் மாமு உட்கார்ந்திருந்தார். அவர் அழுகிறாரா என்று அவர் முகத்தையே உற்றுக் கவனித்தாள். தலையைக் குனிந்தபடி வருத்தமாக உட்கார்ந்திருந்தாரே தவிர அழவில்லை. ஏன் அவருக்கு அழுகை வரவில்லை என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். ஒரு நாள் அம்மாவிடம் கேட்டிருக்கிறாள், "ஏம்மா ஆம்பிளைங்களுக்கு அழுகையே வராதா" என்று.

"ஏன்?"

"இல்லெ, ஆம்பளைங்க அழுது நான் பார்த்ததேயில்லை. அவங்களுக்கு கண்ணுல தண்ணிய வச்சு அல்லா படைக்கலையா?"

அம்மா சொன்னாள், "மக்கு. ஆம்பளைங்க அழுகக் கூடாது. அழுகமாட்டாங்க. அவங்க பொம்பளைங்க மாதிரியில்ல."

அவளுக்குப் போரடித்தது. அஹமதுவை எங்கே காணவில்லை என்று கண்களாலேயே தேடத் துவங்கினாள். அவன் இருந்தாலாவது பேசிக்கொண்டிருக்கலாம்.

nanatri - ulagathmizh

Tuesday, June 15, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 1

சல்மா

மழை விழுவதை வகுப்பறை சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள் ராபியா. வகுப்பறைக்குச் சற்றுத் தள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டியிருந்த ஆசாரி குளத்தின் உயர்வான மண் மேட்டின் மீதிருந்து மழைநீர் இறங்கி வழிவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. குளத்தின் உட்புறம் வழியும் நீர் குடிதண்ணீராக இருந்தபோது வெளிப்புறத்தில் விழுந்து ஓடும் நீர் சாக்கடையில் கலந்து கொண்டிருந்தது. இடையிடையே வீசிய காற்று ஜன்னல் வழியே அவளது முகத்தில் மழையை வாரி இறைத்தது தாங்க இயலாத உற்சாகத்தை உண்டாக்கிற்று. ‘அம்மாவின் பேச்சைக் கேட்டு இன்று ஸ்கூலுக்கு வராமல் இருந்திருந்தால். . .’ மழைவரும் நாளன்று பள்ளியில் ஆசிரியரோ ஆசிரியைகளோ வகுப்புகளுக்கு பாடம் நடத்த வருவதில்லை என்பது வழக்கமான விஷயம். "ஒரு பீரியடை முடித்துவிட்டு அடுத்த கிளாஸ் ரூமுக்குப் போவதற்குள் நனைந்துவிடுவோம் என்ற பயம் டீச்சர்களுக்கு" என்று ராபியாவும் மற்ற பிள்ளைகளும் கிண்டலாகப் பேசிச் சிரித்துக்கொள்வார்கள். அவர்களது சோம்பல் இவர்களுக்கு அன்றைய தினத்தை அதிக குதூகலமிக்கதாக மாற்றிவிடும். பாட்டுப் போட்டியும் கதைகளும் சொல்லிக் கொண்டு ஜோராக நேரத்தைக் கழிப்பார்கள்.

"ஏய் ராபியா!" யாரோ தன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது காதில் விழ திடுக்கிட்டுத் திரும்பினாள். வகுப்பறையின் லீடர் உமா, "உன்னைத் தேடி ஆள் வந்திருக்கு இல்ல, பார்" என்றாள். யாராக இருக்கும் என்கிற யோசனையுடனும் எதற்காக என்கிற கேள்வியுடனும் எழுந்து பிள்ளைகளைத் தாண்டி வாசற்படிக்கு வந்தாள். கார் டிரைவர் முத்துதான் குடைக்குள் ஒடுங்கி நின்று கொண்டிருந்தான்.

"என்ன முத்தண்ணே" என்று கேட்டவளிடம், "அம்மா உன்னை கூட்டி வரச் சொன்னாங்க" என்றான். "ஏன்" என்றாள் ராபியா புரியாமல்.

"தெரியல்லை. வா போகலாம்" என்றான் அவசரப்படுத்தும் குரலில். அவளுக்கு இந்த மழை நேரத்து வகுப்பறையை விட்டுப்போக சுத்தமாக விருப்பமில்லை. "அதெல்லாம் உடனே வரமுடியாது முத்தண்ணே. நான் டீச்சர்கிட்ட கேட்டுட்டு வர்றேன். குடையை மட்டும் குடுத்துட்டுப் போங்க" என்றாள்.

"அதெல்லாம் இல்லெ. நீ உடனே கேட்டுட்டுவா. அம்மா என்னய திட்டுவாங்க. இப்பவே வா. கேட்டுட்டுப் போகலாம்" என்றவனிடம், "இல்லெ எனக்கு கொஞ்சம் எழுத வேண்டியது இருக்கு. எழுதாம டீச்சர் அனுப்ப மாட்டாங்க. நீங்க போங்க" என்றாள் பிடிவாதமாக.

முத்துவுக்கு வேறு வழி தெரியவில்லை. போக மனமில்லாமல் "சரி" என்று சொல்லி குடையை மட்டும் இவளிடம் தந்து விட்டுப் போனான்.

ராபியாவுக்கு அப்பாடா என்றிருந்தது. சிறிது நேரம் கழித்து நடந்தே போகலாம், மழையில் நனைந்து கொண்டு. அதோடு வழியில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை கால்களால் உதைத்து வி¬ளையாடியபடி எல்லோரோடும் சேர்ந்தே நடந்து போகலாம் என்பதை நினைத்தபோது சந்தோஷமாக இருந்தது.

உமா கேட்டாள். "எதுக்காக உன்னை கார் அனுப்பி கூப்பிட்டிருப்பாக? எதாச்சும் முக்கியமான விஷயமா இருக்காது?" அவள் முகத்தில் லேசான வருத்தம் தெரிவது போலிருப்பதை ராபியா கவனித்தாள்.

"அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. மழையில நனைஞ்சு போயிருவேன்னு கூப்பிட்டு விட்டிருப்பாங்க" என்று அலட்சியமாக சொல்லி விட்டு தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

வகுப்பறையிலிருந்த அத்தனை மாணவிகளுமே தன்னையே கவனிப்பதையும் இவளைக் கூப்பிட கார் வந்து திரும்பிப்போன ஆதங்கம் முகங்களில் தெரிவதையும் கவனித்த அவளுக்குப் பெருமையாக இருந்தது. ரமேஷ் தன்னைக் கவனிக்கிறானா என்று ஓரக் கண்ணால் பார்த்தாள். அவன் கவனிக்காமலிருப்பது சற்று ஏமாற்றமாக இருந்தது.

"நல்லவேளை நீ மாட்டேன்னு சொன்ன. நாம நடந்தே போகலாம் ஜாலியா" என்றாள் இவளுக்கருகில் அமர்ந்திருந்த மதினா.

"ஆமாம். அதுக்காகத்தான நான் வரலைன்னு சொல்லி அனுப்பிட்டேன்" என்ற ராபியா மறுபடியும் வகுப்பறைக்கு வெளியே கொட்டும் மழையை பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கு நேரெதிரே இருந்த பன்னீர் மரத்திலிருந்து மழைநீர்பட்டு பூக்கள் கொட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க அழகாக இருந்தது. போகும் பொழுது அந்தப் பூவையெல்லாம் பொறுக்கி பையில் போட்டுக் கொண்டு போக வேண்டும். இந்தப் பள்ளியிலேயே அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த பன்னீர்ப்பூ மரம் தான். அந்த மரத்தின் நிழலில் அமர்ந்து படிக்கத்தான் ரொம்பவும் பிடிக்கும். எவ்வளவு பெரிய மரம் என்று அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் தனக்குள்ளே சொல்லி வியந்து கொள்வாள். இந்த மரம் ஏன் இந்த ஊரில் வேறெங்கேயுமே இல்லை என்று அம்மாவிடம் அடிக்கடி கேட்பாள். "எனக்கென்னடி தெரியும், இல்லைன்னா இல்லைதான்" என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொள்வாள். தனக்குத் தெரிவதில் பாதி கூட அம்மாவுக்குத் தெரிவதில்லை என்று சமயங்களில் ராபியாவுக்கு பெருமையாக இருக்கும். இன்றைக்கு இந்தக் கேள்வியை பெரியம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ‘பெரியம்மா டவுனிலிருந்து வந்ததனால் நிறைய விஷயம் தெரியும். அம்மா மாதிரி பட்டிக்காடு இல்லை’

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்த பொழுது குடைக்குள்ளிருந்தாலும் முழுவதுமாக நனைந்திருந்தாள். இவளைப் பார்த்த நொடியிலேயே சொஸ்ராவுக்கு ஆத்திரம் பொங்கியது. அவளுக்குக் கோபத்தைக் காட்ட கத்தவோ திட்டவோ தெரியாது என்றாலும் முகத்தின் சிடு சிடுப்பை வைத்து அவளது கோபம் புரிந்தது.

"ஏன் நாங்க கூப்பிட்டு விட்டா வர மாட்டியோ? அப்படி என்னா படிச்சிக்கிட்டு இருந்தே, உன் சனியனால நாங்களும் போகாம நிக்கிறோம்" என்றபடி ராபியாவின் பக்கத்தில் வந்தவள் அவளது தோற்றத்தைப் பார்த்து அப்படியே திகைத்து நின்று விட்டாள்.

வெள்ளைநிறத்தில் ராபியா அணிந்திருந்த பிளவுஸ் மழையில் நனைந்து அவளது உடம்பின் உள் பகுதியை அப்படியே வெளித்தெரியச் செய்திருந்தது. வயதுக்கு மீறிய வளர்ச்சியைவிடக் கூடுதலாகத் தெரிந்த அவளது மார்புகள் அப்பட்டமாக வெளித் தெரிந்து அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. ராபியாவின் தோளைத் தொட்டு எதுக்காக நனைஞ்சே என்று உலுக்கியவள் "இந்தக் கோலத்துலதான் பள்ளிக்கூடத்திலிருந்து வர்றியா? அட அல்லாவே, அம்புட்டுப்பேரும் வேடிக்கை பார்த்திருப்பாங்களே. பொம்பளைப் புள்ளைக்கு கொஞ்சமாச்சம் கூச்சம் வேணாம். இதைக்கூட யாரும் கத்துத் தரணுமா" என்று புலம்பியபடியே அவள் தலையைத் துவட்டி விடத் துவங்கினாள்.

அம்மாவின் புலம்பலின் அர்த்தம் ராபியாவுக்கு சரியாகப் புரியவில்லை. எதற்காக இப்படிச் சொல்கிறாள் என்று அவள் குனிந்து தன்னைத்தானே பார்த்துக்கொண்டாள். தண்ணீரில் நனைந்ததனால் உடலின் மேடிட்ட மார்புப்பகுதி அப்படியே வெளித்தெரிந்தது. அதைப் பார்த்ததும் இவளுக்கும் சிறிது கூச்சமாக இருந்தது.

தலையை துவட்டி முடித்து சொஹ்ரா இவளிடம் "போ. போயி துணியை மாத்திட்டு கௌம்பு. நாம இப்ப குப்பி வீட்டுக்குப் போறோம். வீட்டுல நாங்க போயிட்டா நீ வந்து தனியா இருப்ப அப்பிடின்னுதான் ஒன்னயையும் கூடக் கூட்டிப் போயிரலாம்னு வரச் சொன்னா இப்பிடியா செய்வ?" என்று முணுமுணுத்துக் கொண்டே அடுப்படிக்குப் போனாள்.

ராபியாவுக்கு சந்தோஷம் மறுபடி தலை தூக்கியது. நாமும் வெளியே போகப் போகிறோம் என்பதனால் இன்று மாலை படிக்கத் தேவையில்லை. மதரஸாவுக்கும் போகத் தேவையில்லை என்ற பெருமையோடு குடுகுடுவென ஓடிப்போய் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டு உடைமாற்றத் தொடங்கினாள்.

nanatri - ulagathmizh

Tuesday, June 01, 2004

எதிர்ப்பு

ஈழநாதன்

"...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..."

காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம்.

அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது.

காகங்களின் கூடு மரத்தின் உச்சியில் ஓரமாக இருந்தது,அதில் பலவிதமான காகங்கள் குடியிருந்தன,அவற்றிற்கிடையே பல நேரங்களில் சச்சரவு கிளம்பும்,உணவுக்கும் இடத்துக்கும் தத்தமக்கிடையே அடித்துக் கொள்ளும்,ஆனாலும் அவை மரத்தை விட்டுப் போகவில்லை,கிழட்டுக் காகங்களின் சமரசத்தில் ஓரளவு ஒற்றுமையாக வாழ்ந்தன.

இதே நிலவரம் தான் மரத்தின் நடுப்பகுதியில் பொந்துகளில் வாழ்ந்து வந்த ஆந்தைகளுக்கும்,பொந்துகளின் தலைமைப் பதவிக்கு காலம் காலமாக சச்சரவு நடக்கும் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்ளும் கிழக்கோட்டான்களின் மத்தியஸ்தத்தில் அவையும் ஒற்றுமை பேணின.

காகங்களுக்கும் ஆந்தைகளுக்கும் இடையில் இடப்பிரச்சனையில் என்றுமே நல்லுறவு இருந்ததில்லை,காலம் காலமாக அந்த மரத்தின் நிழலையும் வளத்தையும் பங்கு போட்டுக் கொள்வதில் இரு பகுதிக்குமே பிரச்சனைதான்,இரண்டு பக்கத்திலுமிருக்கும் முதியவர்களால் நிலமை கட்டுக்குள் இருந்தது.

காலப்போக்கில் இருபகுதியிலும் இனப்பெருக்கத்தால் உறுப்பினர் எண்ணிக்கை பெருகியது,குடும்பங்கள் புதிதாக உருவாகின மரம் கொடுத்து வந்த பழங்கள் போதாமல் பிற மரங்களையும் நாடவேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்த நேரத்தில் தான் ஆந்தைகள் மத்தியில் புதிய எண்ணம் முளைவிட்டது அந்த மரம் காலம் காலமாக ஆந்தைகளுக்குச் சொந்தமெனவும்,காகங்கள் இடையில் வந்து உச்சியை ஆக்கிரமித்துக் கொண்டனவெனவும் கிழட்டு ஆந்தைகள் ஆந்தைக் குஞ்சுகளுக்குப் போதித்தன,ஆந்தைக் குஞ்சுகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது தங்களுக்கு சொந்தமான வளத்தை காகங்கள் சுரண்டுவதாக எண்ணின,இரவு நேரங்களில் காகங்கள் தூங்கியதும் அவர்களது கூடுகளைக் கலைப்பதும் முட்டைகளைத் திருடுவதுமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தன,சில ஆந்தைகள் இன்னும் மேலே போய் உச்சிப்பகுதிகளில் இருந்த சிறு பொந்துகளை துளை செய்து தமது குடியிருப்புகளாக்கிக் கொண்டன.தடுக்கவேண்டிய வயதான ஆந்தைகள் கைகட்டி வேடிக்கை பார்த்தன

வயதில் இளைய காகங்களுக்கு பொறுமை காக்க முடியவில்லை அவை இரவுகளில் விழித்திருந்து முட்டைகள் களவு போகாமலும் கூடுகள் கலையாமலும் காவலுக்கிருந்தன,இன்னும் சில உச்சியில் வந்து கூடு கட்டிக் கொண்ட ஆந்தைகளுடன் சண்டைக்குப் போயின,வயதான காகங்களுக்கு இது பிடிக்கவில்லை மரம் இருவருக்கும் பொது இருவரும் சண்டையிடாமல் வாழ்ந்தால் அம்மரத்தின் பலனை இன்னும் பலகாலம் பயன்படுத்தலாம் என்பது அவர்களது வாதம்,ஆந்தைகள் என்ன செய்தாலும் சண்டைக்குப் போவதை அவை விரும்பவில்லை பொறுமை காக்கும்படி குஞ்சுகளுக்கு அறிவுறுத்தின.

இது ஆந்தைக் குஞ்சுகளுக்கு வாய்ப்பாகியது நாளுக்கு நாள் காகக் குஞ்சுகளை சீண்டி வேடிக்கை பார்த்தன,இவற்றைப் பொறுக்க முடியாத கிழக்காகங்கள் ஆந்தைத் தலைவர்களிடம் முறையிட்டன இனி இப்படி நடக்காது என்று உறுதிமொழி கிடைத்தாலும் அதை நம்புவதற்கு காகக்குஞ்சுகள் தயாராக இருக்கவில்லை,இது எங்கள் மரம் நீங்கள் வந்தேறு குடிகள் என்ற ஆந்தைக் குஞ்சுகளின் கூச்சல் அவற்றை சீற்றமடைய வைத்திருந்தது.

காகங்கள் கூடி ஆலோசித்தன இப்படியே போனால் விரைவில் அம்மரம் தங்களிடமிருந்து பறிபோய் விடும் என்று குஞ்சுகள் வாதிட்டன கிழக்காகங்களும் நிலைமையின் தாக்கத்தைப் புரிந்து கொண்டதால் மௌனம் காத்தன,குஞ்சுகள் தீர்மானம் மேற்கொண்டன இனி அவர்கள் தாக்கினால் நாங்களும் திருப்பித் தாக்குவோம் வயதில் இளைய குஞ்சுகள் முழங்குவதைக் கேட்க கிழக்காகங்கள் கவலை கொண்டன என்ன மாதிரி அமைதியாக இருந்த மரம் இனி அங்கே அமைதி நிலைக்குமா என்ற கவலை கிழக்காகங்களுக்கு,அவை இன்னும் ஆந்தைகளுடன் சமரசமாகப் போய்விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தன.

குஞ்சுக்காகங்கள் தீர்மானத்தைச் செயற்படுத்த முனைந்தன மரத்தின் ஒருபக்கத்தில் வளர்ந்து செழித்திருந்த பனைமரத்திலிருந்து தும்புகளையும் ஓலைகளையும் கொண்டுவந்து தங்கள் கூடுகளை பலப்படுத்தின,இரவுகளில் முறை வைத்துக் காவல் காத்தன,பனைமரம் பலவிதங்களிலும் காகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருந்தது.

இந்தத் தகவல்கள் ஆந்தைகளுக்கு எட்டியபோது இளைய ஆந்தைகள் கோபத்தில் குதித்தன காகங்களை பூண்டோடு அழித்து மரத்தை மீட்போமென சபதமிட்டன,விடயம் கிழக்கோட்டானுக்குப் போனது ஆந்தைகளிடத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும்,காகங்களை அழித்து மரத்தை முற்றாகத் தம்வசப்படுத்தவும் இளைய ஆந்தைகளின் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் வழி என்று கிழக்கோட்டான் எண்ணமிட்டது.

இரவிரவாக ஆந்தைகள் கூடின,நிலவொளியில் கூடி காகங்களை அழிக்கும் வழிவகைகளை ஆராய்ந்தன கிழக்கோட்டான் தலைமை வகித்தது,காகங்கள் மீது ஆந்தைகள் எல்லாம் கூடித் தாக்குதல் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது,இந்த நேரம் அறிவாளி ஆந்தையொன்று ஒரு யோசனை கூறியது மரத்தின் ஓரமாக வளர்ந்துள்ள பனைமரமே காகங்களைப் பலமுள்ளவர்களாக மாற்றியுள்ளது,சகலவிதத்திலும் அவற்றைப் பனைமரமே வளர்க்கின்றது எனவே அதனை அழித்துவிட்டால் காகங்களின் வளர்ச்சி தடைப்படும் எப்போதும் ஆந்தைகளுக்கு அடிமையாக இருக்கும் என்று அது கூறியது இளைய ஆந்தைகளுக்கு மட்டுமல்ல கிழக்கோட்டானுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது.

இரவிரவாக ஆந்தைகள் பனைமரத்தை முற்றுகையிட்டன,கொலைவெறிதாண்டவமாட தும்புகள் ஓலைகளைக் கிழித்தன அப்படியும் ஆத்திரம் தணியாமல் கிழித்தவற்றை மேலே போட்டு பனைமரத்தைக் கொழுத்தின கொழுத்தி முடிந்ததும் சுவாலை விட்டெரியும் பனைமர வெளிச்சத்தில் அவை காகக் கூடுகளுக்குள் பாய்ந்தன எதிர்ப்பட்ட காகங்களைக் குதறின,இந்நேரம் காகஙக்ளும் அலறியடித்துக் கொண்டு எழுந்தன இவ்வளவுநாளும் தங்களுக்கு படிமுறை வளர்ச்சி தந்த பனை மரம் தீயில் கருகிக் கொண்டிருப்பதை அவற்றால் தாங்கமுடியவில்லை போதாக்குறைக்கு காகக் கூடுகள் பல சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தன உயிரிழந்த காகங்கள் மரத்தின் அடியில் விழுந்து கிடந்தன.

இளைய காகங்கள் ஆத்திரத்தில் துடித்தன "இப்படியே போனால் எதுவுமே எஞ்சாது" இளைய காகம் ஒன்று குரல்கொடுத்தது "வாருங்கள் என்னோடு" காகக் குஞ்சுகள் எழுந்தன பறக்கும் அந்த இளைய காகத்தைத் தொடர்ந்தன எரிந்து கொண்டிருக்கும் பனை மரத்தை வட்டமிட்டது அந்த காகம் பாதி எரிந்து கொண்டிருந்த ஓலைத் துண்டொன்றை வாயில் கவ்வியது பறந்து போய் ஆந்தைகளின் பொந்தொன்றில் போட்டது,காகக் குஞ்சுகள் கோபத்தில் ஆர்ப்பரித்தன "இதுதான் வழி" "இதுதான் வழி" "எங்களைப் பணிய வைக்கமுடியாதென்று உணர்த்துவோம்" இளைய காகத்தைத் தொடர்ந்து மற்றக் குஞ்சுகளும் எரியும் கொள்ளிகளைப் பொறுக்கி வந்து ஆந்தைகளின் பொந்தில் போடத்தொடங்கின.வயதான காகங்கள் தடுக்க முயற்சி செய்யவில்லை,கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

விடிந்தபோது மரம் புகைகக்கியபடி எரிய ஆரம்பித்திருந்தது

பி.கு:- இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல

ஈழநாதன்
nantri-Sooriyan.com