Sunday, June 27, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 4

சல்மா

சொஹ்ராவுக்குத் தன்னை ஒரு அப்பாவியாக எல்லோரும் நம்பிக்கொண்டிருப்பதை நினைத்து ரொம்பவும் ஆசுவாசமாக இருந்தது. தனது பெரும்பாலான உணர்ச்சிகளைத் தனக்குள்ளாகப் புதைத்து வைத்துக்கொள்ளவும், யாரும் தன்னைக் கிளறிவிடாமல் இருக்கவும் இந்த பிம்பம் அவளுக்குத் துணையாக இருந்தது. எப்பொழுதுமே அவள் தனது மனத்திலுள்ள எண்ணங்களை எளிதில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டாள். பிர்தவ்ஸைப்போல. பிர்தவ்ஸ் எதையும் உடனுக்குடன் போட்டு உடைப்பது போல வெளிப்படுத்திவிடுவாள். அதனால்தானே தனது வாழ்க்கையையும் இப்படி சீரழித்துக் கொண்டாள். யாரிடம் பகிர்ந்து என்னவாகப் போகிறது என்று நினைத்துத் தன் மனத்திற்குள் வைத்துக்கொள்வாள் எதையுமே.

தந்தை இஸ்மாயிலின் மவுத்திற்குப் பிறகும் நன்றாக இருந்த தன் குடும்பத்திடம் தனது திருமணத்திற்குப் பிறகு தன் கணவனால் நிகழ்ந்துகொண்டிருந்த அத்துமீறலான ஊடுருவல் குறித்து அவளுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லாமல்போயிற்று. தனது தாயும் தங்கையும் மென்று விழுங்கிக்கொண்டிருக்கும் வேதனை புரிந்தாலும், தன்னைக் கட்டிப்போட்டிருந்த இயலாமை அவளைச் செயலற்றவளாக ஆக்கியிருந்தது. அக்குடும்பத்திற்கென ஒரு பொறுப்பான ஆண்துணை இல்லாததால்தான் தன் கணவனிடமிருந்து அவர்களை விலக்கவோ, அவனது உதவிகளை மறுக்கவோ இயலாத நிலை உருவாகியிருந்தது. பிர்தவ்ஸ§க்கு மாப்பிள்ளை பார்த்தது, திருமணம் முடிந்தது, சீர் செய்தது என்றெல்லாம் நிறையக் கடமைகளும் செலவும் இருந்தன. இதையெல்லாம் வேறு யார் பார்க்கப்போகிறார்கள் இவனை விட்டால்? அதே சமயம் அவனிடம் எவ்வளவு நாள் அழுதிருக்கிறாள்: "நீங்க அங்கெ போய் வர்றது நல்லாவா இருக்கும்?", "தகப்பனில்லாத பிள்ளைக்குத் தகப்பனா இருக்கக்கூடாதா?", "வெளியில் தெரிந்தால் யார் அவளைக் கல்யாணம் செய்ய வருவாங்க" என்றெல்லாம்.

அவன் எதைத்தான் காதில் வாங்கியிருக்கிறான்! "நீயும் உன்னோட அம்மா வீட்டுல போய் இருந்துக்கறதா இருந்தா எனக்கு சரிதான்!’" என்று அலட்சியமாகச் சொல்லிவிடுவான்.

ஆனால் இவள் தனக்கு எதுவுமே தெரியாத மாதிரித்தான் தங்கையிடமும் தாயிடமும் இருந்து கொண்டிருந்தாள். நடந்து முடிந்த இந்தத் திருமணத்தின் சகல நோக்கங்களையும் இவளும் அறிவாள். இந்த மாப்பிள்ளையை முடிக்க இவள் ஒத்துக்கொள்ளவேயில்லை. கொஞ்சமாவது பொருத்தம் வேண்டாமா என்று அழுது தவித்துப்பார்த்தாள். "உங்க குடும்ப நிலைமைக்கு இவன் ஒத்துக்கிட்டதே பெரிய சங்கதி. உன் வேலையைப் பார். பொருத்தம் பாக்குறாளாம். பொருத்தம்" என்று சொல்லி விட்டான்.

பெண்ணாகப் பிறந்துவிட்ட பிறகு தன் சொல்லுக்கு யாரும் இங்கே மதிப்பு வைக்கப்போவதில்லை என்ற நிலையில் அவள் மௌனமாக இருக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு நடந்தவை எல்லாம் அவசர கதியில் நடந்து முடிய, சொஹ்ரா ரொம்பவுமே மனம் ஒடுங்கிப்போய்விட்டாள் என்பதே உண்மை.

அந்த மாலை நேரம் கடுமையான வெப்பத்தைக் கொண்டதாயிருந்தது. பள்ளியிலிருந்து திரும்பிய ராபியாவுக்கு மற்றெந்த நாளையும்விட இன்று மிக முக்கியமானதாக இருந்தது. எல்லாப் பிள்ளைகளுக்கும்தான். ஏன் பெரியவர்களுக்கும் அப்படித்தான். இன்னும் சிறிது நேரத்தில் இருள் கவியத் தொடங்கிவிடும். அப்பொழுதுதான் வானில் ரமலான் பிறை தோன்றும். அதன் பிறகு அடுத்த ஒருமாத காலத்திற்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்த ரமலான் மாதத்தில் செத்துப்போவதற்கும் கூட கொடுத்துவைத்திருக்க வேண்டுமாம். நேரடி சொர்க்கம் நிச்சயமாம். இதெல்லாம் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதோடு தினமும் வீடுகளில் தின்பதற்குத் தீனி நிறையக் கிடைக்கும். இவையெல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இம்மாதத்தில் அல்லா பேய்களை வானத்தில் கட்டிப்போட்டு வைத்துவிடுவான் என்பதுதான். குழந்தைகளுக்கு இதைவிட சந்தோஷம் தரும் விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது இல்லையா?

சாயங்காலத்திலிருந்தே அவளும் மதினாவும் இன்னும் சில பிள்ளைகளுமாக அவளது வீட்டுக்கருகிலிருந்த காலியிடத்தில் ஆளுக்கொரு கல்லைத் தூக்கிப்போட்டுக்கொண்டு அதில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார்கள். ராபியாவின் கெண்டைக்காலில் கொசுக்கடிக்க ஆரம்பிக்க, பல்லைக் கடித்தபடி சொறிந்துகொண்டிருந்தவாறு மதினா கேட்டாள், "ஏன் ராபியா இன்னிக்கு அவசியம் பிறை வருமில்ல" என்று. அவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது. அது தங்களை ஏமாற்றிவிடுமோ என்று. அவளது நீளமான முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் படர்ந்திருந்ததைக் கவனித்த ராபியா அவளுக்காகவேனும் இன்றே பிறை தெரிந்துவிட வேண்டும் என விரும்பினாள். அவளது முக வாட்டத்தைத் தற்சமயத்திற்காவது போக்க வேண்டுமென்கிற நினைப்பில், "வரும், கட்டாயம் வரும்" என்றவள், "அப்படித் தெரியலைன்னாலும் கூட சிலோன் ரேடியாவுல சொல்வாங்க இல்ல" என்றாள். ஆறுதல் சொல்கிற தோரணையோடு.

"ஆமா உங்க வீட்டுல மாவு இடிச்சாச்சா?" என்று கேட்டாள் மதினா. "உம் இடிச்சாச்சே. உங்க வீட்டுல இடிச்சதுக்கு மறுநாள் அதைக்கூட மறந்துட்டியா" வியப்பு மேலிடக் கேட்டாள் ராபியா.

"அடடா, மறந்தேபோயிட்டேன் பாரு" என்று தன் நெற்றியில் லேசாகத் தட்டிக்கொண்டாள் மதினா.

அதன்பிறகு அவர்கள் மௌனமாக இருந்து வானத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ராபியாவுக்கு மாவு இடிப்பது பற்றி ஞாபகம் வந்தது. ரம்ஜான் துவங்க ஒருமாதம் முன்பே அதற்கு முன்னேற்பாடாக வீடுகளில் மாவு இடிக்கத் துவங்கிவிடுவார்கள்.

ராபியாவுக்கு ரொம்பவே கொண்டாட்டமாக இருக்கும். அந்த வேலை உண்டு பண்ணுகிற பண்டிகை ஞாபகங்கள் இவளுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். முன்னாடியே அம்மாவும் பெரியம்மாவும் நெல் அரைக்க ஏற்பாடு செய்வார்கள். முதலில் ஆள்விட்டு நெல்லைப் புடைப்பார்கள். பிறகு அதை அரைத்து வரும்படி செய்து, தேவையான அளவு மாவுக்கு எடுத்துக்கொண்டு, மீதியை மறுபடி மிஷினில் கொடுத்து இரண்டாக உடைத்து வர அனுப்புவார்கள். அதை நோன்புக் கஞ்சிக்கென ஒதுக்கி வைத்துவிடுவார்கள். முதல் நாளிலிருந்தே ராபியா பக்கத்து வீடுகளுக்குச் சென்று உலக்கைகள், மாவு சல்லடைகள் உட்காரும் பலகை, மாவு வறுக்கும் ஓடு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்ப்பாள். ஒவ்வொன்றிலும் பத்து, பத்து வேண்டியிருக்கும். மறுநாள் அதிகாலையிலேயே பண்ணையார் முதல் நாளே சொல்லி வைத்திருந்து வரச்சொல்லியிருந்த கூலிப்பெண்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். அம்மாவும் பெரியம்மாவும் காலை மூன்று மணிக்கே எழுந்து அரிசியை அண்டாக்களில் கொட்டிக் களைய ஆரம்பிப்பார்கள். களைந்த அரிசியை நீர் வடிய கூடைகளில் அள்ளிப் போட்டுவிட்டு கழனித் தண்ணியை மாடுகளுக்கென்று குழுதாடியில் நிரப்பிவிட்டு மறுபடி மறுபடி அரிசி வெள்ளை வெளேரென மாறும்வரை களைந்து ஊறவைத்துவிடுவார்கள்.

றைமா பெரியம்மா, "ராபியா மாதிரி அரிசி பளீர் வெள்ளையா மாறணும்" என்று சொல்லி சிரிப்பாள். இவளுக்குப் பெரியம்மா சும்மா தனக்காகச் சொல்கிறாள் எனத் தோன்றும். இரவெல்லாம் அம்மாவைத் தூங்கவிடாமல் ராபியா கெஞ்சிக்கொண்டிருப்பாள். அரிசி களைய எழுந்திருக்கும்பொழுது தன்னையும் எழுப்பிவிடச் சொல்லி. அம்மா ஒத்துக்கொள்ள மாட்டாள். காலையில மூணு மணிக்கி எந்திரிச்சு என்ன செய்யப்போறே நீ என்று. அவளை றைமா பெரியம்மாதான் எழுப்பி விடுவாள்.

அதிகாலை ஐந்து மணிக்குப் பக்கத்து ஊர்களிலிருந்து கூலிக்கு வரும் பெண்கள் வெயில் வரும் முன் உலக்கையால் அரிசியைக் குத்த ஆரம்பிப்பார்கள். வீடெல்லாம் அதிரும். மூச்சை தம் பிடித்து நான்கு நான்கு பேராக இடிக்கத் துவங்க, மற்றவர்கள் சலிக்க ஆரம்பிப்பார்கள். சலித்த பச்சை மாவை முற்றத்தில் வெயில் இல்லாத இடத்தில் அடுப்பு மூட்டி ஒருத்தி வறுப்பாள். பிறகு வறுத்த மாவை அடுப்படிக்குள் பாயில் கொட்டி ஆறவைப்பார்கள். வீடே போர்க்களமாக மாறியிருக்கும். புகையும் தூசியும் கண்ணைப் பிழிந்தெடுக்க, வீட்டுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருப்பாள் ராபியா, பச்சை மாவை அள்ளித் தின்றுகொண்டு. வயித்துக்குப் பச்சை மாவு ஒத்துக்கொள்ளாது என்று அம்மா அவளை அதட்டியதும், வறுத்த மாவைத் தின்றுகொண்டிருப்பாள். வீட்டில் ஒவ்வொருவருக்கும் செய்ய ஒரு வேலை இருந்து கொண்டேயிருக்கும். அத்தனை கூலிப் பெண்களுக்கு மத்தியில் மாவு இடிக்கவரும் ஒரே ஆண் சாத்தப்பன் மட்டும்தான். அவனைப் பார்த்தால் பெண் மாதிரிதான் தெரியும் இவளுக்கு. தனது உடம்பைப் பெண்ணைப் போலவே அசைத்து மாவு இடித்தபடி இடையிடையே பாட்டுப்படித்து ஆடிக்காட்டி எல்லோருக்கும் உற்சாக மூட்டுவான்.

சாயங்காலம்வரை நடந்துகொண்டிருக்கும் வேலைகளுக்கிடையில் அதிரசம் சுடுவதற்காக மாவு கிண்டத் தயார் செய்வார்கள். அம்மாவும் பெரியம்மாவும். நோன்பில் ஆடிப்போகும் பாக்கிஹாவுக்கு அதிரசமும் வைத்து ஓதவேண்டும். வெல்லம் போட்ட அதிரசமாவும் சீனி போட்ட அதிரசமாவும் தனித்னியே கிண்டி, வேடு கட்டி அறைக்குள் வைப்பார்கள். சூடாக அதிரச மாவு தின்பதற்கு இவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதற்கும் அம்மா அதட்டுவாள், சீக்கிரம் உக்காரப்போறே என்று. வீடெங்கும் மாவுத்தூசியால் நிறைந்து போயிருக்கும் இவளும் மாவு இடிக்க வந்த பெண்களும் பெரியம்மா, அம்மா அத்தனை பேருடைய உருவமும் பார்க்கையிலேயே சிரிப்பு பொங்கும் இவளுக்கு.

தலைமுடி உடம்பெல்லாம் மாவு பூசி பூச்சாண்டியைப் போல இருக்கும். எவ்வளவு தட்டி விட்டாலும் தலைமுடி நரைத்தது போலிருப்பது போகாது. இக்கோலத்தோடு தெருவில் போய் தன்னைத் தன்தோழிகளிடம் காட்ட ஆசைதான் என்றாலும் அன்றைய நாள் முழுக்க வீட்டுக் கதவு பூட்டப்பட்டே இருக்கும், வெளியாட்கள் உள்ளே வர முடியாதபடிக்கு. அம்மா சொல்வாள் "யாராவது இத்தனை மாவு காயிறதைப் பார்த்தால் திருஷ்டி வெச்சிடுவாங்க" என்று.

அதன் பிறகு வீடெல்லாம் கழுவி முடித்து அவர்களுக்குக் கூலியைக் கொடுத்து அனுப்பிவிட்டு இவர்களும் குளித்து முடிக்க இரவாகிவிடும். அன்று மட்டும் அத்தாவும் பெரியத்தாவும் சாப்பிட வீட்டுக்கு வராமல் கடையிலிருந்துகொண்டு கேட்டு அனுப்புவார்கள். இரவெல்லாம் கால் வலி தாங்காமல் அம்மாவும் பெரியம்மாவும் முனகிக்கொண்டிருப்பார்கள். இவளுக்குக் கஷ்டமாக இருக்கும். "எதுக்காக இவ்வளவு பாடுபட்டு மாவு இடிக்கணும்" என்று அம்மாவிடம் கேட்பாள்.

"நோன்பு திறந்திட்டு ஆம்பளைங்களுக்கு சாப்பிட இடியாப்பம் சுடணும் இல்லெ அதுக்காகத்தான்" என்பாள் அம்மா.

ரம்ஜான் மாதம் ஆரம்பமாவதற்கு முதல் மாதத்திலேயே அனேகமாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாவு இடிக்கும் ஓசை ஒருவித ராகத்துடன் ஊரெங்கும் சுற்றிச் சுற்றி ஒலித்தபடி இருக்கும், ரம்ஜானை வரவேற்கத் தயாராக.

அவர்கள் நெடுநேரமாகவே வானை அண்ணாந்து பார்த்து சோர்ந்து போய்விட்டார்கள். பிறை தெரிந்தவுடன்தான் சஹருக்கான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும். வீட்டில் சமைக்க ஆரம்பிக்க, இவள்தான் கடைக்குப் போய் வாழைப்பழமும் முட்டையும் வாங்கி வர வேண்டும், சஹருக்காக.

ராபியா அலுப்புடனும் வருத்தத்துடனும் எழுந்துகொண்டு பாவாடையின் பின்புறத்தைத் தட்டி மணலை உதிரச் செய்தாள். "நான் சாப்பிடப்போறேன், பசிக்குது" என்று மதினாவிடம் சொன்னபடி நடக்க ஆரம்பித்தாள். "அப்ப பிறை வந்த விபரம் ரேடியோவுல கேட்டு சொல்லுவ இல்ல" - பின்னாடியிருந்து கத்தினாள் மதினா.

அவள் தன்னிடம் மதிப்பு வைத்துக் கேட்டது ராபியாவுக்குத் தாங்க முடியாத சந்தோஷத்தை உண்டாக்க, மற்ற பிள்ளைகளுக்கு மத்தியில் தான் ஒரு முக்கியமான ஆளாக இருப்பதுபோல உணர்ந்தாள். அதுவும் பக்கத்தில் அஹமது வேறு இருந்தான்.

"ஓ, சொல்றேன்" என்றாள் கர்வமாக. அஹமது தன்பாட்டுக்கு இருக்காமல், "நீ என்ன சொல்றது. இன்னும் கொஞ்ச நேரத்துல பள்ளிவாசல் மைக்குல மோதினார் பாவா சொல்லிருவாருல்ல, சும்மா எம்முன்னால பீத்திக்கிறான்" என்று.

மதினாவுக்கும், ராபியாவுக்கும் அவன் பேச்சு கடும் கோபத்தை உண்டுபண்ணினாலும் பதில் சொல்லாமல் வீட்டை நோக்கிப் போகத் துவங்கினார்கள்.

முதல் நோன்பு என்பதால் ராபியாவும் மதினாவும் நோன்பு வைத்திருந்தார்கள். அவர்களால் முப்பது நோன்பும் வைக்க முடியாது என்பதால், முதலாவது பதினைந்தாவது, இருபத்தி ஏழாவது, முப்பதாவது என்று விசேஷமான நோன்புகளைத்தான் வீட்டில் வைக்க அனுமதிப்பார்கள். காலையில் சாப்பிடும் வேலையும் இல்லை மதரஸாவும் இல்லை என்பதால் அவர்களிருவரும் சீக்கிரமாகவே ஸ்கூலுக்கு வந்துவிட்டார்கள், உமா இனிமேல்தான் வருவாள். பள்ளிக்கு இன்னும் ஒரு ஆசிரியர்கூட வந்திருக்கவில்லை. பள்ளியே வெறிச்சோடிக் கிடந்தது. வகுப்பறைக்கு வெளியில் பின்புறமாக இருந்த மாமர நிழலில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். தரையோடு தாழ்ந்திருந்த கிளையில் தாவி ஏறி உட்கார்ந்த ராபியாவுக்கு, அம்மா இதைப் பார்த்தால் என்ன சொல்வாள் என்பது ஞாபகத்துக்கு வந்து சிரிப்புண்டாக்கியது. தனக்குள் சிரித்தபடி தான் அணிந்திருந்த பச்சை நிற சீருடையின் பின்பகுதியை லேசாகக் கை வைத்து அழுத்திப்பார்த்தாள். பிறகு மன நிம்மதியோடு கையை எடுத்து மரக்கிளையின் மீது வைத்து அதனை மெதுவாக ஆட்டிவிட்டுக்கொண்டாள். இவளைத் தொடர்ந்து மரக்கிளையில் ஏறி உட்கார்ந்த மதினா இவளது செயலின் அர்த்தம் புரியாமல் ராபியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவளது வட்ட முகம் ஏதோ கவலையினால் இருப்பது போலத் தோன்றிற்று.

"ஏன் ராபியா, இன்னைக்கு உங்க வீட்டுல ஸஹருக்கு என்ன சாப்பாடு?" என்றாள் மதினா.

சிறிது நேரம் யோசனை செய்வது போலிருந்துவிட்டு, "முதல் ஸஹருல்ல? அதனால பருப்பானமும். கறியும்தான்" என்றவள், "உங்க வீட்டுல" என்றாள்.

"எங்க வீட்டுலயும்தான்" என்ற மதினா, "நீ எத்தினி மணிக்கு எந்திரிச்சே சாஹர் நேரம்?" என்றாள்.

"நான் மூணுமணிக்கே எந்திரிச்சிட்டேன் தெரியுமா" என்றாள் ராபியா பெருமையாக. "சஹர் பொஸார நீ பாக்கலையா என்ன?" என்றாள்.

"ப்சி, நான் நாலுமணிக்குத்தான்" என்றாள் வருத்தத்துடன் மதினா. "ஆமா அப்பவே முழிச்சு என்ன செய்வியாம்?"

"எங்க அம்மா இரண்டரை மணிக்கே அலாரம் வச்சு எழுந்திரிச்சுருவாங்க, அந்த சத்தத்துல நானும் எழுந்திரிச்சிருவேன் இல்ல."

"அப்பவே எழுந்திரிச்சு உங்கம்மா என்ன செய்வாங்க?" கண்களை அகலத் திறந்து ஆச்சர்யமாகக் கேட்டாள் மதினா.

"அப்ப எழுந்தாத்தானே சரியா இருக்கும்? முதல்ல அடுப்பு மூட்டி சோறு ஆக்குவாங்க. சோறு வேகுறப்போ ஏலுச் செய்துட்டு தஜஜ்ஜத் தொழுவாங்க. அப்புறம் மத்த வேலைகளப் பாக்கறதுக்குள்ள நாலு மணி ஆயிரும் இல்ல" என்று தான் பார்த்தவற்றைப் பெரிய மனுஷத்தன்மையுடன் விவரித்தாள் ராபியா.

கொஞ்ச நேரம் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. மதினாவுக்கு ஆதங்கமாக இருந்தது, சஹர் முஸாபரைப் பார்க்க முடியவில்லையே என்று. காற்று இதமாக வீசியது. மாமரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்து தரையில் விழுவதைக் கவனித்துக்கொண்டிருந்த ராபியா திடீரென நினைவு வந்ததுபோல, "ஆமா நீ வீட்டுப்பாடம் எழுதிட்டியா?" என்றாள்.

"இல்லை" அலட்சியமாக பதில் சொன்னாள் மதினா.

"ஏன், சார் அடிக்க மாட்டாங்க?" தன் பயத்தை வெளிப்படுத்தினாள் ராபியா.

"நான்தான் நோன்பு வச்சிருக்கேன் இல்ல, சார் அடிக்க மாட்டாங்களே" என்ற மதினா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க அவளோடு சேர்ந்துகொண்டாள் ராபியாவும்.

ரம்ஜான் மாதத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் சிறு சலுகை ஆசிரியர்கள் யாரும் அடிக்கமாட்டார்கள் என்பதுதான். அந்தப் பெருமை எல்லாக் குழந்தைகளுக்குமே உண்டு.

மதினாவின் தலையில் செல்லமாகக் குட்டிய ராபியா, "நீ சரியான ஆளு" என்றவளின் குரலில், தான் மட்டும் வீட்டுப்பாடத்தைக் கை வலிக்க எழுதி விட்டோமே என்கிற ஆதங்கம் நிறையவே இருந்தது.

- தொடரும்

nantri - Ulagathamizh

No comments: